Sunday, May 13, 2012








தூங்கும் வரம் தா..
       
      *


தூக்கம் தொலைந்து போன                  

இப்போதைய இரவுகள் 

பயமின்றித் தூங்கிய 

பழைய இரவுகளை

வெற்றுக் கனவுகளாய் மாற்றி

வேடிக்கை பார்க்கின்றன

கனவுகள் 

தூக்கத்தில் தான் வரவேண்டும்

என்ற கட்டாயமா என்ன

தூக்கமே கனவான ஒருவனுக்கு?

               
               ---------------



Friday, May 4, 2012

மணிமேகலையின் கண்ணீர்-(நாடகம்:கணையாழி வெள்ளி விழா மலரில் (1990) வெளியானது)


                                                                                  .
ரங்கத்தின் நடுவிலிருந்து ஒருவன் பயத்துடனும் பரபரப்புடனும் மேடைக்கு ஓடி வருகிறான். உடம்பு இறைக்கிறது. ஆயாசத்துடன் பெஞ்சில் அமர்கிறான். கையில் புத்தகங்கள் திணித்த பழைய பை இருக்கிறது. அது அந்த அவசரத்தில் கீழே விழுந்து சிதறுகிறது. அதைப் பொறுக்க சக்தி இன்றி, உடம்பு இறைக்க, நின்று பார்க்கிறான். பிறகு, குனிந்து மெதுவாய் ஒவ்வொரு புத்தகமாய்ப் பொறுக்கித் தூசி தட்டுகிறான். இருமுறை இருமுகிறான். தோளில் தொங்குகிற குடுவையிலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். கடைசி சொட்டுக்குப் பின்னும், அதிலிருந்து நீர் வராதா என்று ஏங்குகிற மாதிரி, அதை வாய்க்கு நேராகக் கவிழ்த்தபடி நிற்கிறான்.

பின்னால் இரண்டு பெண்கள் சிரிக்கிற குரல் மட்டும் கேட்கிறது. வெள்ளைத் துணியில் சட்டென்று கைகொட்டி ஆரவாரிக்கும் தோற்றத்தில் சில நிழல்கள் மறைந்து போகின்றன. தொடர்ந்து நிசப்தம் நிலவுகிறது. பின் மேடையில் வெளிச்சம் பரவுகிறது. மங்கலான வெளிச்சம். அவன் ஒரு காலை ஒரு கையால் கட்டிக் கொண்டு உட்கார்ந்து, மாறி மாறிப் புத்தகங்களைப் புரட்டுகிறான். திடீரென்று அவனுக்கு விக்குகிறது. விக்கல் பெரிதாகிப் பெரிதாகி வளர அதே கதியில் தபேலாவின் ஒலி சிறிது சிரிதாய்ப் பின்னணியில் பெரிதாகி ஒலித்து அடங்குகிறது. மறுபடியும் அவன் தண்ணீர்க் குடுவையை எடுத்து வாய்க்கு மேல் கவிழ்க்கிறான். ஒரே ஒரு சொட்டு மாத்திரம் விழுகிறது. மீண்டும் மேடையில் வெளிச்சம் மங்குகிறது. பின்னால், வெள்ளைத் திரையில் நிழல்கள் தோன்றி பழைய படியே சிரித்து எக்காளமிடுகின்றன. அவன் சோர்ந்த நிலையில் நாலைந்து புத்தகங்களைத் தலைக்கு அணை கொடுத்து பெஞ்சில் படுத்துக் கொள்கிறான். இப்போது வயலினிலிருந்து நடுக்கமான சுருதிகள் மெல்லப் பரவுகின்றன.

(பின்னணியில்) மூன்று குரல்கள்: (நகைப்புடன்) அதென்ன அட்சய பாத்திரமா, கவுக்கக் கவுக்கப் பெருகி வரத்துக்கு!

(அவன் திரும்பிப் பார்க்கிறான். குரல்கள் சட்டென்று தேய்ந்து போகின்றன. அவன், திடுக்கிட்டு எழுந்து, உட்கார்ந்து தலைக்கு அணை கொடுத்திருந்த புத்தகங்களை எடுத்து எதையோ தேடுகிறான். ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறான். ஒரு குறிப்பிட்ட பக்கம் கிடைத்தவுடன், சற்று நிதானித்து, சோர்வு மிக்க குரலில் படிக்கிறான்.)

அவன்: "மண்டிணி ஞாலம் எங்கும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.."

(திரும்பத் திரும்ப உண்டி கொடுத்தோர் கொடுத்தோரே .." என்கிற வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.)

(அரங்கில் மீண்டும் இருள் பரவுகிறது. கலீர்..கலீர்.. என்று சலங்கைச் சத்தம் கேட்கிறது. பின்னால் வெண் திரையில் மூன்று நிழல்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொணடு ஓடுகின்றன. இரண்டு பெண்கள் சிரிப்பது கேட்கிறது. தொடர்ந்து ஒரு பெண் குரல் விசும்புகிற சத்தம். அழுகை தேய்ந்து, சிரிப்புகள் மேலே எழும்புகின்றன. மறுபடியும், அழுகை ஒலி எழும்பி மெல்லத் தேய்கிறது. விளக்குகள் அணைகின்றன. இப்போது சுருதிப் பெட்டியிலிருந்து சுருதிகள் கிளம்பி வருகின்றன.)

குரல்: (சுருதியோடு இணைந்து)
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன சம்பவ
யக்ஞாத் பவந்தி பர்ஜன்யோ
யக்ஞ: கர்ம சமுத்பவ...

இன்னொரு குரல்: அன்னம் பிரம்மா உபாசதே..
அன்னம் பிரம்மா உபாசதே..

குரல்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...

குரல்கள்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...
(மீண்டும் ஒரு முறை)

(பின்னால் மறுபடியும் சிரிக்கிற குரல்கள்... தொடர்ந்து அழுகிற குரல்..மாறி மாறிச் சலங்கை சப்தங்களுடன் நிழல்கள் வெள்ளைத் திரையில் ஒன்றை ஒன்றை துரத்திக் கொண்டு ஓடுகின்றன. சட்டென்று நிசப்தம். மேடையில் சில நொடிகள் இருள். பின் வெளிச்சம் வருகிற போது அவன் புத்தகங்களுக்கிடையே மல்லாக்கக் கிடந்தபடி முனகுகிறான்.)

பசி...பசி...தாகம்..பசி...பசி...

(பின்னால் நிறையக் குரல்கள் பசி..பசி..என்று எதிரொலிக்கின்றன.)

(மறுபடியும் பெண்களின் சிரிப்பொலி சலங்கைச் சப்தம் கேட்கிறது. அரங்கை இருள் சூழ்கிறது. பசி முனகல் மெல்ல வருகிறது. ஒளி ஒரு பக்கம் மட்டும் குவிகிறது. சிவப்பு ஆடையுடன் விரித்த தலையுடன் ஒற்றைச் சிலம்புடன் ஒரு பெண் நடந்து வருகிறாள். இவள் பார்வையாளர்களுக்கு முதுகு காட்டியபடி, மேடையின் விளிம்பில் ஆரம்பித்து, பின் திரை வரை 'திம் திம்' என்று சப்தம் எழுப்பி நடக்கிறாள். திரையை அடைந்ததும், அங்கேயே இடுப்பில் கை ஊன்றி நிற்கிறாள். இந்த சமயம், மேடையின் மறுபுறம் ஒளி குவிகிறது. இதே தோற்றத்தில் விரித்த தலையோடு இன்னொரு பெண் கையில் ஒரு குறுவாளுடன், பார்வையாளருக்கு முதுகு காட்டி அதே 'திம் திம்' ஒலியுடன் நடந்து சென்று- பின் திரைக்கு அருகில் நின்று கொள்கிறாள். இப்போது, ஒளி அவன் மீது குவிகிறது. அவன் இருபுறமும் மாறி மாறி அவர்களைப் பார்க்கிறான். அவர்களின் முகம் அவனுக்குப் புலப்படுவதில்லை. திடீரென்று வயிற்றைப் பிடித்துக் கொள்கிறான். பசி..தாகம்..என்று முனகுகிறான்.)

