Tuesday, December 31, 2013

மை ஒற்றும் தாள்

வளைப் பற்றி அந்தத் தெருவில் பல பேர் பல மாதிரிப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவை எல்லாவற்றிலுமே முடிவாக ஒரே அர்த்தம் தான் இருந்தது.

அவற்றை எல்லாம் தான் மட்டும் அந்தத் தெருவுக்கே அந்நியனைப் போல சந்தானம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர, அவற்றில் அவன் சம்பந்தப்பட எப்போதுமே விரும்பவில்லை.

அந்தத் தெருவில் அவன் வசித்துக் கொண்டிருத்த வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வாடகை வீட்டில் அவள் தங்கி இருந்தாள். பகல் நேரம் எல்லாம் அந்த உள்ளடங்கின வீட்டு வாசல் அறையில் எதையாவது படித்துக் கொண்டோ, அல்லது துணிகளில் ஏதாவது எம்ப்ராய்டரி பண்ணிக் கொண்டோ காணப்படுகிற அவள் இரவு ஒன்பது மணிக்கு மேல் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே போய் விடுவாள்.

அந்த நேரங்களில் எல்லாம், வாசல்களில் காற்றுக்காகக் கயிற்றுக் .கட்டிலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற சாக்கில், பனியன் கூட இல்லாமல் திறந்த மார்புடன் நிறைய ஆண்கள் தன்னைக் கண் கொட்டாமல் கவனிப்பதையும் அவள் லட்சியம் பண்ணுவதில்லை.

சில சமயங்களில் அவள் வீட்டு முன், இரவு எட்டு மணிக்கு மேலே எவனாவது ஒருவன் காரிலோ, ஸ்கூட்டரிலோ வருவான். அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அவள் பகிரங்கமாகவே காரின் முன் சீட்டிலோ, அல்லது ஸ்கூட்டரின் பின்னாலோ  நெருக்கமாய் உட்கார்ந்தபடி, வருகிறவனின் தோளின் மீது சுவாதீனமாய்க் கைகளை அழுத்திக் கொண்டு போவாள்.

“இப்படியொரு அக்கிரமம் தெனம் நடக்குதே.. பாத்துக்கிட்டே இருந்தா எப்படி? மானமுள்ள பொண்டுகள் பரம்பரை பரம்பரையா இருக்கிற தெருய்யா இது. இங்க என்ன கேள்வி முறையே இல்லாம போயிடுச்சா?” என்று நிமிடத்துக்கு ஒருமுறை எழுந்து போய்ப் புகையிலைச் சாற்றை லாந்தர்க் கம்பத்தோரமாய்த் துப்பிக்கொண்டே கோடி வீட்டு நாயுடு வழக்கம் போலவே பேச்சை ஆரம்பிப்பார்.

‘ஹும்! இதல்லாம் நல்லதுகில்லே நாயுடு!” என்று அவரது நண்பர் ஒருவர் அங்கலாய்ப்பார்.

“எல்லாத்தையும் சினிமாப் பாக்குற மாதிரிப் பாத்துக்கிட்டிருந்துட்டு, ‘தேவி’ வெளியில போன பிற்பாடு இப்படிக் கயித்துக் கட்டில் கான்பரன்ஸ் போட்டுக் கத்துவீங்க..” என்பார் இன்னொருவர்.

இப்போது நிறையப் பேர் சிரிப்பார்கள்.

ஏதாவது ஒரு மாலைப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு தன் வீட்டுக் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சந்தானத்தின் காதில் அந்த நேரததில் இந்த இரைச்சல்களும் விமரிசனங்களும் குற்றச்சாட்டுகளும் சிரிப்புகளும் நாராசமாய் விழும். படிக்கிற விஷயங்களில் கவனம் போகாமல் பல சமயங்களில் எரிச்சல் தாளாது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே கூடத்துக்குப் போய் விடுவான். அங்கு போய் உட்கார்ந்ததுமே அவன் மனைவி புவனா வந்து பிடித்துக் கொள்வாள்.

அந்தப் பெண்ணைப் பற்றி மற்ற பெண்களிடமிருந்து புதிது புதிதாய்த் தான் தெரிந்து கொண்டவற்றை அவனிடம் ஆரம்பிப்பாள். கொஞ்ச நேரத்திலேயே, சலிப்புடன் படுத்த நிலையிலேயே ஈசிச்சேரில் தூங்கி விடுவான் சந்தானம். புவனாவின் வியாக்கியானங்களை எல்லாம் பாவம், நாற்காலி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்!



ப்பும் மந்தாரமுமாய் இருந்த அன்றைக்குக் காலையில் அவன் ஏதோ காரணங்களுக்காக  ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே இருந்த போது, தபால் காரன் வந்து கவர் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். அது அவன் மனைவி பெயருக்கு இருக்கவே, அதைப் பிரிப்பதா வேண்டாமா என்று சில வினாடிகள் லேசாய்த் தயங்கி நின்றான். குழாய் அடிக்குப்  போயிருந்த அவள் வம்புதும்புகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்து சேர இன்னும் அரை மணியாவது ஆகும் என அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால், கூடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்தக் கவரைப் பிரித்துக் கடிதத்தை வெளியே எடுத்தான்.

புவனா திரும்பி வந்து அவனைக் கடந்த போது, அவனது முகம், உணர்ச்சி, மனநிலை அனைத்தும் வழக்கத்துக்கு மாறாய் இருந்தன. அதை அவள் கவனிக்காததால் நேரே உள்ளே போய்க் குடத்தை வைத்து விட்டுத் திரும்ப வந்தாள். அவள் வருகிறவரை தன் வெறுப்புகளையும் கோபங்களையும் பலவந்தமாய் உள்ளே அடக்கிக் கொண்டு, அவை தன்னையும் மீறிக் கண்கள் வழியாய் அனலாய் வழிகிற நிலையில் சந்தானம் ஈசிச்சேரில் மௌனமாய்க் கிடந்தான்.

புவனா அவன் முன் வந்து நின்று சாப்பிடுவதற்காக அவனை அழைத்தாள். அவன் ஒரு வினாடி, அவள் உருவம் முழுதும் புதிதாக எதையோ தேடுகிறமாதிரி பார்வையினால் ஊடுருவினான். அவள் சங்கடம் கொண்டு நெளிந்து மீண்டும் அவனை அழைத்தாள்.

“எனக்கு முதல்ல ஒரு விஷயம் தெரியணும்...” அவன் குரலில் கடுமை இருந்தது. அவனது நீட்டிய கையில் அந்தக் கடிதம் காற்றில் படபடத்தது. “இதுல நம்ம ரெண்டு பேரோட கௌரவமுமே சம்பந்தப் பட்டிருக்கு..” என்று அவன் வாய் கோபமாய் முணுமுணுத்தது.

அவள் ஒன்றும் புரியாமல் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதைப் படிப்பதற்காக உள் அறையை நோக்கி நகர்ந்தாள். அவன் கடுமையாய், “நோ..அந்த லெட்டரை இங்கயே படி..” என்று அதட்டிச் சொல்லவே, அவள் அப்படியே நின்று, உடம்பில் இனம் தெரியாத பயமும் படபடப்பும் பரவ அந்தக் கடிதத்தை மெல்லப் படிக்க ஆரம்பித்தாள்.

அதைப் படிக்கப் படிக்க அவள் நெற்றி தெப்பமாய் வேர்க்கத் தொடங்குவதையும் இதயத்தின் துடிப்பு அதிகமாவதையும், கால் விரல்கள் தரையில் பாவாமல் தவிப்பதையும் சந்தானம் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கடிதத்தின் கடைசி வரியை முடித்து, அதை மடித்து விட்டு அவனை நோக்கி நிமிர்கிற போது அவள் முகம் வெகு நேரம் அடுப்பில் இருந்த பால் செம்பைப் போலக் கறுத்துப் போயிருந்ததது. விழிகள் படபடக்க, உடல் நடுங்க அழுகை பெருகும் குரலில் அவள் சொன்னாள்.

“எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே புரியலே. எவனோ ஒரு பாவி வேணும்னே இப்படி எல்லாம் எழுதி இருக்கான்..இவனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் ஒரு பாவமும் அறியாதவ.. என்னை நம்புங்க..”

