Thursday, October 27, 2011

“கவியா, மகா கவியா?” - சந்தேகம் தெளிவித்த படலம்!

“சார், நமஸ்காரம். ஒரு சின்ன சந்தேகம்.பாரதியார் வெறும் கவியா, மஹா கவியா?
“கொஞ்சம் ,பொறுங்கள்..ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன்!
“காந்தி வெறும் ஆத்மாவா, மகாத்மாவா?
“கொஞ்சம் இருங்கள், ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன்!
சரி இதையாவது சொல்லுங்கள்..பாரதியார் பிறப்பதற்குச் சில வருஷங்களுக்கு முன்னால் வரை வாழ்ந்தாரே, மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை... அவர் வெறும் வித்வானா, மகாவித்வானா?
இருங்கள், இதையும் ஜெயமோகனிடமே கேட்டுச் சொல்லி விடுகிறேன்!
“என்ன சார் இது, நீங்கள் எது கேட்டாலும் ‘ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன், ‘ஜெயமோகனிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றே சொல்கிறீர்கள்..அது சரி, யார் இந்த ஜெயமோகன்?
“பாரதியாரை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால் ஜெயமோகனைத் தெரியவில்லை உங்களுக்கு..இது தமிழர்கள் செய்த துர்ப்பாக்கியம் தான்..பாரதியார் மகாகவி இல்லை என்று சொன்னவரே இந்த ஜெயமோகன் தான் சார்..
“அப்படியா, பாரதியார் மகாகவியாய் இருப்பதில் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை?”
“அதையும் ஜெயமோகனிடம் தான் கேட்க வேண்டும்..
“வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷிப் பட்டம் பெற வேண்டி விஸ்வாமித்திரர் தான், கஷ்டப்பட்டு அலைந்ததாய்ப் படிதிருக்கிறேன்.. ஆனால்,வசிஷ்டரின் ப்ரும்மரிஷிப் பட்டத்தையே ஒரு விஸ்வாமித்திரர் ரத்து செய்த கதை இப்போது தான் கேள்விப் படுகிறேன்..சரி.. இன்னும் நீங்கள் எனக்கு இந்த ஜெயமோகன் யார் என்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்கள்...அவர் என்ன நிறையத் தெரிந்த பண்டிதரா?
“சாதாரணப் பண்டிதர் இல்லை சுவாமி..மஹா பண்டிதர்..
“ஜெய மோகனை இப்படி மஹா பண்டிதர் என்று யார் சொன்னது?
“ஏன் ஜெயமோகனே சொல்கிறாரே..வேறு என்ன அத்தாட்சி வேண்டும் உமக்கு!