(இடது புறத்துப் பெண் சிரிக்கிறாள்)

அவன்: (கோபத்துடன் திரும்பிப் பார்த்து) என்ன சிரிப்பு?

இடப்புறத்துப் பெண்: (இரைந்த குரலில்)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை...

(தொடர்ந்து ஜோ..ஜோ..என்று குரல் எழுப்பி, கைகளை உயர்த்தி மழை பெய்கிற மாதிரி அபிநயிக்கிறாள்.)

அவன்: (மழை எதுவும் காணாமல், நாக்கைத் துருத்தி, நாலா புறமும் முகத்தைத் திருப்பித் தவிக்கிறான். பின், வலது புறத்துப் பெண்ணைப் பார்த்து) நீ யாரம்மா?

(வலது புறத்துப் பெண், இப்போது சட்டென்று கை கால்கள் எல்லாம் அதிர விஸ்வரூபம் எடுப்பது போல் அபிநயித்து நிற்கிறாள்.)

வலது புறத்துப் பெண்: எங்கே துரியோதன
துச்சாதன ரத்தம் பீமா?
கொண்டு வா, இங்கே ஒரு குடம்!
இது எந்த ரத்தம்?
தலை ரத்தமா? தொடை ரத்தமா?
எந்த ரத்தமாய் இருந்தால் என்ன?
எந்தப் பகுதி ரத்தமும் இந்த நிறம் தானே?
கொட்டு என் தலையில்..
கூந்தலை முடிந்து எத்தனை நாளாயிற்று?

(சட்டென்று மேடையில் சிவப்பு ஒளி பரவி வருகிறது. யுத்த முரசு பின்னணியில் ஏழெட்டு முறை அதிர்ந்து ஓய்கிறது.)

அவன்: யாரு நீங்க ரெண்டு பேரும்? இப்ப எனக்குப் பசிக்குது. சோறு இருக்கா உங்க கையிலே..?

வலது புறத்துப் பெண்: ரத்தம் வைத்திருக்கிறேன் வேண்டுமா? என் குழலில் பூசியது போக எஞ்சிய ரத்தம். துரியோதனின் தொடையிலிருந்து பீமன் கதை உறிஞ்சி எடுத்த ரத்தம். ஒன்பதாயிரம் வருஷம் போயும் இன்னும் உறையாத ரத்தம்.

(இரு பெண்களும் இப்போது, தபேலாவின் ஜதிகளுக்கு ஏற்பக் கால்களைப் பரப்பி நடனம் ஆடிக் கொண்டே, இடம் மாறி நிற்கிறார்கள்.)

(மனிதன் இப்போது எழுந்து, அவர்கள் இருவருக்கும் நடுவில் மண்டியிட்டு நின்று ஆகாயத்தைப் பார்த்துக் கைகளை நீட்டுகிறான்.)

மனிதன்: சக்தீ, சக்தீ, சக்தீ..
என் முன்னால் வா..
என் பசி தீர, சக்தீ வா.
என் தாகம் தீர, சக்தீ வா..
எனது சக்தியை எனக்கு மீட்டளிக்க
சக்தீ, சக்தீ..
நீ எங்கிருந்தாலும் வா..

(அந்த இரண்டு பெண்களும் சிரிக்கிறார்கள்)

அவன்: (திரும்பி, கோபமாய்) ஏன் சிரிக்கிறீங்க?

இரு பெண்களும்: நாங்களே சக்திகள்..எங்களை முன்னால் வைத்துக் கொண்டு, எங்கோ முறையிடுகிறாயே?சிரிக்காமல் என்ன செய்வது?

(அவன் மெல்லத் தலை குனிகிறான். ஒளி மங்குகிறது. தபேலாவின் ஜதிகள் மறுபடியும் மெல்ல ஆரம்பித்துப் பெரிதாகக் கேட்கின்றன.
இடது புறத்திலிருந்து மூன்று உருவங்கள் துப்பட்டியைப் போர்த்திக் கொண்டு மெதுவாய் மேடையில் பிரவேசிக்கின்றன. அவர்களின் முகங்கள் அந்தப் பெண்களின் பக்கம் திரும்பி இருக்கின்றன.)

முதல் ஆள்: (முதுகைக் கூனி நடந்து கொண்டே) பசிக்குச் சோறு தருவியா?

இரண்டாம் ஆள்: தாகத்துக்குத் தண்ணி தருவியா?

மூன்றாம் ஆள்: நோய்க்கு மருந்து தருவியா?

(மூவரும் இருளில் மறைகிறார்கள். அந்த இரு பெண்களும், கால்களை வீசி அபிநயத்தோடு அசைந்து மறுபடியும் இடம் மாறுகிறார்கள்.)

இடது புறத்துப் பெண்: (சட்டென்று திரும்பி) நான் கற்புக்கரசி.

வலது புறத்துப் பெண்: (அவ்விதமே திரும்பி) நான் காவல் தெய்வம்.

இடது புறத்துப் பெண்: நான் காவிய நாயகி.

வலது புறத்துப் பெண்: நான் இதிகாசத் தலைவி.

இடது புறத்துப் பெண்: நான் கண்ணகி!

வலது புறத்துப் பெண்: நான் திரௌபதி!

இடது புறத்துப் பெண்: நானே சக்தி!
.
வலது புறத்துப் பெண்: நானே சக்தி...!

அவன்: (தடுமாறிய குரலில்)
நான் மனிதன்.
பசி நிறைந்த மனிதன்.
தாகம் நிறைந்த மனிதன்.
சக்திக்காக ஏங்குகிற மனிதன்.

(இப்போது பின்னணியில் சுருதிப் பெட்டியிலிருந்து ரீங்காரமாய ஒலி வருகிறது. மிருதங்கம் விட்டு விட்டு மென்மையாய் சப்திக்கிறது. மேடையில் ஒளி மங்கி மறுபடியும் பரவி விகசிக்கிறது.)

கண்ணகி: (தரையைச் சட்டமாய் மிதித்து மிதித்து நடந்து வந்து அவன் முன் நிற்கிறாள்.) நானே கண்ணகி. ஒற்றைச் சிலம்பு என் அடையாளம்.

திரௌபதியும் முன்னால் வந்து: நானே திரௌபதி. ரத்தக் கூந்தல் என் அடையாளம்

அவன்: (குனிந்த தலையுடன்)

நான் மனிதன்.
சாதாரண மனிதன்.
பசி என் அடையாளம்.
துக்கம் என் அடையாளம்.
நோய் என் அடையாளம்.

கண்ணகி: உன்னை நான் பசி அற்றவன் ஆக்குகிறேன்.

மனிதன்: (ஆச்சரியத்துடன்) எப்படி?

கண்ணகி: என்னை நம்பி விருத்தம் இரு!

மனிதன்: ஐயோ..பசியைத் தீர்க்க உபாயம் கேட்டால் பட்டினி கிடக்கச் சொல்கிறாயே..நாங்கள் தினமும் அதைத் தானே செய்கிறோம்?

திரௌபதி: உன் துக்கத்தை நான் தீர்த்து வைக்கிறேன்.

மனிதன்: எப்படி?

திரௌபதி: என் பெயரைச் சொல்லிக் கொண்டு நெருப்பின் மேல் நட!

(அவன், ஆ..ஆ.. என்று முனகிக் கொண்டு, ஒரு காலால் நொண்டியபடி, நெருப்பின் மேல் நடப்பது போல பாவனை செய்து, தடுமாறிக் கீழே விழுகிறான். பின்னணியில் தாரை தப்பட்டை ஒலிகள கர்ண கடூரமாய்க் கேட்கின்றன.)

அவன்: ஐயோ..நாங்கள் என்றைக்குப் பன்னீரில் நடந்தோம், புதிதாய்த் தீயில் நடக்க? ஆ..ஆ..

திரௌபதி: ஓ..நெருப்பு! எனக்கு மிகவும் வஸ்து...

(திடீரென்று அரங்கில் இருள் நிறைகிறது. பின்னணியில், சிவப்பாய் நெருப்பு எரிகிறது. மனிதர்களின் அலறலும் ஓலமும் கேட்கின்றன.)

(கண்ணகியும் திரௌபதியும் மாறி மாறிச் சிரித்து விட்டுப் பாடுகின்றனர்.)