அவளிடமிருந்து உடைந்து போய்ச் சிதறல்களாய் எழும் சீரற்ற அந்த வார்த்தைகளை முழுவதுமாய்க் கேட்கக் கூடப் பொறுமை இன்றி, அவன் அவளின் பெயரையும் அந்த வீட்டு எண்ணையும் தாங்கி நிற்கும் கடித உறையை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்குகிற போது, நிற்கவும் திராணியற்றுத் தரையில் உட்கார்ந்து விட்ட அவள், அந்த உறையை ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தாள். சற்று நேரம் எதையோ மனசுக்குள் யோசிக்கிறவள் போல் அமைதியாய் இருந்தவள், சட்டென்று குரலில் பரபரப்பை வரவழைத்துக் கொண்டு அவனிடம் சொன்னாள்.

“ஐயோ! இது எனக்கு வந்த லெட்டரே இல்லே. அந்தத் தபால்காரன்-இல்லே, இல்லே- இதை எழுதினவன் ஆறாம் நம்பரைத்தான் தவறுதலா, ஒன்பதுன்னு எழுதியிருக்கான். இது ‘அவ’ளுக்கு வந்திருக்கிற லெட்டர். அவ இந்தத் தெருவிலே இருக்கறதால  என்ன பாதகம்னு ஒரு நாள் கேட்டீங்களே, இப்போ இந்தப் பழியும் பாவமும் நம்ம வீட்டுக்கே வந்து சேர்ந்து, ஒரு பாவமும் அறியாத என்னை நீங்க இப்படி ஒரு கேள்வி கேக்கறமாதிரிப் பண்ணிட்டுதே, பார்த்தீங்களா?” –புவனாவின் குரல் கரகரத்தது. விழிகளில் நீர் நிறைந்து கன்னங்களில் வழியத் தொடங்கியது.

சந்தானம் கேட்டான். “அதை எப்படி அத்தனை திட்டவட்டமாச் சொல்றே?”

அவள் அழுகையினூடே சொன்னாள்: “அவ பேரும் புவனா தான். எனக்குத் தெரியும்...”

சந்தானத்தின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி நிறைகிற மாதிரி இருந்தது. இதற்கு மேலும் எதுவும் பேசாமல் அவன் அந்தக் கடிதத்தை அவளிடமிருந்து வாங்கி உறையில் போட்டு மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டான். அதைக் கிழித்துத் ‘தலையைச் சுற்றி’ எறிந்து விடவேண்டும் என்று புவனா படபடத்தாள். அவன் நிதானமாய் இப்படி அவளிடம் சொல்லிக் கொண்டே புறப்பட்டான்: “அது நாகரிகம் இல்ல. இதை அவ முகத்துலேயே விட்டெறிஞ்சிட்டு வர்றது தான் முறை..”

முதன்முதலாய் அவள் வீட்டு வாசலை அவன் மிதித்தான். சுற்று முற்றும் பார்த்துச் சற்றுத் தயக்கத்தோடு நிதானித்தான். எக்காரணத்தைக் கொண்டும் தான் அந்த வீட்டிற்குள் அதிக நேரம் தாமதித்து விடக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

கூடத்தில், மேசை முன் அமர்ந்து எதையோ எழுதிக் கொன்டிருந்த அவள், அவன் காலடி ஓசை கேட்டு சட்டென்று நிமிர்ந்தாள். அவள் கண்களில் வியப்பும் திகைப்பும் கலந்த ஒரு விசித்திர உணர்வு அந்தக் கணத்திலேயே மண்டி எழுந்தது. அவனை அவள் அந்த இடத்தில் சிறிதும் எதிர்பார்த்திருக்கவே முடியாத நிலையில், வரவேற்பதில் ஒரு வினாடி குழம்பிப் போனாள்.

சந்தானம், அவளை அத்தனை நெருக்கத்தில் சந்திக்கிற அந்த முதல் தடவையில்-தன்னுடைய ஓரப் பார்வை வழியே ‘இவள் தன் மனைவியை விடவும் அழகாகவே இருக்கிறாள்’ என்று தவிர்க்க முடியாமல் நினைத்தான். 

இதற்குள், அவள் பரபரப்போடு நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அவனை உட்காரச் சொல்லி உபசரித்தாள். அவன் சட்டென்று தன் சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்து அவளிடம் நீட்டியவாறு சொன்னான்:

“நான் இங்கே உக்கார்றதுக்கோ அல்லது வேற எதுக்கோ வரல்ல. இந்த லெட்டர் இன்னிக்குக் காலையிலே என் வீட்டுக்கு வந்ததுல, எனக்கும் என் மனைவிக்கும் நடுவுல முதல் தடவையா ஒரு விபரீதமான பிரச்சனை வந்துடுச்சு.  அது இன்னும் அசிங்கமா வளர்றதுக்கு முன்னால, அவ ஒரு வழியா உண்மையைக் கண்டுபிடிச்சுட்டா. அவ பேரும் உங்க பேரும் என்ன காரணத்தாலயோ ஒண்ணா அமைஞ்சதோட இல்லாம, இந்தக் கவர்ல வீட்டு நம்பர் வேற தலைகீழா மாறி எங்களுக்கு வந்திருக்கு. அதனால தான் இந்தக்  கவரைப் பிரிக்கும் படியா ஆயிடுச்சு..அதுக்காக நான் வருத்தம் தெரிவிச்சுக்கறேன்..”

அவள் இனம் புரியாத கலவரங்களோடு அந்தக் கடித்தை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டாள். அவள் அந்தக் கடிதத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிற போதே அவன் மேலும் இப்படிச் சொன்னான். “இந்த மாதிரிக் கடிதங்கள்லாம்  உங்களுக்குத் தான் வர முடியும்னு என் மனைவி சொன்னா..”

அவள் விரல்கள் நடுங்கின. அவனுடைய இந்தக் கடைசி வார்த்தைகளில் குண்டடி பட்டுச் சிதறிய புறாவைப் போல அவள் துடித்து நின்றாள். பிறகு, தன் புடவைத் தலைப்பால் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, ஒரு கணம் அவனை ஏறிட்டுப் பார்த்து, சிதைந்த குரலில், “ஒரு நிமிஷம் எனக்காக வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்..” என்று கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தோடு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்து போது, அந்தச் சில நிமிடங்களில் அவள் உள்ளே சத்தமேயின்றி அழுதிருக்கிறாள் என்பது அந்த விழிகளின் சிவப்பில் தெரிந்தது. சந்தானத்துக்கு இது வியப்பை அளித்தது. அவள் தலை குனிந்தவாறே, “இதுல நம்பர் மட்டும் தலை கீழாப் போகல..எல்லாமே போயிருக்கு..” என்று மெதுவாய் முணுமுணுத்தாள்.

பிறகு, “இப்படிப் பட்ட கடிதங்கள் எனக்கு மட்டும் தான் வர முடியும்கறது உங்க மனைவியோட கணிப்புப் போலருக்கு.. சரி, அப்படியே இருக்கட்டும். இது எனக்கு வந்த லெட்டர்தான்னு ஒத்துக்கறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. என்னைப் பத்தி இந்தத் தெருவுல யாராரு என்னென்ன பேசிக்கறாங்கன்னு எனக்கும் நல்லாத் தெரியும். எனக்கு அதிலெல்லாம் கொஞ்சங்கூட வருத்தமே இல்ல. நான் ஏன் வருத்தப் படணும்? என்னைப் பத்தி மட்டும் பேச இத்தனை பேரு இருக்காங்கங்கிறதுல நான் சந்தோஷம்னா அடையணும்?” என்றாள். பிறகு, ‘இருங்க.. உங்க முன்னலேயே இந்தக் கவர்ல ‘ஒன்பதை’ ‘ஆறா’த் திருத்திடறேன்...” என்று அவன் காதில் விழுமாறு சொல்லிக் கொண்டே, மேஜை மீதிருந்த பேனாவை எடுத்துக் கவரில் அந்த எண்ணைத் திருத்தினாள்.

அப்படி அவள் திருத்துகிற போதே, பேனாவிலிருந்து மை கொடகொடவென்று கொட்டிக் கவரில் படிந்தது. அவள் உடனே மேஜை டிராயரைத் திறந்து, உள்ளேயிருந்து ஒரு ‘பிளாட்டிங் பேப்பரை’ எடுத்து மை கொட்டிய இடத்தில் வைத்து அழுத்தமாய் மையை ஒற்றி எடுத்தாள்.

சந்தானம் அந்தச் செய்கையை ஒரு வினாடி கவனித்துக் கொண்டிருந்து விட்டு விளையாட்டாய், “பிளாட்டிங் பேப்பர் எப்பவுமே தயாராக் கைவசம் வச்சிருப்பீங்க போலிருக்கு!” என்று சொல்லியபடியே வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவள் குரல் பின்னால் கேட்டது: “ஆமா.. ‘பிளாட்டிங் பேப்பர்கள்’ இருக்கிறது எத்தனை சௌகரியமா இருக்கு! இந்த வெள்ளைப் பேப்பர்ல இப்படி வச்சு ஒத்தி எடுத்திட்டா எல்லா மையும் பிளாட்டிங் பேப்பருக்கு வந்திடுது. ஆனா, நாம எப்பவுமே ‘பிளாட்டிங் பேப்பர்’ மையாறதேன்னு கவலைப் படறதுல்லே..  ஏன்னா, அது, பாவம்,   ஏற்கனேவே மையாத் தானே இருக்கு?”  

