Sunday, December 5, 2010

மகாபாரதமும் இரட்டை ஒழுக்கமும் (கடிதம்- 3)

"மகாபாரதமும் இரட்டை ஒழுக்கமும்"
கடிதம் - 3 (கணையாழி-ஜூன் 1989)

ஜனரஞ்சக சினிமாக்காரர்களின் கையில் இந்த இதிகாசங்கள் எந்த அளவுக்கு மலினப் படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றி நான் இங்கு எந்தவித சர்ச்சையும் எழுப்பப் போவதில்லை. சர்ச்சை மகபாரதத்தைப் பற்றியதேதான். இரட்டை ஒழுக்கம் (Double Standard) என்பது இன்றைய சமூக சுழ்நிலையில் வெகு சகஜமாக அடிபடும் வார்த்தை. அது மகாபாரத காலத்து நியாங்களுக்கும் விதிவிலக்கில்லை என்று தோன்றுகிறது.

உதாரணத்துக்கு , இந்த கங்கை விவகாரமும் கம்ஸன் விவகாரமும். பிறக்கப் பிறக்க வரிசையாய்க் குழந்தைகளை, இரக்கமின்றி ஆற்றில் வீசி அநியாயமாய்க் கொல்கிறாள் கங்கை. கடைசியில் சாப விமோசனம் என்று சொல்லி விடுகிறார்கள். கம்சனும் வரிசையாய்க் குழந்தைகளைச் சுவரில் அறைந்து கொல்கிறான். முன்னவள் செய்த ' சிசு ஹத்தி', சாப விமோசனமாய்ப் போக, பின்னவள் செய்தது மட்டும் பாவமாய்ப் போய்விடுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் கம்ஸன் செய்த சிசுக் கொலைகள் (Infanticide) தற்காப்பின் காரணமாய்ச் செய்யப் பட்டதால் அவனைக் கூட மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது. கங்கையை எவிதம் மன்னிப்பது? ஆனால் வேடிக்கை என்னவென்றால், கங்கை தேவதை ஆகிறாள்; கம்சன் அசுரன் ஆகிறான்.


இன்னொரு இடம்: யமுனைக் கரையில் யாதவப் பெண்களைத் துகில் உரிந்து சந்தோஷப் படுகிறான் கிருஷ்ணன். அதே கிருஷ்ணன் , கௌரவர் சபையில் துச்சாதனன் துரௌபதியைத் துகில் உரிகிற போது, நீள நீளமாய்ப் புடவைகளை விநியோகம் பண்ணுகிறான். வழக்கம் போலவே கிருஷ்ணன் தேவன் ஆகிறான். துச்சாதனன் அசுரன் ஆகிறான். பல சமயங்களில், கிருஷ்ணன் திரௌபதிக்கு உபகாரம் பண்ணினான் என்பதை விட, தனது பழைய யமுனைக் கரை விஷமத்துக்குப் பரிகாரம் பண்ணினான் என்று கூடத் தோன்றுகிறது.