பாட்டு: எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ...தீ...இந்நேரம்!
பங்கமுற்றே பேய்களோடப்
பாயுதே தீ தீ .. இந்நேரம்!

கண்ணகி: இந்த நெருப்பு என் நெஞ்சிலிருந்து புறப்பட்ட நெருப்பு. மதுரை எரிகிற நெருப்பு.

திரௌபதி: இந்த நெருப்பு என் சொல்லிலிருந்து புறப்பட்ட நெருப்பு. குருட்சேத்திரத்துப் பிணங்களின் சிதைகளுக்கு மூட்டிய நெருப்பு.

(பின்னணியில் மறுபடியும் ஓலங்கள் கிளம்பி, சட்டென்று நிசப்தம் பரவுகிறது. மனிதன் காதுகளைப் பொத்தியபடி பின் வாங்குகிறான்.)

மனிதன்: (கைகளை ஆட்டி)

இல்லை..இல்லை... நீங்கள் சக்திகள் இல்லை..நீங்கள் கொலைகாரிகள்.

கண்ணகி: முட்டாள், நாங்கள் செய்தது கொலை இல்லை.

திரௌபதி: (அபிநயத்தோடு) சம்ஹாரம்!

கண்ணகி: நீ செய்தால் கொலை. நான் செய்தால் சம்ஹாரம்.

திரௌபதி: கொலை வேறு; சம்ஹாரம் வேறு!

கண்ணகி: பட்டினி வேறு; விரதம் வேறு!

திரௌபதி: தூக்கம் வேறு; தியானம் வேறு!

மனிதன்: எல்லாம் வேறு..வேறு.. சொல் வேறு, பதம் வேறா? இதென்ன குழப்பம்? வேண்டாம் பெண்களே..போங்க, போங்க. நீங்க ஆபத்தானவங்க.உங்களுக்கு நெருப்பை மூட்டத் தான் தெரியும்; அணைக்கத் தெரியாது.

(அவர்கள் கோபவேசமாய் அவன் மீது பாய்வது போல் பாவனை செய்ய அவன் அடி வயிற்றில் கை வைத்து அமர்கிறான்.)

மனிதன்: இங்கே தினமும் மூணு வேளையும் எரியற நெருப்பு? அதை அணைக்க சக்தி உண்டா உங்களுக்கு?

கண்ணகி: (கோபமாய்) துன்மார்க்கா!

திரௌபதி: துஷ்டா!

கண்ணகி: (சுழன்று கூத்தாடி)

மாநகர் மதுரையைக்
கணத்தில் எரித்தது,
எந்தப் பொறி?

திரௌபதி: (சுழன்று, கண்ணைக் காட்டி அபிநயித்து)
மங்கை நல்லாளின்
கண்ணில் கிளம்பிய
கற்புப் பொறி!

(மறுபடியும் சுழன்று)

கௌரவர் சேனையைக்
களத்தில் நசுக்கி, ரத்தக்
களரியாக்கியது, யார் சக்தி?

கண்ணகி: அவிழ்த்த கூந்தலை
முடிக்க எண்ணிய
அம்மையின் சக்தி!

மனிதன்: (கண்ணகியை நோக்கி)
உனக்கு முக்கியம், செத்துப் போன உன் புருஷன்.
(திரௌபதியை நோக்கி)
உனக்கு முக்கியம், அவிழ்த்துப் போட்ட ஒரு முழக் கூந்தல்.
அதற்குப் பலி அப்பாவி மக்கள்; அழகிய மாநகர்..
எருவுக்கும் ஆகாத செத்த மனித உடம்பு.
சவுரிக்கும் ஆகாத ஒரு முழக் கூந்தல்.
நாலு நாள் சீவாமல் விட்டால் பேன் குடியேறும் கூந்தல்.
இந்த உப்புப் பெறாத சாக்குகளின் மறைவில்,
மிருகத்தனமான பழி உணர்ச்சி.
வெஞ்சினம்; கொலை வெறி..
வெறும் வெறி..
வெறி..வெறி...

(குறுக்கும் நெடுக்குமாக உலவுகிறான்)

உங்களுக்கு வெறி.
எங்களுக்குப் பசி.
பசி-மனித குணம்.
வெறி-மிருக குணம்.
இதில், தெய்வ குணம் எது?
வெறியும் பசியும் தெய்வத்துக்கு வருமா?

(உடம்பு நடுங்க)

என் உடம்பு முழுக்கவும் உஷ்ணம் ஏறுது..
உங்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு.
என் கண் முன்னால் நிக்காதீங்க.
போங்க..போங்க..

(மனிதன் கத்துகிறான். கண்ணகியும் திரௌபதியும் சிரிக்கிறார்கள்.)

கண்ணகி: கோபப்படாதே, தம்பி! என்னைக் கொஞ்சம் கும்பிடேன்.

திரௌபதி: துக்கப்படாதே தம்பி! என் மேல் ஒரு துதிப் பாடல் பாடேன்.

மனிதன்: எனக்குக் கும்பிடவும் தெரியாது, துதிக்கவும் தெரியாது.

கண்ணகி, திரௌபதி: (இருவரும் சேர்ந்து வியப்போடு ஒரே குரலில்)

சற்று முன் மனிதன் என்று சொன்னாயே..இப்போது கும்பிடத் தெரியாது என்று சொல்கிறாயே? கும்பிடுவது ஒன்றைத் தவிர வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

திரௌபதி: (கம்பீரமாய் நின்று) எங்கே, நெடுஞ்சாண் கிடையாய்க் கீழே விழு பார்ப்போம்!

கண்ணகி: என்ன வேண்டுமோ கேள் தருகிறோம்.

மனிதன்: (தடுமாறி, சற்று யோசித்து) ஆகாரம் தருவீர்களா?

கண்ணகி(கைகளை உயர்த்தி): ஆசீர்வாதம் தருகிறோம்.

மனிதன்: உண்ண என்ன தருவீர்கள்?

திரௌபதி: ஆசீர்வாதம் தருகிறோம், மகனே! அதை உண்ணப் பழகிக் கொள்.

மனிதன்: (வயிற்றைப் பிடித்துக் கொண்டு) பசி...பசி...

திரௌபதி: (கண்ணகியிடம்) கண்ணகி! நம் சந்நிதியிலேயே இவன் பசி பசி என்று புலம்பி நம்மை அவமதிக்கிறானே..

கண்ணகி: அது தான் எனக்கும் ஆச்சரியம் தருகிறது..பசி என்ன இவனுக்குப் புதிதா? இத்தனை வருஷங்களில் அது அவனுக்குப் பழக்கமாகி இருக்க வேண்டுமே?

திரௌபதி: இல்லை. இவன் பொய் சொல்கிறான். அன்றைக்குக் கிருஷ்ணன் அட்சய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த எச்சில் பருக்கையைச் சாப்பிட்ட உடனேயே, உலகில் பசி ஓடிவிட்டது. அதற்கப்புறம், யாருக்கும் பசி எடுக்க வாய்ப்பே இல்லை.

மனிதன்: பசி...பசி...

(இப்போது இனிமையாய் மணிச் சத்தமும், தம்புரா சுருதிகளும் கேட்கின்றன. ஒரு பெண், தூய வெள்ளை உடையுடன் கையில், ஓர் அழகிய பாத்திரம் ஏந்தி நடந்து வருகிறாள்.)


புதிய பெண்: பசிப் பிணி என்னும் பாவி அது களைந்தோர்
இசைச்சொல் அளவைக்கு எந்நா இயலாது.

புத்தம் சரணம் கச்சாமி.
தர்மம் சரணம் கச்சாமி.
சங்கம் சரணம் கச்சாமி.

நீக்கமற நிறைந்திருக்கும் பசியே,
உணவால் உன்னைத் தொழுகிறேன்.
நீக்கமற நிறைந்திருக்கும் தாகமே,
நீரால் உன்னைத் தொழுகிறேன்.

(அவள் மெதுவாக நடந்து வந்து, நடுவில் நிற்கிறாள். மனிதன், சட்டென்று மண்டியிட்டுக் கை கூப்புகிறான்.)

மனிதன்: உன்னைப் பார்த்ததுமே என் பசியில் பாதி தேய்ந்து போனது. நீ யாரம்மா?