அவன் உடம்பெல்லாம் ஒரு முறை பெரிதாய் எதனாலோ உலுக்கப்பட்ட மாதிரி உணர்ந்தான். அவ்வார்த்தைகள் இயல்பாய்ச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல என்பதும், அவற்றில் அசாதாரணமான ஆழம் இருக்கிறது என்பதும் அவன் அறிவுக்குப் புரிந்தது. ‘இவள் இந்தத் தெருவுக்கு இடைஞ்சலாய் இருக்கிறாளா, சௌகரியமாய் இருக்கிறாளா?” என்ற ஒரு புதிய கேள்வி எழுந்து அவனை வெகுவாய்க் குழப்பியது.

அவன் வீட்டுக்குள்  நுழைந்த போது, புவனா படபடப்போடு அவனிடம் கேட்டாள்:"என்ன,அந்த லெட்டரை அவ மூஞ்சியில விட்டெறிஞ்சிட்டீங்களா? அந்த நீலி ஏதாவது சொல்லியிருப்பாளே?”

அவன் எங்கோ வெறித்துக் கொண்டு இப்படிச் சொன்னான்: “அது தனக்கு வந்த லெட்டர் தான்னு அவ சொன்னா. கூடவே இன்னொண்ணும் சொன்னா.. பிளாட்டிங் பேப்பர்கள் இருக்கிற வரைக்கும் வெள்ளைப் பேப்பர்கள் கவலைப் பட வேண்டியதில்லைன்னு...”

புவனா முகமெல்லாம் வெளிற அவனைப் பார்த்தாள்.

-(8.3.1974, தினமணி கதிர் இதழில் வேறு தலைப்பில் பிரசுரமானது) 


* * *
பழுப்பேறிய பழங்கதைகள்.. ('மை ஒற்றும் தாள்' பற்றி...)
*************************************************

1970-களின் ஆரம்பத்தில் மன்னார்குடியில் இருந்த போது என் அறைக்குச் சக்ரபாணி என்ற ஒரு நண்பர் அடிக்கடி வருவார். சக்ரபாணி ஒரு சிறந்த இலக்கிய ரசிகர். எழுத்துகளின் நுட்பமான அம்சங்களையும் நயங்களையும் சட்டென்று அடையாளம் கண்டு வாய் விட்டுப் பாராட்டக் கூடியவர். அவரது தொடர்பு அந்தக் கால கட்டத்தில் என் இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்து விசையாக இருந்தது.

ஒவ்வொரு முறை எனது ஏதாவது ஒரு சிறுகதை தினமணி கதிரில் பிரசுரம் ஆகும் போதும், அவர் என் அறையில் ஆஜர் ஆகி விடுவார். அந்தப் படைப்பை வார்த்தை வார்த்தையாய் ரசித்துப் பாராட்டுவார். இது தவிர நான் தனியே ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைக்கும் கவிதைகள், உரைநடைகளை எல்லாம், அவை எழுதப்பட்ட சூட்டோடு இருக்கும் போதே அவரிடம் வாசித்துக் காட்டுவதில் எனக்கு ஒரு பெரிய சுகம் இருக்கும். அவற்றைப் படிக்கிற போது, அங்கங்கே அவர் முகம் ரசனையில் மலர்ச்சி காட்டும். சில இடங்களில் என்னை அந்த வரிகளை மறுபடியும் படிக்கச் சொல்லிக் கேட்டு, ”ப்ச்..அற்புதம்” என்று தன்னை மறந்து கண்களை மூடி முணுமுணுத்து அனுபவிப்பார். அவர் ஒரு வாரம் என் அறைக்கு வராவிட்டால் அந்த வாரமே எனக்கு மிகப் பெரிய வெறுமையாய்த் தோன்றும்.

ஒரு புதன் கிழமை சாயங்காலம் சக்ரபாணி என் அறைக்கு ரொம்பவும் உற்சாகத்தோடு வந்தார். “என்ன சக்ரபாணி, இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க?” என்று நான் அவரிடம் கேட்டேன். “விஷயம் இருக்கு ராம்..முதல்ல கையைக் கொடுங்க..” என்று சொல்லி என் கைகளைக் குலுக்கினார். “என்ன இந்தப் பீடிகை எல்லாம் புதுசா இருக்கு? விஷயத்தைச் சொல்லுமய்யா..” என்றேன் நான்.

சக்ரபாணி முகமெல்லாம் மலர்ச்சியோடு பேச ஆரம்பித்தார். “ராம்..இன்னிக்குக் காலம்பர ஹரித்ரா நதித் தெருவுல இருக்கிற என்னோட சிநேகிதர் ஒருவரைப் பார்க்கலாம்னு போயிருந்தேன்.. வீட்டுத் திண்ணையில் ரெண்டு பேர் உக்காந்து பேசிக் கிட்டிருந்தாங்க. ஒருத்தர் கையில இந்த வாரத் தினமணி கதிர் இருந்துது. அதுல வந்திருக்கிற ஒரு கதையை அவர் இன்னொருத்தர் கிட்ட காட்டி, ‘சமீபத்துல நான் வாசிச்ச கதைகள்லேயே ரொம்ப அபூர்வமான கதை இது..’னு பாராட்டிக்கிட்டிருந்தார். நான் அவரிடமிருந்து கதிரைக் கேட்டு வாங்கி என்ன கதை அதுன்னு பார்த்தேன். எனக்கு நிஜமாகவே ஆச்சரியம் தாங்கலே. அது உங்க கதை ராம்!. என்ன சந்தோஷமான ‘கோயின்சிடன்ஸ்’ பாருங்க.. நான் அவர் கிட்ட, ‘சார், இந்தக் கதையோட ஆசிரியர் என்னோட நண்பராக்கும்.. நம்ம ஊர்க் காசுச் செட்டித் தெருவுல தான் இருக்கார்’னு சொன்னேன். அவருக்கு ஒரே சந்தோஷம். அவரோட பாராட்டுகளை உங்க கிட்டே சொல்லச் சொன்னார். நீங்க இன்னும் நிறைய எழுதணும்னும் சொல்லச் சொன்னார்... ராம்.. நம்மத் தெரிஞ்சவங்க நம்மளப் பாராட்டறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. அது சில சமயங்கள்ல, பொய்யாவோ இல்ல மிகையாவோ கூட இருக்கலாம். ஆனா, நம்மளத் தெரியாதவங்க கிட்டேருந்து எதிர்பாரம வர இந்த மாதிரிப் பாராட்டுகள் தான் நமக்கு உண்மையாக் கிடைக்கிற பெருமை..”

அன்றைக்கு முதல் நாள் தினமணி கதிரில் வெளி வந்திருந்த ‘மை ஒற்றும் தாள்’ (இது வேறு தலைப்பில் அப்போது பிரசுரமாகி இருந்தது) என்ற என் சிறுகதையோடு சம்பந்தப்பட்டது தான் நான் மேற்சொன்ன சுவாரஸ்யமான சம்பவம். இந்தக் கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் சக்ரபாணியும் என் நினைவுக்கு வருவார். இப்போது அந்த இனிய நண்பர் சக்ரபாணி எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவரையும் நான் அறியாத அவரது சிநேகிதரையும் சந்தோஷப் படுத்திய அந்தக் கதை, பழுப்பேறிய காகிதங்களாய் எனது கோப்பில் இன்னும் பத்திரமாக இருக்கிறது..)

*



Friday, December 6, 2013

ஒரு பிடில் பெட்டி மூடிக் கிடக்கிறது


ந்தக் குத்துக் கல்லில் அமர்ந்த படி எதிர்த்தாற் போல் தெரிகிற உயர்ந்த மாடிக் கட்டிடத்தையே வெறித்துக் கொண்டிருந்த சுகுமாருக்கு,அந்த இளைஞனின்  குறுக்கீடு எரிச்சல் ஊட்டுவதாய் இருந்தது.

“நான் தொல்லை தருகிறேனா?” என்று குழைந்தபடியே தோளைத் தொடும் அவனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்து, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று சிறிது குழம்பிய போது, அவனே பேசத் தொடங்கினான்: “உங்களை நான் ரெண்டு நாளாகவே பாத்துக்கிட்டிருக்கேன்.  இந்தக் கல்லை மட்டும் ரொம்பவும் நெருங்கின சிநேகிதன் மாதிரி சொந்தம் கொண்டாடிக்கிட்டு, இதுல வந்து உட்கார்றீங்க..”