அவள்: கணக்கற்ற நூற்றாண்டுகளுக்கு முன் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் பொங்கி விழுங்கியது. அன்றைக்கே, அந்த உலக அறவியின் பசியும் துக்கமும் நோயும் கடலில் கரைந்திருக்கும் என்று நம்பினேன்.

எல்லாம் பொய்.

ஆபுத்திரனின் கதையும் பொய்.

அவன் அறியாமையால், அன்று கோமுகிப் பொய்கையில் விட்டெறிந்த அந்த அமுத சுரபிக்காகக் கணக்கற்ற நாட்கள் நான் மணிபல்லவத் தீவில் காத்திருந்ததும் பொய்.

(கண்ணகியும் திரௌபதியும் இகழ்ச்சியுடன் அவளை வட்டமிடுகின்றனர். மணிமேகலை தலை குனிந்து நிற்கிறாள்.)

மனிதன்: உலகுக்கு உணவூட்டினாய், நீயே சக்தி!
(அவளை நோக்கி) உன்னையே அர்ப்பணித்தாய், நீயே சக்தி!
பசித்த மனிதர் மனிதர் மத்தியில்-
பரிதி போல் வலம் வந்தாய், நீயே சக்தி!

(மணிமேகலை பாத்திரத்தால் முகத்தை மூடிக் கொள்கிறாள். கண்ணகியும் திரௌபதியும் அவளை நெருங்குகின்றனர்.)

திரௌபதி: யாரடி நீ.. ஏதடி, உனக்கு சக்தி?

கண்ணகி: ஊரைக் கொளுத்திப் பழக்கமுண்டா?

திரௌபதி: யுத்தம் எடுத்துப் பழக்கமுண்டா?

கண்ணகி: சிலம்பை உடைத்துப் பழக்கமுண்டா?

திரௌபதி: சபதம் எடுத்துப் பழக்கமுண்டா?

கண்ணகி: நெருப்பை மூட்டுவாயா?

திரௌபதி: ரத்தம் பூசுவாயா?

கண்ணகி: கணவனை அறிவாயா?

திரௌபதி: காதலை உணர்வாயா?

கண்ணகி: கனகவிசயன் உனக்காகக் கல் சுமப்பானாடி?

திரௌபதி: பூசாரி உனக்காகப் பூக்குழி இறங்குவானாடி?

கண்ணகி: கோயில் உண்டாடி, உனக்கு?

திரௌபதி: ஒரு குளமும் உண்டாடி, உனக்கு?

இருவரும்: (ஒரே குரலில்)

போடி..போடி...
மூளி...கோளி..பேடி...

(மணிமேகலையின் கண்களில் நீர் தளும்ம்புகிறது. பின்னணியில்,சோகமாய் ஓர் இசை மெல்ல ஒலிக்கிறது.)

மணிமேகலை: ஆபுத்திரனிடம் அட்சய பாத்திரத்தை இரவல் வாங்கினேன். ஆதிரை வீட்டு வாசலில் பிச்சைக்காரியாய் நின்றேன். ஆயிரமாயிரம் பேருக்கு அன்னம் வார்த்தேன். புத்த பூர்ணிமை வெளிச்சத்தில் புவிக்கு விடுமோட்சம் கிடைக்கும் என்று நம்பினேன்.

பூம்புகாரைக் கடல் கொண்டதேயன்றி, பசியையும் துக்கத்தையும் கடல் கொள்ளவில்லை.
அமுதசுரபியின் கனத்தை எத்தனை நாள் தாங்குவேன்? இதற்கு முடிவே இல்லையா?

மனிதன்: (ஓடிப்போய், அவள் முன் மண்டியிட்டு)
அம்மா தாயே...நீயே தெய்வம்...என்னைத் துன்பத்திலிருந்து காப்பாற்று

மணிமேகலை: (சோகம் நிறைந்த குரலில்)
என்ன யாரும் இனம் கண்டு கொள்ளவில்லை.
அமுதசுரபியைப் பறித்து ஆற்றில் எறிந்தீர்க்ள.
என்னையும் அடியோடு மறந்து போனீர்கள்.

மனிதன்: உனக்குப் பயமுறுத்தத் தெரியவில்லையே, அம்மா?
பயமுறுத்தினால் அல்லவா தெய்வமாப் பூசிப்போம்? பவ்யமா நின்னா எப்படி?
கண்ணகியையும் திரௌபதியையும் தெய்வமாக்கினோம்.மனிமேகலையைத் தூக்கிக் கடலில் எறிந்தோம்.

மணிமேகலை: ( கோபமாய்) புத்தரை என்ன செய்தீர்கள்?

மனிதன்: பத்திரமாய் இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஏற்றி அனுப்பிட்டோம்.எங்களுக்கு எதுக்கு அவங்கள்லாம்?

(கண்ணகியும் திரௌபதியும் இப்போது ஆக்ரோஷமாய்க் கூத்தாடுகிறார்கள்.)

(பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.)

தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
தாம்...தோம்...தக்கத்தோம்.
                 
அதிரட்டும் உலகம் யாவும்
எரியட்டும் செந்தீ எங்கும்
                                                                       
நாலாபுறமும் ஓங்காரம்
நடக்கட்டும் நம் சம்ஹாரம்

உடையட்டும் ரத்த ஓடை
உலகமே எங்கள் மேடை
                                                                                           
தாம்...தோம்...தக்கத்தோம்
தாம்...தோம்...தக்கத்தோம்
                                                                                               

(கண்ணகி சிலம்பை ஆவேசமாய் 'மீண்டும்' போட்டு உடைக்கிறாள். திரௌபதி விரித்த கூந்தலை முடிக்கிறாள்)

மனிதன்: (குரலில் வலுவிழந்து, மணிமேகலையைப் பார்த்து) அம்மா, அந்த அமுதசுரபியிலிருந்து என் பசிக்குச் சோறிடுவாயா? உன்னைத் தொழக் கூட எனக்குத் தெம்பில்லை.

மணிமேகலை: (கலங்கும் குரலில்) அமுத சுரபியில் சோறு என்றோ வற்றி விட்டது மகனே! இப்போது, இது நிறைய, ஆயிரமாயிரம் வருஷங்களாய் நான் அழுது அழுது நிரப்பிய கண்ணீர் மட்டுமே வற்றாமல் தேங்கி இருக்கிறது..அதைத் தீர்த்தமாய்த் தருவேன், கையேந்துவாயா?

(மணிமேகலை விம்மி விம்மி அழுகிறாள். கண்ணகியும் திரௌபதியும் பெரிதாய்ச் சிரித்து அபிநயங்களோடு பின்னால் கூத்தாடுகின்றனர். மனிதன் சோர்ந்து தரையில் சாய்கிறான்.)                    
*

(கணையாழி, ஆகஸ்ட் 1990)

(புகைப்படங்கள்: 1982-ஆம் ஆண்டு இந்நாடகம், நான் அப்போது பணி புரிந்த பள்ளியின்
ஆண்டு விழாவில் எனது இயக்கத்தில் குழந்தைகளைக் கொண்டு
நிகழ்த்தப் பட்டது. அதிலிருந்து இரண்டு காட்சிகள்)




                               
                 




















                         





















Wednesday, March 7, 2012


சுயதர்மம்
(டிசம்பர் 1976-ஆம் ஆண்டுக் 
கணையாழியில் வெளியான 
எனது நாடகம்)



(இடம்: பாஞ்சால தேசத்தை ஒட்டிய ஒரு புறநகர்ப் பூஞ்சோலை. அழகிய இளம் கீற்றுக்களால் வேயப்பட்டிருக்கும் ஓர் அமைதியான பர்ணசாலையின் மூங்கில் கதவுகளைத் திறந்து கொண்டு, அந்தணக் கோலத்தில் ஐந்து இளைஞர்கள் உள்ளே நுழைகிறார்கள். அவர்களுள் ஓரு வாளிப்பான, சற்றே அதிகம் சிவந்த வாலிபன் வனப்பு மிக்க நங்கை ஒருத்தியைக் கைப் பிடித்திருக்கிறான். பர்ணசலையின் முன் அங்கணம் வெறுமையாய் இருக்கிறது. பின் அங்கணத்தில் அவ்விளைஞர்களின் வயது முதிர்ந்த தாய் ஏதோ வேலையாய் இருக்கிற அரவம் ஓர் ஊகமாய்த் தெரிகிறது. மூத்த இளைஞன் கூடத்திலிருந்தே குரல் கொடுக்கிறான்.)

மூத்த இளைஞன்: அம்மா
,.. சீக்கிரம் இங்கே வந்து பாருங்கள்! ஓர் அற்புதப் பொருளைத் தம்பி தனஞ்சயன் கொண்டு வந்திருக்கிறான்.

தாயின் குரல்: (உள்ளிருந்தே) எந்த அற்புதங்களையும் ஆசைப்பாட்டோடு அனுபவித்து மகிழ்கிற பருவத்தை நான் தாண்டி விட்டேன் குழந்தைகளே! பாண்டு ராஜனோடு அந்தப் பேதைப் பெண் மாத்ரியை மாத்திரம் உயிரோடு கொளுத்தி விட்டு
, உத்தம மரபுகளை எல்லாம் புறக்கணித்துக்கொண்டு உயிரோடு இருக்கும் எனக்கு இன்னும் என்ன அற்புதம் மீதி இருக்கிறது? அப்பொருள் எதுவாய் இருந்தாலும் வழக்கப் படியே-அதை நீங்கள் ஐவருமே பகிர்ந்து உண்ணுங்கள்.

மூத்த இளைஞன்: அம்மா
, வந்து பார்க்காமலேயே என்ன வார்த்தை சொன்னீர்கள்? பார்த்தன் கொண்டு வந்திருப்பது உண்ணும் பொருள் இல்லை; அனுபவிக்கும் பொருள்!

குரல்: குழந்தாய்
, இந்தக் கிழவியோடு ஏன் வீணாய்ச் சொல்லாடுகிறாய்? உண்பதும் அனுபவிப்பதும் வேறு வேறு என்று நான் படித்ததில்லை. புலன்கள் அததற்குரிய சுவைகளை உண்பதின் மூலமே அவ்வவற்றின் ஸ்பரிசங்களை அனுபவிக்கின்றன. பாண்டு ராஜனைப் பறிகொடுத்த பின்னர்க் காலவரையின்றி ஒரு மூலையில் முடங்கிக் கைம்மையின் துன்பங்களை உண்டேநான் உயிர் வாழ்கிறேன்.

(இளம் பெண்ணைக் கைப் பிடித்திருக்கும் வாலிபன் பேசுகிறான்.)

வாலிபன்: அம்மா! நான் கொண்டு வந்திருப்பது ஓர் உயிருள்ள பொருள்.

குரல்: வேட்டைக்குச் செல்கிற க்ஷத்திரிய அரசர்கள் அழகிய விலங்குகளை உயிரோடு பிடித்து வந்து தம் அந்தப்புரப் பெண்களுக்கு விளையாடக் கொடுப்பது வழக்கம் தான். ஆனால்
, அரண்மனையைத் துறந்த உங்களுக்கு அந்தப்புர சுகம் ஏது? அர்ச்சுனா! என்ன விலங்கது? மானைக் கொண்டு வந்தாயா, மயிலைக் கொண்டு வந்தாயா?

அர்ச்சுனன்: ஓர் அழகிய பொன் மான்
; அதுவும் பெண் மான்!

குரல்: (பரபரப்போடு) ஐயோ
, பெண் மானா? மறுபடியும் உங்கள் தந்தை செய்த அதே பழைய தவற்றைச் செய்தீர்களா? மான்களின் பிணையைப் பிரித்தீர்களா? மான்கள் நம் வம்சத்தின் நாச காரணமான பழைய கதை உங்களுக்குத் தெரியாதா? (வெளியே வருகிறாள்)

மூ.இ.: தாயே
, இந்த மான் நம் வம்சத்துக்கு நாசமல்ல; மாறாய் அதன் விருத்திக்குக் கிட்டி இருக்கிற வரம்.(அந்தப் பெண்ணைச் சுட்டிக் காட்டி) இவள் பாஞ்சால ராஜன் துருபதனின் செல்வப் புதல்வி கிருஷ்ணை. தம்பி தனஞ்சயனை மணப்பதற்கென்றே, யாஜரின் வேள்வியில் கர்ப்ப வாசம் இன்றிப் பிறந்தவள். சுயம்வரத்தில் உச்சியில் சுழலும் மச்சத்தை அடித்து வீழ்த்தி நம் அர்ச்சுனன் இவளை வாகை கொண்டிருக்கிறான்.

தாய்: (முகமெல்லாம் சட்டென்று கலக்கம் நிறைய) ராஜ குமாரி! ஒரு பிள்ளை உன்னை அங்கே வில்லால் வெற்றி கொண்டு இன்னொரு பிள்ளை இங்கே சொல்லால் தோற்கக் கொடுத்தான். ஐயோ! அலங்காரமாய்ப் பேசியே பழகிப் போன இந்த அரச பரம்பரையும் கவிப் பரம்பரையும் பாழாய்ப் போகட்டும். ஒரு பெண்ணைப் பெண் என்று புரிந்துகொள்ளக் கூடச் சக்தி அற்றவளா நான்
? ஏன் இந்த வறண்ட, உயிரற்ற உவமைகள்? மகோன்னதமான மனிதப் பெண்களை இப்படி மானென்றும் மயிலென்றும்-வெறும் வாயற்ற அற்ப ஜந்துக்களோடு காலம் காலமாய் உவமை கொண்டாடிக் கடைசியில் இன்றைக்கு இந்த ஆண் சமூகம் பெரும் விபரீதத்தைத் தேடிக் கொண்டது.

(வியாச முனிவரும் கிருஷ்ணனும் வருகின்றனர்.)

வியாசர்: இந்த விபரீதம் தவிர்க்க முடியாதது
, குந்தி தேவி!

கிருஷ்: எனக்கும் விபரீதங்களுக்கும் அப்படி என்ன தோழமையோ
? நான் எங்கு போகிற போதும் அங்கு ஒரு விபரீதம் காத்து நிற்கிறது! (சிரிக்கிறான்)

(குந்தியும் பாண்டவர்களும் அவர்களை வரவேற்கின்றனர். கிருஷ்ணன் குந்தியை நமஸ்கரிக்கின்றான்.)

கிருஷ்: அத்தை குந்தி தேவியாரையும் பாண்டவர்களையும் எத்தனை காலத்துக்குப் பிறகு பார்க்கிறேன். அந்த அரக்கு மாளிகைத் தீயில் பாண்டவர்கள் கருகிப் போனதாய்த் துஷ்டர்கள் பரப்பின அவச் செய்தியை நம்பி நான் எத்தனை துடித்துப் போனேன்! அத்தை! உங்கள் புதல்வர்களா இத்தனைப் பெரியவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்
? இவர்களை அடையாளம் கண்டு கொள்வது எனக்குக் கூட சிரமமாகவே இருக்கிறது...ஆ! இவன் அர்ச்சுனன். அந்தப் பெண்ணின் மேல் வைத்த விழி அகலாமல் நிற்பதிலேயே தெரிகிறது! யுத்தத்தில் எதிரிகளையும், ராஜ சபையில் பெண்களையும் வெல்வதில் இவன் ரொம்ப சமர்த்தன்! மற்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள் அத்தை.

குந்தி: உன் பால்யக் குறும்புகள் இன்னும் உன்னை விட்டு அகலவில்லை. பாண்டவர்களை உனக்கா அடையாளம் தெரியாது
? (யுதிஷ்டிரனைக் காட்டி) இவன் சகல தர்மங்களுக்கும் தானே பிரமாணமாய் நிற்பவன். என் மூத்த மகன்; யுதிஷ்டிரன். (பீமனைக் காட்டி) இவன் சகல பராக்கிரமங்களுக்கும் தானே பிரமாணமாய் நிற்பவன். வாரணாவதத்தில் அந்தப் பாவி புரோசனன் எழுப்பிய வஞ்ச மாளிகையிலிருந்து எங்களைக் காத்து மீட்டு வந்தவன்; வழியில் ஏகசக்ர நகரில் அந்தக் கொடிய பகாசுரனைக் கண் இமைக்கும் நேரத்தில் விண்ணுக்கனுப்பிய மகா வீரன். வாயுபுத்திரன்; பீமன்.