அந்த இளைஞன் பேசப்பேச சுகுமாரின் கண்கள் அதிசயமாய் விரிந்து பெரிதாகின. “நீங்க என்னைக் கூர்ந்து கவனிச்சிக்கிட்டு வர்றீங்க போலிருக்கு..” என்று மெல்ல முணுமுணுத்தான்.

அந்த இளைஞன் தன்னை இப்போது அறிமுகப் படுத்திக் கொண்டே சுகுமாரின் அருகில் கிடக்கும் இன்னொரு கல்லில் அமர்ந்து கொண்டான். அவன் பெயர் குருமூர்த்தி என்றும், அவன் சென்னையில் ஒரு பிரபல கம்பெனியில் ‘சேல்ஸ் பிரமோட்ட’ராக வேலை செய்கிறான் என்றும் சுகுமார் தெரிந்து கொண்டான்.

“இங்கேருந்து ஏழெட்டு மைல் தள்ளி இருக்கிற ஸ்பின்னிங் மில்லுல நான் டெக்னீஷியனா இருக்கேன். வேலை நேரம் போக மீதி நேரம் முழுசையும் நான் இந்த இடத்துல தான் கழிக்கறேன். இந்த இடமும் இந்தக் கல்லும் எனக்கு நிரந்தர சொத்தா ஆயிட்ட மாதிரி நான் அடிக்கடி உணர்வதுண்டு. அதெல்லாம் சும்மா ஒரு பிரமை!”  என்றான்.
குருமூர்த்தி அவனை அனுதாபத்தோடு பார்த்தான். ”மிஸ்டர் சுகுமார், நான் சந்திச்ச மனிதர்கள்ளேயே நீங்க ரொம்ப வித்யாமனவர்..”

“மிஸ்டர் குருமூர்த்தி..ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நான் இந்தத் தோள்ல ஒரு பிடிலோட சுமையைச் சுமந்துக்கிட்டிருந்தேன். இந்த இடம் முழுக்கவும் அது என்னையும் பிரமிக்க வச்சுப் பொழிஞ்ச ராகங்களும் அந்த ராகங்கள் என் மனசுல என்னிக்குமில்லாத ஒரு புதுச் சுமையை ஏத்தி வச்சதும்.....சுமைகள் எனக்கு எப்பவுமே வேண்டி இருந்தன. அதனுடைய அழுத்தங்கள்-நானே வரவழைச்சிக்கிட்டுதுன்னாலும்-எனக்கு சுகமாகவே இருந்தன.” அவன் சிறிது நிறுத்தினான்.

குருமூர்த்தி அவனை விசித்திரமாய்ப் பார்த்தான். “என்னிடத்துல நீங்க எதையோ சொல்ல வரீங்க. ஆனா, சொல்லவும் தயங்கறீங்க. நீங்க எந்தத் தயக்கமும் இல்லாம என் கிட்டப் பேசலாம். ஆனா அதுக்காக நான் உங்கள வற்புறுத்த மாட்டேன்.”

“அதை நான் யார் கிட்ட வேணும்னாலும் சொல்லலாம், மிஸ்டர் குருமூர்த்தி!  ஆனா அதை நான் சொல்றப்போ, நீங்க ஒரு ‘சினிமா சிநேகிதன்’ மாதிரி, கேக்கக் கூடாது! ஒரு  உயிருள்ள மனுஷனோட யதார்த்தமான உணர்ச்சிகளை நாம இப்போ பகிர்ந்துக்கறோம்கிற அக்கறை உங்ககிட்டே இருக்கணும். “

குருமூர்த்தி தன்னைச் சரியாக அமர்த்திக் கொண்ட நிலையில் ஒரு சிகரெட்டை எடுத்து சுகுமாரிடம் நீட்டி, அதை அவன் பெற்றுக் கொண்ட பின்னர், தானும் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுகுமார் தன் சுட்டு விரலை நீட்டிக் குருமூர்த்திக்கு எதிர்ச் சாரியில் தெரியும் மஞ்சள் நிறக் கட்டிடம் ஒன்றைக் காட்டினான். அவன் விரல் நீண்ட திசையில் கம்பீரமாய்த் தெரிந்த அந்த மாடி வீட்டைச் சுற்றிலும் குரோட்டன்ஸ் செடிகளும் விசிறி வாழை களும் வளர்ந்திருந்தன. வெகு நாட்களாய் வர்ணம் பூசப் படாத நிலையில் பழுப்பும் கருப்புமாய்  ஓர் இரும்புக் கதவு  அந்த வீட்டின் காம்பவுண்ட் வாசலுக்குச் சிறை இட்ட மாதிரித் தெரிந்தது.

அந்த வீட்டிற்கு இருபுறமும் தள்ளித் தள்ளி அங்கங்கே சிறிதும் பெரிதுமாய் வீடுகள், மௌன விரதம் மேற்கொள்ளும் மனிதர்களைத் தாங்கிக் கொண்டிருப்பது போலக் கலகலப்பின்றி இருந்தன. தொலைவில் இந்த வீடுகளை எல்லாம் இணைக்கும் தெரு முனையில் ஒரு பழைய பலகையில் ‘அயோத்தி நகர் எக்ஸ்டன்ஷன், ஆறாவது தெரு’ என்று எழுதப் பட்டிருந்த வாசகங்கள் மங்கலாய்த் தெரிந்தன.

“மிஸ்டர் குருமூர்த்தி, அதோ தெரியுதே அந்த மாடி வீட்டுக்குப் பக்கத்துல, உள்ளடங்கினாற் போல...அந்த ஏழாம் நம்பர் வீட்டின் மாடி அறை தான் என்னோட இருப்பிடம். நான் இப்போ சொல்றது எல்லாமே ரெண்டு வருஷங்களுக்கு முன்னால எப்பப்பவோ  வெவ்வேற சந்தர்ப்பங்கள்ல நடந்த விஷயங்கள். தினமும் விடிகாலையில எழுந்து வயலின் சகிதமா இதே இடத்துல வந்து நான் உட்காருவேன். வயலின் கம்பிகள்ள எனக்குக் கட்டுப் படாமலேயே வில் அப்படியும் இப்படியும் நெளியும். வாய், அந்த ட்யூனோட இழைஞ்சி போற மாதிரி எனக்கு ரொம்பவும் பிடிச்ச ‘அன் ஏஞ்சல் இன் த சம்மர் நைட்’ நோட்சை இரைஞ்சு பாடும்.

“ஒரு நாள் ஒரு நிஸ்சலமான வைகறைப் பொழுதில், அந்த விசிறி வாழைக்குக் கீழே எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாம நான் அவளைப் பார்த்தேன். அவளோட உடம்பு அங்கேயும், கண்ணும் மனசும் இங்கேயும் இருந்ததை நான் ஓரப் பார்வையாக் கவனிச்சு, அதை லட்சியம் பண்ணாதவன் மாதிரி என் பாட்டுக்கு பிடில் கம்பிகள்ல விரல்களை ஓட விட்டுக்கிட்டிருந்தேன். ஆனா ஏனோ அந்த நேரத்துல என்  திறமைகள வழக்கத்துக்கு மாறா அதிகமாகவே நான் பிரயோகிச்சு வாசிக்கறதை என்னோட உள் மனம் எனக்கு உணர்த்திக்கிட்டே இருந்தது.”
சுருதிக்காக வயலின் தக்கைகளை முடுக்கி விட்டு,  ஸ்வரங்களைக் காதோடு காதாய் ஆராய்கிற வித்வானைப் போல சுகுமாரும் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசாமல் இருந்தான்.

“விசிரிவாழைக்குக் கீழே அவளை நான் பார்த்த கொஞ்ச நேரத்துக்கப்புறம், அந்த வீட்டிலேருந்து என்னை நோக்கி ஒரு இளைஞன் வர்றதைப் பார்த்தேன். வந்தவன் சுதாகர்னு தன்னை அறிமுகப் படுத்திக்கிட்டான். என்னோட சங்கீதம் அவனையும் அவனோட தங்கையையும் ரொம்பக் கவர்ந்திட்டதாச் சொன்னான். அந்த வீட்டை அவனோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னால தான் விலைக்கு வாங்கி இருக்கிறதா சொன்னான். சென்னையிலேருந்து இன்னும் கொஞ்ச நாள்ல அவரும் அவனோட அம்மாவும் இங்க வரப் போறதாவும் இப்போ இவனும் இவன் தங்கையும் மட்டும் வந்து தங்கி இருக்கிறதாவும் சொன்னான்.