கிருஷ்ணன்: (சிரித்தபடி) இன்னொன்றை விட்டு விட்டீர்களே அத்தை! கானகத்தில் அந்தக் கன்னங்கரிய இடும்பனைப் பந்தாடி அவள் தங்கை இடும்பியை மணந்து கொண்ட மகா புருஷன்.. இவர்கள் நகுல சகாதேவர்கள். அஸ்வ சாஸ்திரத்திலும் தத்துவ சாஸ்திரத்திலும் தமக்கு நிகர் அற்றவர்கள். (திரௌபதியை நோக்கி) பாஞ்சாலி! நலமா
? நீ விரும்பிய மணாளனையே நீ மணந்தாய். எவனோ ஒரு குலம் கோத்திரம் தெரியாத அநாதை அந்தணனுக்கு மாலை சூட நேர்ந்ததே என்ற குழப்பமும் சங்கடமும் இப்போது உனக்குத் தீர்ந்து போயிருக்கும்.

குந்தி: தாய்
, குழப்பங்களையும் சங்கடங்களையும் தீர்த்து வைக்கிறாள். தாரமோ அவற்றைக் கொண்டு வருகிறாள்.

திரௌ: (முதல் முதலாய் வாய் திறந்து) தேவி! இங்கு என்னால் என்ன குழப்பம் நேர்ந்தது
? உள்ளிருந்து விபரீதமான வார்த்தைகளைக் குரல் கொடுத்தவர் தாயாகிய தாங்களே அன்றோ?
சகாதேவன்: தாயோ, தாரமோ..இருவருமே பேதைகள் தான். விபரீதங்கள் பேதைகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றன.

குந்தி: உன் தத்துவ விசாரங்களை ரசிக்கிற மனோ நிலையில் இங்கே யாரும் இல்லை சகாதேவா. (வியாசரிடம் திரும்பி) முனி சிரேஷ்டரே! தாங்கள் வரும் போது
இந்த விபரீதம் தவிர்க்க முடியாதது என்று ஏதோ சொன்னீர்களே..தங்கள் வார்த்தைகள் என் கவலையை அதிகப் படுத்துகின்றன.

வியா: குந்தி! நீயும் யுதிஷ்டிரனும் கொஞ்சம் என்னோடு தனியாக வாருங்கள். சந்தர்ப்பங்கள் வித்தியாசமானவை. அவற்றின் சூட்சுமங்கள் புரியாததாலேயே
, அவை வெளிக்கு விபரீதங்கள் போல் மாயம் பண்ணுகின்றன. (மூவரும் உள்ளே போகின்றனர்)

நகுலன்: சகாதேவா! இங்கே விபரீதத்துக்கு என்ன நேர்ந்தது
? அண்ணன் அர்ச்சுனன் திரௌபதியை வெற்றி கொண்ட மங்கல நாள் அல்லவா இது?
சகா: விபரீதங்கள் எதுவும் மனிதர்களைப் போல் தாம் வருவதற்கு நாள் பார்ப்பதில்லை, நகுலா..இந்தக் கலக்கங்களுக்குக் காரணம் உனக்கு இன்னுமா புரியவில்லை? பிள்ளைகளின் சொல் அலங்காரங்களைப் புரிந்து கொள்ளாமல் ஒரு பேதைத் தாய் உள்ளிருந்தே சொன்ன வார்த்தைகள்.

நகு: எனக்குப் புரிகிறது. ஓ! தாயின் வார்த்தைகள்!

சகா:
வெறும் வார்த்தைகள்! உணர்ச்சிகளுக்கு மனிதன் உருவாக்கிக் கொண்ட சில சௌகரியமான வடிவங்கள்... சமயத்தில் இப்படி அவனுடைய அறியாமையும் அவசரமுமே நிறைந்த சுயரூபங்களையும் பிறருக்குக் காட்டிக் கொடுத்து விடும் சாளரங்கள்.

கிருஷ்: (பேச்சை மாற்றி) திரௌபதி! உனக்கும் அர்ச்சுனனுக்கும் ஜோடிப் பொருத்தம் அற்புதமாய் அமைந்திருக்கிறது. அர்ச்சுனனுக்கு மட்டுமென்ன
? இவர்கள் ஐவருக்குமே உன் சான்னித்தியம் பொருந்தும் போல் தான் தோன்றுகிறது. ஆகா! என் வாயிலிருந்து இம்மாதிரி வார்த்தைகள் ஏன் வருகின்றன? (திரௌபதி திகைப்போடு கிருஷ்ணனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.)

சகா: கிருஷ்ணா! வார்த்தைளை மனித குலம் கண்டறியாமலேயே இருந்திருந்தால் இந்த ஊமை விலங்குகளுக்குக் கிட்டும் உல்லாசத்தில் பாதியையாவது நாம் அனுபவித்து இருப்போம். மனித அறிவு இந்த விதத்தில் பயனற்று மண்ணாய்ப் போனது. மதுசூதனா! நீ பேச வேண்டாம். உனது அழகிய குழலை எடுத்து வேணுகானம் செய். நான் கேட்கிறேன். ஏனெனில் வேணுகானத்துக்குப் பாஷைகள் இல்லை. அது ஓர் அழகு மிகுந்த ஊமை இளவரசியின் அந்தரங்கமான முனகலைப் போல் ரம்மியமானது-வார்த்தைகளின் விஷமங்களால் தீண்டப்படாதது..

கிருஷ்: சகாதேவா! உன் ஞானங்களை உன் மௌனத்தால் பாதுகாத்துக் கொள். நீ மட்டும் ஏன் இத்தனை வார்த்தைகளை வீணே செலவிடுகிறாய்
? அவை மனிதனின் அறியாமையும் அவரமுமே நிறைந்த சுய ரூபங்களைப் பிறருக்குக் காட்டிக் கொடுத்து விடும் சாளரங்கள் தோழா! ( சிரிக்கிறான்)

(உள்ளிருந்து வியாச முனிவரும்
, குந்தியும், யுதிஷ்டிரரும் வெளியே வருகின்றனர்)
யுதிஷ்: (முகத்தில் புதிய களையுடன்) அர்ச்சுனா! வியாச மகரிஷியும் கண்ணபிரானும் சரியான சமயத்திலேயே வந்திருக்கிறார்கள். என் மனக் குழப்பங்களை மகரிஷி சில வார்த்தைகளால் போக்கிவிட்ட அற்புதத்தை எப்படிச் சொல்வேன்? சந்தர்ப்பங்கள் உண்மையிலேயே சூட்சுமமானவை தான் தம்பிகளே!

அர்ச்சு: புரியும்படி சொல்லுங்கள் அண்ணா.

யுதிஷ்: அர்ச்சுனா! வாரணாவத நகரத்திலிருந்து கிளம்பும் முன் நாம் நமக்குள் செய்து கொண்ட அந்தப் பிரதிக்ஞை உனக்கு நினைவிருக்கிறதா
?

அர்ச்சு: நன்றாக நினைவிருக்கிறது. வனவாசத்தின் போது நம் ஐந்து பேரில் எந்தப் பொருளைக் கொண்டுவந்தாலும் அதை நாம் ஐவருமே பகிர்ந்து கொள்வதெனக் குந்தி தேவியின் முன் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம்.

யுதிஷ்: அதில் இது வரை நாம் பிறழ்ந்ததில்லை. இப்போதோ திரௌபதியின் ரூபத்தில் நமக்கு சத்திய சோதனை வாய்த்திருக்கிறது. செய்துகொண்ட சங்கல்பத்தை மீறுதல் ஒரு நல்ல க்ஷத்திரிய குமாரன் செய்கிற தர்மம் இல்லை என்று எனக்குத் தெரியும். நமது தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியே இல்லை. அர்ச்சுனா! நாம் ஐவரும் திரௌபதியையும் பகிர்ந்து கொள்வோம்.

திரௌ: (அதிர்ச்சியாலும் கோபத்தாலும் முகம் சிவந்து கைகளால் தன் இரு செவிகளையும் பொத்தி) ஐயோ! இது என்ன நாராசமான வார்த்தைகள்! தர்மபுத்திரரின் வாயிலிருந்து வரத்தக்க வார்த்தைகளா இவை
? வார்த்தைகள் கொடுமையானவை என்பதில் சந்தேகமில்லை. (அர்ச்சுனிடம் திரும்பி) பிரபு! க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிப் பேசுகிற தங்கள் தமையனார் ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? ஒருவனுக்கு மேற்பட்டவர்களைக் கூடுகிற பெண் வேசிக்குச் சமமானவள் என்று உங்கள் சாஸ்திரங்கள் சொல்லவில்லையா? ‘அர்ச்சுனனை மணந்து கொண்டு ஐவருக்குப் பாய் விரித்தவள் என்ற ஊர் அபவாதத்தை நான் ஏற்க வேண்டுமா? இதற்குத் தாங்கள் சம்மதிக்கப் போகிறீர்களா?

அர்ச்சு: (கோபமாய்) திரௌபதி! என் தமையன் தர்மமே உருவானவர். அவர் எதைப் பேசினாலும் அதை நாங்கள் தர்மமாகவே தலைக் கொள்வோம். அவர் தர்மமே எனது தர்மம்: அதுவே உனது தர்மமும் ஆகும். கணவனின் தர்மமே மனைவியின் தர்மம்.

வியாச: ஆமாம் பெண்ணே! ஆண்களின் தர்மங்களைச் சார்ந்தே பெண்களின் தர்மங்கள் அமைகின்றன. ஓர் ஆணின செயல்களை மீறவோ
, விமர்சிக்கவோ அவனது தாசியான பெண்ணுக்கு உரிமை இல்லை. இதை மனு தனது ஸ்மிருதிகளில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இது சத்தியமில்லை என்றால் மகாபுருஷரான மனு இப்படிச் சொன்னது எவ்வாறு நேர்ந்திருக்க முடியும்?

திரௌ: ஹும்! மனு
புருஷராய்ப் பிறந்ததால் இது நேர்ந்தது! கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்றால்- மனைவி தன் மனோ தர்மங்களை எங்கே கொண்டு கொட்டுவது?

யுதி: கணவனின் சந்நிதானத்தில்! அவனது தேஜஸின் அக்கினியில் தன் மனோ தர்மங்களைக் கரைத்து ஆகுதியாக்கிக் கொள்கிறவளே மனைவி. புருஷனின் தர்மங்களைப் பேண வேண்டித் தன் சொந்த தர்மங்களை அழித்துக் கொள்வது அவள் செய்கிற மகத்தான தியாகம்..

சகா: தியாகம்! ஆகா...உருக்கமான வார்த்தைகள். இம்மாதிரி சமயங்களில் மனிதர்கள் ஒளிந்து கொள்ள எவ்வளவு உதவியாய் இருக்கின்றன!

வியா: சகாதேவா! தர்மம் தெரிந்தவனே!
கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்று திரௌபதிக்கு விளக்கமாய்ச் சொல், குழந்தாய்.

சகா: துருபத குமாரி! நன்றாகக் கேட்டுக் கொள். கணவனின் தர்மமே மனைவியின் தர்மம். ஏனென்றால்
, இங்கே பெரும் பாலான கணவன்மார்கள் அதர்மங்களையே அதிகம் செய்கிறார்கள். ஆனால் தர்மத்தைத் தனியாகச் செய்ய விரும்புகிற யாரும், அதர்மங்களை மட்டும் அப்படிச் செய்யத் துணிவதில்லை. அவற்றின் பாவங்களைத் தனியாய்ச் சுமக்கப் பயந்து, ‘கணவனின் தர்மமே மனைவியின் தர்மம் என்று சொல்லி அவளையும் துணை சேர்த்துக் கொள்கிறார்கள். இது காலம் காலமாய் இங்கே கணவன் மனைவியரிடம் நிலவி வரும் ஒரு சௌகரியமான உடன்பாடு.

திரௌ: (மனசுக்குள்) கணவனின் சுமைகளை வயிற்றில் தான் தாங்குகிறோமே
, வாழ்க்கையிலுமா தாங்க வேண்டும்?

அர்ச்சு: திரௌபதி! என்ன முணுமுணுக்கிறாய்
?

திரௌ: ஒன்றுமில்லை பிரபு! என்ன நேர்த்தியான தர்மம் என்று வியந்தேன்.

யுதிஷ்: வியாச முனிவரே! திரௌபதியின் கண்களில் ஒரு புதுத் தெளிவை நான் காண்கிறேன். அவள் மனத்திலும் தெளிவை உண்டு பண்ணுங்கள். பாஞ்சாலி தன் மாயையிலிருந்து நீங்கி
, தாம் விரும்பியதைத்தான் இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ளட்டும்.

திரௌ: (அதிர்ச்சியோடு) என்ன
, நான் விரும்பினேனா? அர்ச்சுனனைத் தவிர வேறு யாரையும் நான் கனவிலும் விரும்பியதில்லை.

வியா: இல்லை பெண்ணே! நீ மாயையால் இவ்வாறு பேசுகிறாய். நீ அவ்விதம் விரும்பவே செய்தாய்.

திரௌ: எப்போது
?

வியா: பூர்வ ஜென்மத்தில்!

(திரௌபதி பெரிதாய்ச் சிரிக்கிறாள்)

வியா: இகழ்ச்சியாய்ச் சிரிக்காதே
, யக்ஞ புத்திரி! போன ஜென்மத்தில் நீ நளாயினியாய் இருந்த போது தாங்க முடியாத தாம்பத்திய வேட்கையோடு ருத்ரனிடம் பர்த்தா, பர்த்தா.. என்று ஐந்து முறை ஆவேசத்தோடு வரம் கேட்டாய். அதன் விளைவே இது.

திரௌ: இது என்ன வேடிக்கை! பூர்வ ஜென்மத்தில் நான் கொண்டிருந்ததாய்த் தாங்கள் கூறும் அத்தகைய நாட்டங்களோ வேட்கைகளோ இந்த ஜென்மத்தில் இதுவரை நான் என்னிடம் ஒருபோதும் உணர்ந்ததில்லை
, மகரிஷி. பூர்வ ஜென்மத்து வேட்கைகளே இந்த ஜென்மத்தில் தொடராமல் போய் விட்ட பொழுது, அந்த ஜென்மத்து வரங்களால் மட்டும் இபோது எனக்கு என்ன லாபம்? பூர்வ ஜென்மத்துக் கதைகளில் தேர்ந்தவரே, இன்னொன்றையும் எனக்குச் சொல்வீர்களா? நான் முன் பிறவியில் ஐந்து புருஷர்களை விரும்பியதால் இது நேர்ந்தது என்றால், இந்தப் பாண்டு புத்திரர்கள் ஐந்து பேரும் முன் பிறவியில் ஒரே பத்தினியை யாசித்தார்களா?

(வியாசர் திகைப்போடு கிருஷ்ணனைப் பார்க்க
, கிருஷ்ணன் பேசத் தெரியாமல் தன் குழலை எடுத்துக் கொள்கிறான்)

கிருஷ்: (குழலில் படிந்து கிடக்கும் தூசுகளைத் தன் உத்தரீயத்தால் துடைத்தபடி) சகாதேவன் சரியாகவே சொன்னான். வார்த்தைகளை நாம் கண்டுபிடித்திருக்கவே கூடாது! சமயங்களில் அவை சௌகரியங்களை விட இடைஞ்சலையே அதிகம் உண்டு பண்ணுகின்றன!
வியா: அப்படி இல்லை கோபாலா. மனித சிரமங்களிலிருந்து ஆச்சரியமாய்ப் பரிணமித்த ஆற்றல் மிக்க வார்த்தைகளைப் பெண்களின் உபயோகத்துக்கு விட்டது தான் தவறு. அவர்கள், தங்கள் அடுக்களைப் பாத்திரங்களைப் போல் அவற்றையும் தாங்கள் நினைத்த வாக்கில் எல்லாம் உருட்டித் தேய்க்கிறார்கள். மனு பெண்கள் வாதிடுவதைக் கண்டிக்கிறார்.