“அவன் சொன்ன விவரங்கள் எல்லாம் எனக்குத் தேவை இல்லாததாத் தோணினாலும், ஒரு நகரீகத்துக்காக வெறுமனே தலைய ஆட்டினேன். ஆனா, என்னையும் மீறி என் கண்கள் அங்க போறதைத் தவிர்க்க முடியல. என்னை அவனோட அழைச்சிக்கிட்டுப் போயி வாசல்ல நிக்கற அவளைக் கூப்பிட்டு, ‘இவ என் சிஸ்டர்’னு சொல்லி அறிமுகப் படுத்தினான். நான் அவளைப் பார்த்து லேசா ‘ஸ்மைல்’ பண்ணினப்போ, அவ பதிலுக்கு அளவுக்கு அதிகமாவே சிரிச்சதா எனக்குப் பட்டது.

“அவ கேட்டா: ‘எனக்கு உங்களோட வாசிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க ஏன் இப்படி ஒரு நடைபாதைக் கலைஞன் மாதிரி ஒரு பொது இடத்துல உட்கார்ந்து வாசிக்கணும்?’

“நான் சொன்னேன்: ‘என்னைப் பொருத்த வரைக்கும் நான் சங்கீதத்தை வேற யாரையும் சந்தோஷப் படுத்தறதுக்காகவோ சபைகள்ல வாசிச்சுப் பாராட்டுப் பெறணுங்கிறதுக்காகவோ கத்துக்கல. என்னை சந்தோஷப் படுத்திக் கொள்ளவே நான் வாசிக்கறேன். எனக்கு நான் எந்த நோட்சை எப்படி வாசிக்கிறேன் என்கிறது தான் முக்கியமே தவிர, எந்த இடத்துலேருந்து வாசிக்கிறேன் என்கிறது முக்கியமில்ல.’

“நான் இப்படிச் சொல்லிட்டு அவளைப் பார்த்தேன். அப்போ அவளோட கண்கள்ல கிளம்பின மலர்ச்சியை எந்த விதத்துலயாவது, ஒரு ராகமா மாத்த முடியுமான்னு நான் அசட்டுத் தனமா யோசிச்சேன்!

“ஒரு நாள் நான் அவ பேரைக் கேட்டப்போ, அவ சிரிச்சிக்கிட்டே, ‘என் பேரைக் கூடத் தெரிஞ்சிக்காமயா நீங்க இத்தன நாள் பழகினீங்க?’ன்னு கேட்டுட்டு, தன் பேரு ரேணுகான்னு சொன்னா.”

சுகுமார் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தான். குருமூர்த்தியின் முகத்தில் விசித்திரமான சலனங்கள் நிறைந்திருப்பதை அவன் கவனித்தும் கவனிக்காதவன் போலவே இருந்தான்.

“ரேணுகா என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதலும் கடைசியுமான சிநேகிதியா இருந்தா. நாளாவட்டத்துல அவ அப்படிக் கூட இல்லாம அதுக்கும் மேற்பட்டு என் அந்தரங்கமான நேசங்களுக்குக் காரணமாய் இருக்கிற அற்புதமான ஒரு ராக வெள்ளமா மாறிப் போனா. பல இரவுகள் நான் அவள நினைச்சுத் தூங்காம இருந்தேன். சில சமயங்கள்ல என்னையும் மீறி, எனக்கே கேக்கிற மாதிரி பிடில் கம்பிகள் வழியா 'ரொஸட்டி’யோட ‘ப்ளஸ்ட் டாம்சல்’ கவிதைகள்ளேருந்து சில வரிகளை முணுமுணுப்புகளாத்  தவழ விடுவேன். என்னோட ஏக்கங்களக் கூட என்னால சந்கீதமாத்தான் பிரதிபலிக்க முடிஞ்சிதுங்கறது என்னோட பலமா பலவீனமான்னு இன்னி வரைக்கும் எனக்குப் புரியல.  

“ஒரு நாள் அவ ரொம்பவும் உற்சாகமா மீராபாயோட ‘மனமோகன தில்கா ப்யாரா’ங்கற பாட்டைப் பாடிக் காமிச்சு அதை பிடில்ல வாசிக்கச் சொன்னா. மீராவோட பத்தி ரசம் முழுசையும் ஒரு லைட் ட்யூன்ல அடக்கப் பிரயத்தனப் பட்டு, நான் முதல் முதலா சிரமப்பட்டு வாசிக்கறப்போ, அவ என் முன்னால தானே ஒரு மீராவாகி, சிரமமே இல்லாம அந்தப் பாவனைகளை முகத்துல தேக்கிக் காதல் வேதனைகளோட நிக்கற மாதிரி எனக்குத் தோணவே நான் திகைச்சுப் போனேன்,

“என் மனசுக்குள்ளேயே வளர்த்துக்கிட்ட ஏக்கத்துக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி- ஒரு நாள், சுதாகர் சொன்னான். அது, ரேணுகா என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாங்கற விஷயம். எனக்கு உடம்பெல்லாம் யாரோ ஒரு கூடை மல்லிகைப் பூக்களைக் கொண்டு வந்து கொட்டின மாதிரித் தோணிச்சு. ஆனா, என்னோட உணர்ச்சிகளை எல்லாம் மறைச்சுப் புதைச்சு வச்சுட்டு, எனக்கு அவன் சொன்னதில கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லைன்னும், அவளைப் போல இருக்கிற ஓர் அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இல்லவே இல்லைன்னும் சொன்னேன்.”

இந்த இடத்தில குர்மூர்த்தி சட்டென்று, “ஒ..மிஸ்டர் சுகுமார், நீங்க ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.

சுகுமார் விரக்தியாய்ச் சிரித்தான். “எனக்கு வயலின் நரம்புகளை ‘ஹேண்டில்’ பண்ணத் தெரிஞ்ச அளவுக்கு என் பிரச்சனைகளை ‘ஹேண்டில்’ பண்ணத் தெரிஞ்சிருக்கல. என்னை எந்த ஒரு அழகான பொண்ணும் காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவோ முடியாதுங்கற மாதிரி எனக்கொரு தாழ்வு மனப்பான்மை.

“ஆனா ரேனுகாவைப் பார்த்ததுக்கப்புறம், அவளோட ரசனைகளையும் குழைவுகளையும் ஆர்வம் தேங்கிப் பளபளக்கிற அந்த அழகான கண்களையும் சந்திச்சதுக்கப்புறம் என்னோட பிடிவாதங்கள் தளர்ந்து போய் அந்தரங்கக்துல ஆசைகள் வளர ஆரம்பிச்சுது. ஆனாலும் நான் ஏனோ இப்படி நெனச்சேன். ’எந்தப் பொண்ணும் என்னோட சந்கீத்தால கவரப்படலாம். அந்த அளவுக்கு என் சங்கீதம்  மேன்மையானது. ஆனா எந்தப் பொண்ணும் என் தோற்றத்தால கவரப்பட முடியாது. அந்த அளவுக்கு என் தோற்றம் கவர்ச்சி இல்லாதது..”

அவன் மேலே தொடராமல் மௌனமாய் இருந்தான். குருமூர்த்தி சுகுமாரைக் காட்டிலும் மிகவும் குழம்பிப் போயிருந்தான்.

“அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல சுதாகர் குடும்பம் ஏதோ சில காரணங்களுக்காக இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு சென்னைக்கே போனது. அவங்க  போயி ஒரு மாசம் கழிச்சு எனக்கு ஒரு நாள் ரேணுகாகாவோட கல்யாணப் பத்திரிகை வந்தது. ஏதோ ஒரு படபடப்பிலேயும் வெறியிலேயும் அந்தப் பத்திரிகையைச் சரியாப் பார்க்கக் கூடப் பொறுமை இல்லாம சிகரெட் தணல்லையே அதைக் கொளுத்தி அது திகுதிகுன்னு எரியறப்போ, ரோமாபுரியக் கொளுத்திட்டு எப்பவோ பிடில் வாசிச்ச நீரோ மாதிரி நானும் கடைசி முறையா அன்னிக்கு பிடில் வாசிச்சேன். ‘ஐ ஸீக் வாட் ஐ கெனாட் கெட், ஐ கெட் வாட் ஐ கெனாட் ஸீக்..’ என்ற தாகூரோட கவிதை வரிகளை எனக்கே புரிஞ்ச சங்கீத மொழியில நான் ஒரு பைத்தியக்காரனைப் போலப் புலம்பினேன்.

“மிஸ்டர் குருமூர்த்தி, முதன் முறையா என் தோள் வயலின் சுமையைத் தாங்க முடியாமல் கனக்கவே, அதை நிரந்தரமாப் பெட்டிக்குள்ள வச்சு மூடினேன். இந்தக் கல்லை சாசுவதமாக்கிக்கிட்டேன். நடைமுறையில நடக்க முடியாத சில விஷயங்களைக் கற்பனை பண்ணியே நடக்க வைக்கறதுல ஓர் அலாதி சுகம் இருக்குன்கிறது எனக்குப் புரியப்புரிய, நான் இங்க இருந்தபடியே என் கற்பனைகளை விரிச்சேன். அவளை மானசீகமா நானே மணந்தேன். இனிமையாக் குடும்பம் நடத்தினேன்.

சட்டென்று சுகுமார் விம்மி விம்மி அழுதான். குருமூர்த்தி அவனருகே வந்து அவன் கண்களைத் துடைத்தான். பிறகு, நிதானமாய் அவனிடம் இப்படிச் சொன்னான்: “மிஸ்டர் சுகுமார்! இப்பவாவது ஓர் உண்மையை நீங்க தெரிஞ்சிக்கணும். உங்க ரேணுகா நிஜமாகவே உங்களுக்கு சொந்தமாகி மூணு மாசத்துக்கும் மேல ஆகுது..”

சுகுமார் ஒன்றும் புரியாமல் அவனை ஏறிட்டு நோக்கினான்.

குருமூர்த்தி திடமான குரலில் சொன்னான்: “உங்க மேல அவளுக்கு ஏற்பட்டிருந்த அபரிதமான ஈடுபாடே ஒரு நோயா மாறி அவளைக் கொன்னுடுச்சு. ஒரு பொண்ணோட அந்தரங்கம் வெறும் உடற்கவர்ச்சியை மட்டும் தான் விரும்பும்னு நீங்க ரொம்ப மெகானிக்கலா தீர்மானிச்சிருக்கீங்க.”

சுகுமார் அதிர்ச்சியோடு கல்லிலிருந்து எழுந்து, உதடுகள் துடிக்கக் குருமூர்த்தியை நோக்கி ஏதோ கேட்க நினைத்த போது உடைந்து போன குரலில் அவன் சொன்னான்:

“என்னைத் தெரியலையா, உங்களுக்கு? தன்னோட உயிரை விட்டுட்ட நிலையில, தான் உங்களுக்குத் தான் சொந்தம்னு நிரூபிச்சிட்டுப் போயிட்ட அவளை, போன வருஷம் இதே நேரத்துல உயிரோட எனக்குச் சொந்தமா ஏத்துக்கிட்டவன் நான்..”

சுகுமார் உடம்பு பதற ‘ரேணு!’ என்று சிதறல்களாய் முணுமுணுத்துப் பழையபடியே அந்தக் கல்லில் தளர்ந்து உட்காரப் போன போது குருமூர்த்தி அவனைத் தடுத்தான்.

“நீங்க இந்தக் கல்லில் உட்கார்ந்து மானசீகமா அடைஞ்சு அனுபவிச்சிருக்கிற விஷயங்களை நான் நிஜமாக் கூட அனுபவிக்கல சுகுமார். ப்ளீஸ், இனிமே நீங்க மறுபடியும் இதுல உட்கார வேண்டாம்.. உங்க ரூமுக்குப் போயி அங்கேயிருந்தே மறுபடியும் உங்க பிடிலை எடுத்து ஏதாவது வாசியுங்க. ரேணுகாவை இழந்த மாதிரி உங்களோட சங்கீதத்தையும் நீங்க இழந்துடக் கூடாது.”

அவன் பேச்சில் இருக்கும் நியாயங்களைப் புரிந்து கொண்டவன் போல, சுகுமார் மெல்ல நடந்து தன அறையை நோக்கிப் போகிற போது குருமூர்த்தி முதன்முதலாய் அந்தக் கல்லை உற்று நோக்கி வறட்சியாய்ச் சிரித்தான். சுகுமார் அதில் உட்கார்ந்து இருந்த நேரமெல்லாம் அவனது தொடர்ச்சியான கற்பனைகளும் தாபங்களும் சுமையாய் அதில் இறங்கி இறங்கியே அது இப்படி நன்றாய்க் குழிந்து போய்விட்டதாய் நினைத்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தூரத்து வீட்டு மாடி அறையில் வயலின் இசையோடு இழைந்தாற்போல  அவன் உரத்த குரலில் ‘ஹேவ் யூ எவர் மெட் ஹர் ஆன் த வே டு ஹெவன்?’என்று பாடுவதைக் கேட்டுக் கொண்டே குருமூர்த்தி தானும் அந்தக் குழிந்த கல்லில் ஒரு கல்லாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 -(16-11-1973, தினமணி கதிரில் வெளி வந்தது.)

* * * 
(கொஞ்சம் காதல் வேட்கை, கொஞ்சம் சோகம், கொஞ்சம் தன்னிரக்கம், நிறைய ஏமாற்றம்,மேகங்களுக்கிடையிலிருந்து எட்டிப் பார்க்கும் மெல்லிய மின்னல் கீற்றுகள் மாதிரி இடையிடையே வாழ்க்கை மீதான நம்பிக்கை-இவையே என் ஆரம்ப காலச் சிறுகதைகளில் தூக்கலாக நின்ற அம்சங்களாக இருந்தன. 

சுய அனுபவங்களின் தாக்கம் சின்ன அடி நாதமாகப் படைப்புகளை வழி நடத்திச் சென்றிருக்கலாம் என்பதை முழுமையாக மறுப்பதற்கில்லை. வெளிப்படுத்த முடியாத, அல்லது வெளிப்படுத்த விரும்பாத சில பிரத்தியேக அந்தரங்க உணர்வுகளை உள்ளே வைத்துத் தவித்த படி வெளியே இயல்பாக இருப்பதாய்க் காட்டிக் கொள்ள முயலும் சில குண சித்திரங்களை வைத்துக் கதை எழுதுவதில் எனக்கு அந்தக் கால கட்டத்தில் ஒரு தனிப்பட்ட சுகம் இருந்திருக்கக் கூடும்!

எனது அத்தகைய சிறுகதைகளில் ஒன்று தான், இந்த 'பிடில் பெட்டி மூடிக் கிடக்கிறது'. 16-11-1973, தினமணி கதிரில் வெளி வந்தது.)



Friday, November 15, 2013

கனவில் ஒரு தூக்கம்


ந்த நேரத்தில் நித்யா அங்கு வருவாள் என்று எதிர்பார்க்காததாலேயே பிரபு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். ஆனால் அந்த ஆச்சரியத்தின் சாயல் எதுவுமே இன்றி, வழக்கத்துக்கு மாறான சோர்வுக் குறிகளோடு வதங்கிய முகமாய் அவள் நிற்கவே, அவனது ஆச்சரியம் சட்டென்று கரைந்து அதிர்ச்சியாய் இறுகியது.

அவள் ‘உள்ளே வரட்டுமா’ என்கிற மாதிரி கண்களை அசைத்தாள். ’இவளின் இந்த விழி அசைவுகளுக்கு மட்டும் என்ன விலை மதிப்பிடலாம்?’ என்று ஏனோ அர்த்தமே இன்றி எண்ணி ஒருவித உள் நெகிழ்ச்சியோடு அவளை அறைக்குள் அழைத்துப் போய் உட்காரச் சொன்னான் பிரபு.

கொஞ்ச நேரம் அவனையே கண் கொட்டாது பார்த்த நித்யா, அவனைப் போலத் தானும் புன்னகைக்க வேண்டும் என்று எண்ணி முயற்சி பண்ணித் தோற்றுப் போனாள்.

“இந்த நேரத்துல நான் ஏன் இங்க வந்தேன்னு நீங்க கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க கேக்கவே இல்ல...”

நித்யா இதைத் தயக்கங்களோடு சொல்கிற போது அவளின் இளஞ்சிவப்பான நெற்றிப் பொட்டிலும், இமை விளிம்பிலும் ஓரிரு வியர்வைத் துளிகள் அந்த ஊதற்காற்றிலும் உருவாகி இருந்தன.

அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். அதன் விளிம்பில் இருந்த இரண்டு பெரிய ‘யூஃபோம்’ தலையணைகளில் ஒன்றை ஒரு குழந்தையைத் தூக்குகிற லாகவத்தோடு தூக்கித் தன் மடியில் வைத்து அழுத்திக் கொண்டான். “இந்தக் கேள்வியை இந்த அறை நிலைப்படியிலேயே உன்கிட்டே என் பார்வையாலேயே நான் கேட்டுட்டேன். அதை நீ புரிஞ்சிக்கிட்டிருப்பேன்னு நான் நெனச்சேன். என்னுடைய பார்வைகளை நீயோ, உன்னுடைய பார்வைகளை நானோ அந்தந்த அர்த்தங்களோட அப்படியே புரிஞ்சிக்கறதுல இதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் நிதானிச்சுக் குழம்பினதில்ல. இப்போ, உன் கிட்ட மட்டும் ஏதோ ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுப் போயிருக்குங்கற மாதிரி, எனக்கு நெனைக்கத் தோணுது. “

அவள் தன் கைப்பையின் ‘ஜிப்’பை எதையோ எடுக்க நினைக்கிறவள் மாதிரி திறக்க ஆரம்பித்தாள். அப்போது ஏனோ அவளது மருதாணிச் சிவப்பேறிய அந்த மெல்லிய விரல்கள் அங்கங்கே தயங்கித் தயங்கி அசாத்தியமாய் நடுங்குவதை அவன் கவனித்தான். விரல்கள் ‘ஜிப்’பைப் பாதிக்கு மேல் திறக்க முடியாமல் நடுங்குகிற நிலையில் நின்றன. அவள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பிரபு பரபரத்து அவளருகே கட்டிலை இன்னும் கொஞ்சம் இழுத்துக் கொண்டு உட்கார்ந்தவனாய், “ஒ, நித்யா! உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

“நோ..நோ.. ஒண்ணுமில்ல பிரபு. சும்மாக் கொஞ்சம் நர்வஸா இருந்தது...” என்று சொல்லிப் போலியாய்ச் சிரித்தாள்.

பிரபு கட்டிலிலிருந்து எழுந்து வேகமாய் அறையின் மூலைக்குப் போய் ஒரு சின்ன மண் கூஜாவிலிருந்து குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி  எடுத்துக் கொண்டு வந்து அவளிடத்தில் நீட்டினான். அதை வாங்கிக் கொள்கிற போது அவள் விரல்களின்  அதிர்வில் அந்தக் கிளாஸ் டம்ளரின் நீர் சின்னச் சின்ன அலைகளாய் ஜனித்து, அந்தச் சலனங்களில் நித்யாவின் முகம் சிதறல்களாய்ப் பிரதிபலித்தது.  

அவன் அவளிடம் மெதுவாய்ச் சொன்னான்: “உன்னைக் கடைசியா நான் சந்திச்சது ஒரு மாசத்துக்கு முந்திய ஏதோ ஒரு வெள்ளிக் கிழமைன்னு எனக்கு ஞாபகம். அதுக்கப்புறம் உன்னை என்னால பார்க்க முடியல. உன் ஆபீசுக்கு ரெண்டு; மூணு தடவை போன் பண்ணினேன். நீ கெடைக்கல. உன்னை ஒன்னோட ஆபீசிலியோ, வீட்டிலியோ வந்து உரிமையாய்ப் பார்க்க முடியாம, ஒன்னோட தயக்கம் காரணமான வேண்டுகோள்களும் இந்த சமூகக் கண்களோட கூறான குதர்க்கப் பார்வைகளும்- எல்லாமாச் சேர்ந்து என்னைத் தடுத்துடுச்சு. நேத்திக்குத் தான் ரொம்ப யோசிச்சு உன்னைப் பத்தி என் அப்பாவுக்கு எழுதினேன். உன் அப்பாவைப் பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவா எடுத்திடணும்னு தீர்மானமா எழுதினேன்.”

“இந்த சமூகத்தோட பார்வைகள்ல நம்மோட ஒவ்வொரு மூவ்மெண்டும் பதிவாயிக்கிட்டே இருக்கு பிரபு. உங்களோட தனி அறைக்கு நான் வந்து போற விஷயம் கொஞ்சம் சாடை மாடையா வெளியில தெரியறப்போ கூட அது உங்களையோ என்னையோ பாதிக்கிற ஒரு கௌரவப் பிரச்சனையா ரொம்பவும் அசிங்கமா உருவெடுக்கக் கூடும்..”


ப்படி அன்றைக்குச் சொன்னவள் தான் இப்படி இந்த முன்னிரவு நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தானே இங்கு வந்ததில் அவன் ரொம்பவும் நம்பிக்கையின்றி ஆச்சரியப்பட்டான். ‘இந்த விஷத்திலும் இவளிடத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று நினைத்தவன், இப்படி ஒவ்வொரு நிலையிலேயும் இவளிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எல்லாம் திரட்டிச் சேர்க்கும் பொழுது ‘நித்யா’ என்கிற இவளே ஒரு பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி இங்கே வந்து நிற்கிறாளோ?-என்று குழப்பமாய் அவன் எண்ணினான்.

அவன் குழப்பங்களை மிகுதிப் படுத்துகிற மாதிரி அவள் இப்படிச் சொன்னாள்:

“அன்னிக்கு இங்கே வரணும்னு எனக்குத் தோணல்ல. ஏன்னா, என்னிக்காவது ஒருநாள் இங்கே வந்து நிரந்தரமாத் தங்கிடுவேன்னு நான் கற்பனை பண்ணி வந்சிருந்தேன். இன்னிக்கு..” இந்த இடத்தில், அவள் ரொம்ப ரொம்பத் தயங்கி வார்த்தைகளே கிடைக்காதவள் மாதிரித் தவித்து, உணர்வுகளின் படபடப்பு குரல் வழியாய்ப் பெருகுவதைத் தடுக்க முடியாமல் நடுங்கி-

அவன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, அவளின் தவிப்புகளை ரசிக்கிற மாதிரி விநோதமாய் அவளை வெறிக்க ஆரம்பித்தான்.

“பிரபு! இன்னிக்கு நிலை...மாறிடுச்சு. என்னிக்குமே இங்கேயோ அல்லது நீங்க இருக்கிற வேற எங்கேயோ நான் வந்து சேர்ந்திருக்கிற முடியாத நெலை உருவாயிருக்கு. அதனாலேயே முதலும் கடைசியுமா இன்னிக்கு இந்த நேரத்துல உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போயிடணும்னு நான் வந்தேன்...”

பிரபு ஒன்றுமே பேசாமல் சுருள் சுருளாய் ஆவேசம் வந்தவன் போலப் புகை வளையங்களை ஊதித் தள்ளுவதை அவள் பார்த்து லேசாய்ப் பயந்தாள். அதே சமயம், தங்களுக்கு மட்டுமே தெரிந்து நடந்திருந்த அந்தரங்கமான சில ‘செலவழிப்புகளும், சம்பாதிப்புகளும்’ இப்போது அந்தப் புகை  வளையங்களைப் போல இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றில் கலந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்து விடப் போகிற அநித்தியங்களாய்-வெறும் பொய்த் தோற்றங்களாய்த் தோன்றவே, அவள் தன் மனம் முழுதும் துக்கச் சுமை அழுத்தி எடுப்பதை உணர்ந்தாள்.

“பிரபு! ப்ளீஸ், ஏதாவது பேசுங்களேன். உங்களோட மௌனம் எண்ணக் கொல்லுது..”

பிரபு சட்டென்று சிரித்தான். ”வார்த்தைகளை விட மௌனம் அதிகமாக் கொல்றதுண்டா, நித்யா?”

அவள் பதிலின்றி மௌனமானாள். அவன் சற்று நடந்து விட்டு மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவள் இப்போது மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாய், பாதித் திறந்த கைப்பையை முழுக்கவும் திறந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை அதற்குள் இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே அனுமானித்தது போலவே ரொம்பவும் நிதானமாய் அவசரமேயின்றிப் பிரித்து உள்ளேயிருந்த அவளின் கல்யாணப் பத்திரிகையை ஒரு முறை நோட்டமிட்டான். ஒரு வினாடி கழித்து, டர்க்கிட் டவலால் முகத்தை நன்றாய்த் துடைத்து விட்டுக் கொண்டு, “கன்கிராஜூலேஷன்ஸ், நித்யா!” என்றான்.

அந்த வார்த்தைகளின் உள்ளீடான புழுக்கம் புரிந்து, ‘இவன் தன் உள்ளுணர்ச்சிகளை வேண்டும் என்றே பலாத்காரமாய் அடக்கிக் கொண்டு, வலிதாய்த் தனக்கு வாழ்த்துக் கூறுகிறான்’ என்று எண்ணினாள் நித்யா. அவள் ரொம்பவும் துக்கம் கம்மச் சொன்னாள்:

“ஐ ஆம் வெரி சாரி பிரபு! என்னைக் கொஞ்சம் பேச அனுமதிப்பீங்களா? ஒரு சில நிர்ப்பந்தங்களின் காரணமாகவே, நான் வழி இல்லாமத் தான் இந்தக் காரியத்துக்கு உடன்பட வேண்டியிருந்ததுன்னு உங்களுக்குப் புரிய வைக்கிற கடமை எனக்கு இருக்கு.”

பிரபு லேசாய்ச் சிரித்தான். “நாட் நெசஸ்ஸரி நித்யா.. அதெல்லாம் தெரிஞ்சுக்கவும் நான் ஆசைப்படல. சில நிர்ப்பந்தங்களுக்காக ஒருத்தரைக் காதலிக்கறதும், வேற சில நிர்ப்பந்தங்களுக்காக இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கறதும் இந்தக் காலத்துல ரொம்பவும் சகஜம்.”

நித்யா கொஞ்ச நேரம் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். “பிரபு..நான் இப்பக் கூட உங்களை மனப்பூர்வமாக் காதலிக்கறேன்...”

பிரபு சொன்னான்: “இந்த ஃபார்மல் வசனங்களால யாருக்கு என்ன பிரயோஜனம்? இனி உன்னை நானோ என்னை நீயோ தொடர்ந்து காதலிக்கறதால உனக்கோ எனக்கோதான் என்ன லாபம்? முதல்ல இந்தக் காதல்ங்கற வார்த்தைக்கு நாம என்ன அர்த்தம் கொடுத்து உபயோகிச்சிக்கிட்டிருக்கோம்னே எனக்குப் புரியல...”

“பிரபு, உங்களோட துக்கம் எனக்குப் புரியுது. இழப்போட துயரத்தை உள்ள அடக்கிக்கிட்டு, இப்படி விரக்தியா  வெளியில பேசறீங்க..”

பிரபு கேட்டான். “இழப்பா? எதை இழந்துருக்கேன் இப்போ? நான் இழந்துட்டதா நீ சொல்ற எதையுமே நான்  இன்னும் அடையவே இல்லியே?”

நித்யாவுக்கு வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அவள் தன்னை சிரமப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொண்டபோது அந்தத் துயர நெருக்கத்தில் அட்டைப் பெட்டிக்குள் இருக்கிற சிவப்பு பல்பைப் போல அவளின் அழகிய வெண் விழிப் படலம் லேசாய்ச் சிவந்து தெரிந்தது.

அவள் அந்தச் சிவப்பு முழுதும் கரைந்து போகிற மாதிரிப் பெரிதாய் அவனைத் தழுவிக்கொண்டு அழ வேண்டும் என்று உள்ளூரக் கொஞ்ச நேரம் ஏங்கினாள். அவன், அவள் முன்னால் ஏதேதோ அர்த்தங்கள் பேசுகிற பார்வைகளோடு தன் சுண்டு விரல் நகத்தை லேசாய்க் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

நித்யா சட்டென்று அவன் கைகளைத் தன் நடுங்கும் கைகளால் இறுகப் பற்றியபடிக் குரல் உடைந்து சிதற, நெஞ்சின் உள் ஓசை பறை போல வெளியேயும் விட்டு விட்டு அதிர, “பிரபு” என்று வார்த்தைகள் இன்றித் தடுமாறினாள்.

“மனிதர்கள் மார்றப்போ, கூடவே அவங்களோட அக்கறைகளும் மாறிடும்னு எனக்கு இப்பத்தான் லேசாப் புரியுது. அந்த அளவுக்கு இங்க ஒவ்வொருத்தரோட உணர்ச்சிகளும் ரொம்ப பலவீனப்பட்டுப் போயிருக்கு. இப்போ, நான் குறிப்பா எதையுமே ஃபீல் பண்ணல. நீ என் கிட்டேயிருந்து பிரிஞ்சு யாரோடயோ வாழறதுக்காகப் போறேங்கிற ஒரு சின்ன உணர்ச்சியைத் தவிர எனக்கு வேற எதுவுமே ஏற்படல. அது யாருன்னு தெரிசிக்கக்கூட எனக்கு ஆசையோ  வேகமோ கொஞ்சமும் இல்ல. உன்னை அடையப் போற அவன் மேல எனக்குப் பொறாமை கூடக் கிடையாது. அவனை ரொம்பவும் ‘அதிர்ஷ்டசாலி’ன்னு நீ அவனுக்குக் கிடைச்சிட்டதாலேயே நான் எல்லோரையும் போல வர்ணிச்சுட்டேன்னா, அப்புறம் நீ எனக்குக் கெடைக்காதது ஒரு ஈடு செய்ய முடியாத நஷ்டம்னு நானே உள்ளூர ஏங்கறதா அர்த்தமாயிடும். அந்த அளவுக்கு என்னை நான் அகௌரவப் படுத்திக்க எப்பவும் விரும்ப மாட்டேன். பெஸ்ட் விஷஸ் நித்யா..!”.

‘இவனால் எவ்விதம் இப்படியெல்லாம் பேச முடிகிறது?’ என்று அவள் எண்ணிச் சிலிர்த்த போது, ‘இவனை நாம் இழந்து விட்டோம்’ என்கிற மாதிரி ஓர் உணர்வு மலை போல் வளர்ந்து நின்று அவளை வதைத்தது.

அவள் கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள். அவனும் அவளை வழியனுப்புவதற்காக எழுந்து கொண்டான். அவனிடமிருந்து விடை பெறவே முடியாமல் தேம்பித் தவிப்பவள் போல் விழிகள் படபடத்து நடுங்க அவள் அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு  நின்றாள். பின் தயக்கங்களோடு மெல்ல வெளியேறினாள்.

மாடிப்படியின் விளிம்பிலிருந்தபடியே அவள் தெருவில் ஓர் இரவு காலத்துத் தேவதையைப் போல நடந்து போய்க் கொண்டிருப்பதை விழிகள் முழுதும் ஏக்கங்கள் நிறையப் பார்த்து விட்டுப் பிரபு உள்ளே வந்தான். கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். சன்னல் திரைச் சீலையைப் பார்த்துக் கொஞ்ச நேரம் அதற்குள் ஏதேதோ பழைய ‘கனவுகளை’ ஓடவிடுவதாய்க் கற்பனை பண்ணினான்.,

ஏனோ அவனுக்கு அந்த நேரத்தில் தனக்கும் அவளுக்கும் இடையே மட்டும் அந்தரங்கமாய் இனிமையாய் நடந்து முடிந்திருந்த சில பழைய நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்த மன நிலையில், தனக்குத் தூக்கம் வர முடியும் என்று அவனுக்குத் தோன்றாததால், அவன் ஆவேசமாய் அலமாரியைத் திறந்து தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்துக் கொண்டான். மாத்திரைகளை ஒவ்வொன்றாய் ஆவேசமாய் வாயில் போட்டுக் கொண்டான்.

‘தூங்குகிற போது கனவு காண்கிறவர்களே நிறைந்திருக்கிற உலகத்தில், கனவு காண்பதற்காகவே தூங்க விரும்புகிற முதல் மனிதன் நான்..’ என்று முணுமுணுத்தான். அந்த நிலையிலேயே நித்யாவைத் தான் நினைக்கிற கோணங்களில் எல்லாம் கற்பனை செய்து கனவில் ரசிக்க ஆரம்பித்தான்.

அவன் கனவில் நித்யா ஒளிப் பிழம்பாய்த் தோன்றி அவன் முன்னால் நெளிந்தாள். அவளை நெருங்க நெருங்க அவன் ஓடினான். திடீரென்று நித்யா மங்க ஆரம்பித்தாள். அவளைப் பிடிக்க முடியாமல் திண்டாடித் தவித்த பிரபு, பாவம்- சிறிது நேரத்திலேயே கனவிலும் தூங்கிப் போனான்.


 --தினமணி கதிர், 24.08.1973
*
(தூங்கும் போது கனவு காண்கிறவர்கள் மத்தியில் கனவு காண்பதற்காகவே தூங்க ஆரம்பிக்கிற இவன், இறுதியில் கனவிலும் தூங்கிப் போகிறான்!என் 'கனவில் ஒரு தூக்கம்' என்ற இந்தச் சிறுகதை, 24.8.73 தினமணி கதிரில் பிரசுரமானது. அது மட்டுமன்றி, அந்த ஆண்டு இறுதியில், கதிரின் 'ஆகஸ்ட் மாதத்துச் சிறந்த சிறுகதையாக 'கனவில் ஒரு தூக்க'ம் தினமணி கதிரால் தேர்வு செய்யப்பட்டது. இப்போது நினைத்துப் பார்த்தால், எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கிறது!)