திரௌ: (கோபமாய்) மனுவின் பெண்டாட்டி ஒரு வேளை ஊமை ஸ்த்ரீயாக இருந்திருக்கலாம்
, மகரிஷி. அல்லது அன்றைக்கு ஜனகரின் சபையில் யாக்ஞவல்கியரை எதிர்த்து அறைகூவிய அந்த சூரப் பெண் கார்கி வாசவக்னுவை நினைத்து மனு மருண்டு போயிருக்கலாம்.

யுதிஷ்: பெண்ணே! அரச குமாரியாகிய உனக்குப் பேசும் உரிமையையோ கேட்கும் உரிமையையோ மறுக்கும் எண்ணம் என்னிடம் இல்லை
, ஆனால் நிச்சயித்துச் சொல்லப்பட்ட தர்மங்கள் சில, நிகழ் கால நடைமுறைகளில் தங்கள் முரட்டு இலக்கணங்களைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வதுண்டு. ஜடிலை ஏழு பேரை மணந்தாள்; சத்தியவதி பராசரரும் சந்தனுவுமான இரண்டு பேரைக் கூடினாள்; எங்கள் பாட்டியார் அம்பிகையும் அம்பாலிகையும் விசித்திர வீரிய மகாராஜனுக்குப் பின் வியாசரோடும் சேர்ந்து இரண்டு புருஷர்களுக்கு உடைமையானார்கள்.

வியா: எல்லாவற்றிற்கும் மேலாக உன் மாமி குந்தி தேவியாரோ பாண்டுவைத் தவிர்த்துப் பரபுருஷர்கள் மூன்று பேரைக் கலந்து நால்வருக்கு நாயகியானாள்.

கிருஷ்: ஆனால்
, இவர்கள் யாரையுமே சமூகம் பகிஷ்கரித்து விடவில்லை. ஏனெனில், இவை ஒவ்வொன்றும் புண்ணிய புருஷர்களின் சம்மதத்தோடேயே நிகழ்ந்தன. அவசியங்களும் நிர்ப்பந்தங்களும் நேர்கிற போது பெண்கள் தங்கள் சுய தர்மங்களைத் தாங்களே நிச்சயித்துக் கொண்டு பிடிவாதம் செய்வதை அறிஞர்கள் அனுமதிப்பதில்லை.

சகா: பெண்ணே! கிருஷ்ணன் சரியாகவே சொன்னான். இங்கே தர்மங்கள் எதுவும் நியாய அநியாயங்களைச் சார்ந்து இயங்குவதில்லை
; மாறாய், செல்வாக்கும் அந்தஸ்தும் கொண்டவர்களைச் சார்ந்தே இயங்குகின்றன.

திரௌ: கிருஷ்ணா! மாயங்களில் தேர்ந்தவனே! அவ்விதமானால் இங்கே சாஸ்திரங்கள் என்பவை வெறும் சந்தர்ப்ப வாதங்கள் தானா
?
(கண்ணன் பதில் எதுவும் சொல்லாமல் மெல்ல நழுவித் தன் வேணுவை எடுத்து ஊதுகிறான்.)
சகா: கண்ணன் வார்த்தைகளை இழந்து போனான். இனி அவனால் பேச முடியாது. ஆகா! வடிவமற்ற உணர்வுகளுக்கு இந்த சங்கீதம் எத்தனைப் பெரிய பாதுகாவல்! கண்ணா! யதுகுல திலகா! உன் அற்புதக் குழலில் உனக்குப் பொருத்தமாய் யதுகுல காம்போதியை வாசியேன்...
யுதி: இல்லை, இப்போது கண்ணன் வாசிப்பது நீலாம்பரி.
சகா: கோபாலன் புத்திசாலி. வார்த்தைகள் தடுமாறித் தவிக்கும் இத்தகைய சஞ்சல காலங்களில் நியாயங்களைத் தூங்க வைக்க இதுவே அற்புத யுக்தி.
அர்ச்சு: துருபத குமாரி! வியாச மகரிஷியும், அண்ணன் யுதிஷ்டிரனும் அறத்தையே பேசினார்கள். என் பிரியே! எங்கள் ஐவருக்குமே பிரியையாக உனக்கு இன்னும் என்ன சங்கடம்?
யுதிஷ்: இதைச் செய்வதன் மூலம் உனக்குப் பெருங்கீர்த்தி வரக காத்திருக்கிறது, பெண்ணே!
திரௌ: இந்த மாயக்கண்ணன் வாசிக்கிற கீதம் என்னை என்னவோ செய்கிறது. என் மனம் உங்கள் பாஷையில் சொல்லப் போனால் அந்த அற்புதத் தியாகத்துக்குத் தயாராகிறது. நிர்ப்பந்தங்களுக்கு இனித் தியாகம் என்கிற புதுப் பெயர் என்னால் கிடைக்கட்டும். பராக்கிரம சாலியான காண்டீபரை ஒரு பலவீனமான ஸ்திரீ இக்கட்டிலிருந்து காப்பாற்றியதாய் நாளை என்னைப் பெண்குலம் போற்றட்டும்..
வியா: ஆகா! என் மகா காவியத்தின் பிரமிக்க வைக்கும் புரட்சிமயமான அத்தியாயம் இந்தக் கணத்தில் பூர்த்தி அடைந்து விட்டது. பாண்டு புத்திரர்களே! அங்கே வானில் தேவர்கள் கூடி நின்று பெருங்குதூகலத்தோடு துந்துபியை ஆர்ப்பரிப்பதைப் பாருங்கள்! சகாதேவா, நீ ஏன் சிரிக்கிறாய்?
சகா: ஒன்றுமில்லை, மகரிஷி. ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் இந்தப் பெண்ணை அடைய இப்படி நாங்கள் நாலு பேர் இருப்பது தெரியாமல், அந்த மூட மன்னன் துருபதன் அத்தனைப் பிரயத்தனங்களோடு ஒரு மச்சப் பொறியை வேறு நிர்மாணித்தானே, அதை நினைத்துச் சிரித்தேன்.
திரௌ: பலன்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிற மனித வர்க்கம் எப்போதுமே அதற்கான முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. (மாலையோடு யுதிஷ்டிரரை நெருங்கி ஒரு நிமிஷம் தயங்கிய நிலையில்) சுவாமி! எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இம்மாலையை நான் தங்களுக்கு அணிவிப்பதற்கு முன்னால், அதைத் தயவு செய்து தீர்த்து வைப்பீர்களா?
யுதி: கேள், பெண்ணே.
திரௌ: வனவாசத்தில் உங்களுக்குக் கிட்டுகிற எதையும் நீங்கள் ஐவருமே பகிர்ந்து கொள்வதென அன்றைக்குச் செய்து கொண்ட அந்தப் பழைய சங்கல்பத்தைப் பேண வேண்டியே இப்போது என்னையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்ததாய்ச் சொல்கிறீர். ஆனால், தர்மம் அறிந்தவரே, பீமசேனர் வனவாசத்தில் அந்த இடும்பியை மணந்து கொண்ட போது அவளை மட்டும் இதே போல் ஏன் நீங்கள் யாரும் பகிர்ந்து கொள்ளவில்லை?
பீமனைத் தவிர மற்ற நால்வரும்: (பரபரப்பும் கோபமுமாய்) ஆ! அவள் ராட்சசி அல்லவா?
திரௌ: அடடா! எத்தனை சத்தியமான வார்த்தைகளை இப்போது பேசினீர்கள்! (மெல்லச் சிரிக்கிறாள்) இதன் சூட்சுமம் இப்போது தான் புரிகிறது. இடும்பி ராட்சசியாய்ப் போனதால் உங்கள் சங்கல்பத்துக்கு வேலையின்றிப் போயிற்று. நான் ராஜகுமாரியாய்ப் போனதால் அது இப்போது மட்டும் எங்கிருந்தோ இறக்கை முளைத்து உதவிக்கு ஓடி வந்தது! ஓ..ஆடவர் தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல. பாவம், அவை முன்னதைப் பின் தொடர்கிற வெறும் நிழற்படைகள்..(மாலையை யுதிஷ்டிரனின் கழுத்தில் அணிவிக்கிறாள். யுதிஷ்டிரர் தலை குனிகிறார்-மாலையை வாங்கிக் கொள்கிற சாக்கில்!)
-கணையாழி, டிசம்பர் 1976)

-(
புகைப்படம்: பீட்டர் பரூக்கின் மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி)