Friday, November 15, 2013

கனவில் ஒரு தூக்கம்


ந்த நேரத்தில் நித்யா அங்கு வருவாள் என்று எதிர்பார்க்காததாலேயே பிரபு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். ஆனால் அந்த ஆச்சரியத்தின் சாயல் எதுவுமே இன்றி, வழக்கத்துக்கு மாறான சோர்வுக் குறிகளோடு வதங்கிய முகமாய் அவள் நிற்கவே, அவனது ஆச்சரியம் சட்டென்று கரைந்து அதிர்ச்சியாய் இறுகியது.

அவள் ‘உள்ளே வரட்டுமா’ என்கிற மாதிரி கண்களை அசைத்தாள். ’இவளின் இந்த விழி அசைவுகளுக்கு மட்டும் என்ன விலை மதிப்பிடலாம்?’ என்று ஏனோ அர்த்தமே இன்றி எண்ணி ஒருவித உள் நெகிழ்ச்சியோடு அவளை அறைக்குள் அழைத்துப் போய் உட்காரச் சொன்னான் பிரபு.

கொஞ்ச நேரம் அவனையே கண் கொட்டாது பார்த்த நித்யா, அவனைப் போலத் தானும் புன்னகைக்க வேண்டும் என்று எண்ணி முயற்சி பண்ணித் தோற்றுப் போனாள்.

“இந்த நேரத்துல நான் ஏன் இங்க வந்தேன்னு நீங்க கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க கேக்கவே இல்ல...”

நித்யா இதைத் தயக்கங்களோடு சொல்கிற போது அவளின் இளஞ்சிவப்பான நெற்றிப் பொட்டிலும், இமை விளிம்பிலும் ஓரிரு வியர்வைத் துளிகள் அந்த ஊதற்காற்றிலும் உருவாகி இருந்தன.

அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். அதன் விளிம்பில் இருந்த இரண்டு பெரிய ‘யூஃபோம்’ தலையணைகளில் ஒன்றை ஒரு குழந்தையைத் தூக்குகிற லாகவத்தோடு தூக்கித் தன் மடியில் வைத்து அழுத்திக் கொண்டான். “இந்தக் கேள்வியை இந்த அறை நிலைப்படியிலேயே உன்கிட்டே என் பார்வையாலேயே நான் கேட்டுட்டேன். அதை நீ புரிஞ்சிக்கிட்டிருப்பேன்னு நான் நெனச்சேன். என்னுடைய பார்வைகளை நீயோ, உன்னுடைய பார்வைகளை நானோ அந்தந்த அர்த்தங்களோட அப்படியே புரிஞ்சிக்கறதுல இதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் நிதானிச்சுக் குழம்பினதில்ல. இப்போ, உன் கிட்ட மட்டும் ஏதோ ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுப் போயிருக்குங்கற மாதிரி, எனக்கு நெனைக்கத் தோணுது. “

அவள் தன் கைப்பையின் ‘ஜிப்’பை எதையோ எடுக்க நினைக்கிறவள் மாதிரி திறக்க ஆரம்பித்தாள். அப்போது ஏனோ அவளது மருதாணிச் சிவப்பேறிய அந்த மெல்லிய விரல்கள் அங்கங்கே தயங்கித் தயங்கி அசாத்தியமாய் நடுங்குவதை அவன் கவனித்தான். விரல்கள் ‘ஜிப்’பைப் பாதிக்கு மேல் திறக்க முடியாமல் நடுங்குகிற நிலையில் நின்றன. அவள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பிரபு பரபரத்து அவளருகே கட்டிலை இன்னும் கொஞ்சம் இழுத்துக் கொண்டு உட்கார்ந்தவனாய், “ஒ, நித்யா! உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

“நோ..நோ.. ஒண்ணுமில்ல பிரபு. சும்மாக் கொஞ்சம் நர்வஸா இருந்தது...” என்று சொல்லிப் போலியாய்ச் சிரித்தாள்.

பிரபு கட்டிலிலிருந்து எழுந்து வேகமாய் அறையின் மூலைக்குப் போய் ஒரு சின்ன மண் கூஜாவிலிருந்து குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி  எடுத்துக் கொண்டு வந்து அவளிடத்தில் நீட்டினான். அதை வாங்கிக் கொள்கிற போது அவள் விரல்களின்  அதிர்வில் அந்தக் கிளாஸ் டம்ளரின் நீர் சின்னச் சின்ன அலைகளாய் ஜனித்து, அந்தச் சலனங்களில் நித்யாவின் முகம் சிதறல்களாய்ப் பிரதிபலித்தது.  

அவன் அவளிடம் மெதுவாய்ச் சொன்னான்: “உன்னைக் கடைசியா நான் சந்திச்சது ஒரு மாசத்துக்கு முந்திய ஏதோ ஒரு வெள்ளிக் கிழமைன்னு எனக்கு ஞாபகம். அதுக்கப்புறம் உன்னை என்னால பார்க்க முடியல. உன் ஆபீசுக்கு ரெண்டு; மூணு தடவை போன் பண்ணினேன். நீ கெடைக்கல. உன்னை ஒன்னோட ஆபீசிலியோ, வீட்டிலியோ வந்து உரிமையாய்ப் பார்க்க முடியாம, ஒன்னோட தயக்கம் காரணமான வேண்டுகோள்களும் இந்த சமூகக் கண்களோட கூறான குதர்க்கப் பார்வைகளும்- எல்லாமாச் சேர்ந்து என்னைத் தடுத்துடுச்சு. நேத்திக்குத் தான் ரொம்ப யோசிச்சு உன்னைப் பத்தி என் அப்பாவுக்கு எழுதினேன். உன் அப்பாவைப் பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவா எடுத்திடணும்னு தீர்மானமா எழுதினேன்.”

“இந்த சமூகத்தோட பார்வைகள்ல நம்மோட ஒவ்வொரு மூவ்மெண்டும் பதிவாயிக்கிட்டே இருக்கு பிரபு. உங்களோட தனி அறைக்கு நான் வந்து போற விஷயம் கொஞ்சம் சாடை மாடையா வெளியில தெரியறப்போ கூட அது உங்களையோ என்னையோ பாதிக்கிற ஒரு கௌரவப் பிரச்சனையா ரொம்பவும் அசிங்கமா உருவெடுக்கக் கூடும்..”


ப்படி அன்றைக்குச் சொன்னவள் தான் இப்படி இந்த முன்னிரவு நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தானே இங்கு வந்ததில் அவன் ரொம்பவும் நம்பிக்கையின்றி ஆச்சரியப்பட்டான். ‘இந்த விஷத்திலும் இவளிடத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று நினைத்தவன், இப்படி ஒவ்வொரு நிலையிலேயும் இவளிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எல்லாம் திரட்டிச் சேர்க்கும் பொழுது ‘நித்யா’ என்கிற இவளே ஒரு பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி இங்கே வந்து நிற்கிறாளோ?-என்று குழப்பமாய் அவன் எண்ணினான்.

அவன் குழப்பங்களை மிகுதிப் படுத்துகிற மாதிரி அவள் இப்படிச் சொன்னாள்:

“அன்னிக்கு இங்கே வரணும்னு எனக்குத் தோணல்ல. ஏன்னா, என்னிக்காவது ஒருநாள் இங்கே வந்து நிரந்தரமாத் தங்கிடுவேன்னு நான் கற்பனை பண்ணி வந்சிருந்தேன். இன்னிக்கு..” இந்த இடத்தில், அவள் ரொம்ப ரொம்பத் தயங்கி வார்த்தைகளே கிடைக்காதவள் மாதிரித் தவித்து, உணர்வுகளின் படபடப்பு குரல் வழியாய்ப் பெருகுவதைத் தடுக்க முடியாமல் நடுங்கி-

அவன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, அவளின் தவிப்புகளை ரசிக்கிற மாதிரி விநோதமாய் அவளை வெறிக்க ஆரம்பித்தான்.

“பிரபு! இன்னிக்கு நிலை...மாறிடுச்சு. என்னிக்குமே இங்கேயோ அல்லது நீங்க இருக்கிற வேற எங்கேயோ நான் வந்து சேர்ந்திருக்கிற முடியாத நெலை உருவாயிருக்கு. அதனாலேயே முதலும் கடைசியுமா இன்னிக்கு இந்த நேரத்துல உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போயிடணும்னு நான் வந்தேன்...”

பிரபு ஒன்றுமே பேசாமல் சுருள் சுருளாய் ஆவேசம் வந்தவன் போலப் புகை வளையங்களை ஊதித் தள்ளுவதை அவள் பார்த்து லேசாய்ப் பயந்தாள். அதே சமயம், தங்களுக்கு மட்டுமே தெரிந்து நடந்திருந்த அந்தரங்கமான சில ‘செலவழிப்புகளும், சம்பாதிப்புகளும்’ இப்போது அந்தப் புகை  வளையங்களைப் போல இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றில் கலந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்து விடப் போகிற அநித்தியங்களாய்-வெறும் பொய்த் தோற்றங்களாய்த் தோன்றவே, அவள் தன் மனம் முழுதும் துக்கச் சுமை அழுத்தி எடுப்பதை உணர்ந்தாள்.

“பிரபு! ப்ளீஸ், ஏதாவது பேசுங்களேன். உங்களோட மௌனம் எண்ணக் கொல்லுது..”

பிரபு சட்டென்று சிரித்தான். ”வார்த்தைகளை விட மௌனம் அதிகமாக் கொல்றதுண்டா, நித்யா?”

அவள் பதிலின்றி மௌனமானாள். அவன் சற்று நடந்து விட்டு மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவள் இப்போது மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாய், பாதித் திறந்த கைப்பையை முழுக்கவும் திறந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை அதற்குள் இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே அனுமானித்தது போலவே ரொம்பவும் நிதானமாய் அவசரமேயின்றிப் பிரித்து உள்ளேயிருந்த அவளின் கல்யாணப் பத்திரிகையை ஒரு முறை நோட்டமிட்டான். ஒரு வினாடி கழித்து, டர்க்கிட் டவலால் முகத்தை நன்றாய்த் துடைத்து விட்டுக் கொண்டு, “கன்கிராஜூலேஷன்ஸ், நித்யா!” என்றான்.

அந்த வார்த்தைகளின் உள்ளீடான புழுக்கம் புரிந்து, ‘இவன் தன் உள்ளுணர்ச்சிகளை வேண்டும் என்றே பலாத்காரமாய் அடக்கிக் கொண்டு, வலிதாய்த் தனக்கு வாழ்த்துக் கூறுகிறான்’ என்று எண்ணினாள் நித்யா. அவள் ரொம்பவும் துக்கம் கம்மச் சொன்னாள்:

“ஐ ஆம் வெரி சாரி பிரபு! என்னைக் கொஞ்சம் பேச அனுமதிப்பீங்களா? ஒரு சில நிர்ப்பந்தங்களின் காரணமாகவே, நான் வழி இல்லாமத் தான் இந்தக் காரியத்துக்கு உடன்பட வேண்டியிருந்ததுன்னு உங்களுக்குப் புரிய வைக்கிற கடமை எனக்கு இருக்கு.”

பிரபு லேசாய்ச் சிரித்தான். “நாட் நெசஸ்ஸரி நித்யா.. அதெல்லாம் தெரிஞ்சுக்கவும் நான் ஆசைப்படல. சில நிர்ப்பந்தங்களுக்காக ஒருத்தரைக் காதலிக்கறதும், வேற சில நிர்ப்பந்தங்களுக்காக இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கறதும் இந்தக் காலத்துல ரொம்பவும் சகஜம்.”

நித்யா கொஞ்ச நேரம் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். “பிரபு..நான் இப்பக் கூட உங்களை மனப்பூர்வமாக் காதலிக்கறேன்...”

பிரபு சொன்னான்: “இந்த ஃபார்மல் வசனங்களால யாருக்கு என்ன பிரயோஜனம்? இனி உன்னை நானோ என்னை நீயோ தொடர்ந்து காதலிக்கறதால உனக்கோ எனக்கோதான் என்ன லாபம்? முதல்ல இந்தக் காதல்ங்கற வார்த்தைக்கு நாம என்ன அர்த்தம் கொடுத்து உபயோகிச்சிக்கிட்டிருக்கோம்னே எனக்குப் புரியல...”

“பிரபு, உங்களோட துக்கம் எனக்குப் புரியுது. இழப்போட துயரத்தை உள்ள அடக்கிக்கிட்டு, இப்படி விரக்தியா  வெளியில பேசறீங்க..”

பிரபு கேட்டான். “இழப்பா? எதை இழந்துருக்கேன் இப்போ? நான் இழந்துட்டதா நீ சொல்ற எதையுமே நான்  இன்னும் அடையவே இல்லியே?”

நித்யாவுக்கு வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அவள் தன்னை சிரமப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொண்டபோது அந்தத் துயர நெருக்கத்தில் அட்டைப் பெட்டிக்குள் இருக்கிற சிவப்பு பல்பைப் போல அவளின் அழகிய வெண் விழிப் படலம் லேசாய்ச் சிவந்து தெரிந்தது.

அவள் அந்தச் சிவப்பு முழுதும் கரைந்து போகிற மாதிரிப் பெரிதாய் அவனைத் தழுவிக்கொண்டு அழ வேண்டும் என்று உள்ளூரக் கொஞ்ச நேரம் ஏங்கினாள். அவன், அவள் முன்னால் ஏதேதோ அர்த்தங்கள் பேசுகிற பார்வைகளோடு தன் சுண்டு விரல் நகத்தை லேசாய்க் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

நித்யா சட்டென்று அவன் கைகளைத் தன் நடுங்கும் கைகளால் இறுகப் பற்றியபடிக் குரல் உடைந்து சிதற, நெஞ்சின் உள் ஓசை பறை போல வெளியேயும் விட்டு விட்டு அதிர, “பிரபு” என்று வார்த்தைகள் இன்றித் தடுமாறினாள்.

“மனிதர்கள் மார்றப்போ, கூடவே அவங்களோட அக்கறைகளும் மாறிடும்னு எனக்கு இப்பத்தான் லேசாப் புரியுது. அந்த அளவுக்கு இங்க ஒவ்வொருத்தரோட உணர்ச்சிகளும் ரொம்ப பலவீனப்பட்டுப் போயிருக்கு. இப்போ, நான் குறிப்பா எதையுமே ஃபீல் பண்ணல. நீ என் கிட்டேயிருந்து பிரிஞ்சு யாரோடயோ வாழறதுக்காகப் போறேங்கிற ஒரு சின்ன உணர்ச்சியைத் தவிர எனக்கு வேற எதுவுமே ஏற்படல. அது யாருன்னு தெரிசிக்கக்கூட எனக்கு ஆசையோ  வேகமோ கொஞ்சமும் இல்ல. உன்னை அடையப் போற அவன் மேல எனக்குப் பொறாமை கூடக் கிடையாது. அவனை ரொம்பவும் ‘அதிர்ஷ்டசாலி’ன்னு நீ அவனுக்குக் கிடைச்சிட்டதாலேயே நான் எல்லோரையும் போல வர்ணிச்சுட்டேன்னா, அப்புறம் நீ எனக்குக் கெடைக்காதது ஒரு ஈடு செய்ய முடியாத நஷ்டம்னு நானே உள்ளூர ஏங்கறதா அர்த்தமாயிடும். அந்த அளவுக்கு என்னை நான் அகௌரவப் படுத்திக்க எப்பவும் விரும்ப மாட்டேன். பெஸ்ட் விஷஸ் நித்யா..!”.

‘இவனால் எவ்விதம் இப்படியெல்லாம் பேச முடிகிறது?’ என்று அவள் எண்ணிச் சிலிர்த்த போது, ‘இவனை நாம் இழந்து விட்டோம்’ என்கிற மாதிரி ஓர் உணர்வு மலை போல் வளர்ந்து நின்று அவளை வதைத்தது.

அவள் கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள். அவனும் அவளை வழியனுப்புவதற்காக எழுந்து கொண்டான். அவனிடமிருந்து விடை பெறவே முடியாமல் தேம்பித் தவிப்பவள் போல் விழிகள் படபடத்து நடுங்க அவள் அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு  நின்றாள். பின் தயக்கங்களோடு மெல்ல வெளியேறினாள்.

மாடிப்படியின் விளிம்பிலிருந்தபடியே அவள் தெருவில் ஓர் இரவு காலத்துத் தேவதையைப் போல நடந்து போய்க் கொண்டிருப்பதை விழிகள் முழுதும் ஏக்கங்கள் நிறையப் பார்த்து விட்டுப் பிரபு உள்ளே வந்தான். கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். சன்னல் திரைச் சீலையைப் பார்த்துக் கொஞ்ச நேரம் அதற்குள் ஏதேதோ பழைய ‘கனவுகளை’ ஓடவிடுவதாய்க் கற்பனை பண்ணினான்.,

ஏனோ அவனுக்கு அந்த நேரத்தில் தனக்கும் அவளுக்கும் இடையே மட்டும் அந்தரங்கமாய் இனிமையாய் நடந்து முடிந்திருந்த சில பழைய நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்த மன நிலையில், தனக்குத் தூக்கம் வர முடியும் என்று அவனுக்குத் தோன்றாததால், அவன் ஆவேசமாய் அலமாரியைத் திறந்து தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்துக் கொண்டான். மாத்திரைகளை ஒவ்வொன்றாய் ஆவேசமாய் வாயில் போட்டுக் கொண்டான்.

‘தூங்குகிற போது கனவு காண்கிறவர்களே நிறைந்திருக்கிற உலகத்தில், கனவு காண்பதற்காகவே தூங்க விரும்புகிற முதல் மனிதன் நான்..’ என்று முணுமுணுத்தான். அந்த நிலையிலேயே நித்யாவைத் தான் நினைக்கிற கோணங்களில் எல்லாம் கற்பனை செய்து கனவில் ரசிக்க ஆரம்பித்தான்.

அவன் கனவில் நித்யா ஒளிப் பிழம்பாய்த் தோன்றி அவன் முன்னால் நெளிந்தாள். அவளை நெருங்க நெருங்க அவன் ஓடினான். திடீரென்று நித்யா மங்க ஆரம்பித்தாள். அவளைப் பிடிக்க முடியாமல் திண்டாடித் தவித்த பிரபு, பாவம்- சிறிது நேரத்திலேயே கனவிலும் தூங்கிப் போனான்.


 --தினமணி கதிர், 24.08.1973
*
(தூங்கும் போது கனவு காண்கிறவர்கள் மத்தியில் கனவு காண்பதற்காகவே தூங்க ஆரம்பிக்கிற இவன், இறுதியில் கனவிலும் தூங்கிப் போகிறான்!என் 'கனவில் ஒரு தூக்கம்' என்ற இந்தச் சிறுகதை, 24.8.73 தினமணி கதிரில் பிரசுரமானது. அது மட்டுமன்றி, அந்த ஆண்டு இறுதியில், கதிரின் 'ஆகஸ்ட் மாதத்துச் சிறந்த சிறுகதையாக 'கனவில் ஒரு தூக்க'ம் தினமணி கதிரால் தேர்வு செய்யப்பட்டது. இப்போது நினைத்துப் பார்த்தால், எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கிறது!)

Wednesday, November 6, 2013

பூர்ணிமா

பிரபல புல்லாங் குழல் வித்வான் ராம்பாபு வினுடைய கார் சாந்தி புரத்துக்கு இன்னும் ஏழெட்டு மைல் இருக்கிற போது ஒரு பிரபலமல்லாத கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்த உடனேயே ஏதோ இஞ்சின் கோளாறு காரணமாய்ச் சட்டென்று நின்று போனது. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குப் பின் சாந்திபுரம் மிராசுதார் வீட்டுக் கல்யாணத்தில் தான் செய்யப் போகிற புல்லாங்குழல் கச்சேரியிலேயே அவனது கவனமும் ஆர்வமும் நிறைந்திருந்த நேரத்தில் இப்படி ஓர் இடையூறு நேரவே, ஏற்கெனெவே சிவந்த முகம் இன்னும் சிவக்க டிரைவரைக் கோபித்துக் கூச்சலிட்டான்.

அவனருகே இருந்த அவன் மனைவி பூர்ணிமா இப்படி அவன் கூச்சலும் கோபமுமாய்ச் செய்கிற ‘ராகமாலிகை’களை ஒரு சிரமுமின்றி வினாடியில் சிரிப்பாக்கி அவனைக் குளுமைப் படுத்தினாள். அவனது கை விரல்களை நளினமாய்ப் பற்றிக் கொண்டு “டிரைவர் இன்ஜினை சரி பண்ணிட்டுக் கூப்பிடட்டும். அப்படி ஒண்ணும் இப்ப நேரமாயிடல. நாம இந்த ஊருக்குள்ள கொஞ்ச தூரம் காலாற நடந்துட்டு வரலாமே?” என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினாள்.‘இவள் விழிகள் விரிகிற அளவுக்கு இந்த ஊரில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது?’ என்று புரியாமல், ஒருவித சலிப்போடு அவன் அவளோடு அந்த ஊருக்குள் நடந்தான்.

மலைப்புறத்து ஊரானதால் அதற்குரிய ரம்மியங்களோடு அழகு கொழித்துச் சிதற, சிலு சிலுவென்ற மலைக்காற்று மேனியெங்கும் மொய்த்துப் பரவ, அந்த ஊரின் ஒவ்வோர் இடமும் கவர்ச்சியாய் இருப்பதைப் பூர்ணிமா கவனித்து, பூப்பந்தாய் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு துள்ளினாள். திடீரென்று அவள் சொன்னாள்: “உங்க கையில இப்ப மட்டும் புல்லாங்குழல் இருந்திருந்தா, இந்த இடத்துலேயே ஒரு மோகனம் வாசிக்கச் சொல்லி இருப்பேன்..”

ராம்பாபுவின் முகம் சுருங்கியது. “நான்சென்ஸ்! என்னை என்ன தெருத் தெருவா வாசிக்கிற நாடோடிப் பிச்சைக் காரன்னு நினைச்சியா?”

பூர்ணிமா பயந்து போனவளாய், “எதுக்குக் கோபப்படறீங்க? தெருவுல வாசிக்கிறதால சங்கீதம் மட்டமாயிடும்னு  நெனைக்கிறீங்களா? எத்தனயோ வருஷங்களுக்கு முன்னால சாகித்ய கர்த்தாக்களும் மகான்களும், எல்லாரும் பரவசப் படற மாதிரி தெருக்கள்ல பாடித்தான் இதே சங்கீதத்தைக் ஆல விருட்சமா வளர்த்தாங்கங்கறதை மறந்துடாதீங்க..”

பூர்ணிமாவின் விழி இமைகள் அழகாய்ச் சிட்டாய்ப் படபடத்தன. ராம்பாபு அவள் பேசியவற்றை நிதானமாய்ப் பொறுமையாய்க் கேட்டான். மெல்ல மௌனமாய் நடந்தான்.அவர்கள் அந்த சின்னக் கோயிலின் அருகே வந்தபோது, பேச்சு தடைப்பட்டுப் போகிற மாதிரி-ஓர் இளம் பெண்ணின் மெல்லிய அழுகையைப் போல-ஒரு பிறந்த குழந்தையின் இங்கிதமான முனகலைப் போல- அசாத்திய மென்மையாய்த் தணிந்து தணிந்து காதில் அலை அலையாய்த்  தொடர்ந்து எதுவோ மோத ஆரம்பித்தது.

ராம்பாபு கண நேரம் ஸ்தம்பித்தான். பூர்ணிமா சட்டென்று தன்னை மறந்து கண்களை மூடிப் பரவசமானாள். மூடிய இமைகளிலிருந்து  அந்த அலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பப் பொல பொலவென்று நீர் முத்துகள் படிகங்களாய் அவள் கன்னக் கதுப்புகள் வழியே இறங்கின. அந்த ஊரின் விசித்திரங்களிலேயே மிகப் பெரிதான ஒன்றைக் கண்டு விட்ட ஆச்சரியத்தில் பூர்ணிமாவின் மேனியெங்கும் முதன்முறையாய் ஒரு நடுக்கத்தோடு விம்மிதம் ஒன்றும் பரவியது

அந்தச் சின்னக் கோயில் முன்னாலிருந்த ஒரு பழைய காலத்துக் கல் மண்டபத்துத் தரையில் உட்கார்ந்து கொண்டு கிராமத்தின் சில பேர்களடங்கிய ஒரு பாமரக் கும்பலுக்கிடையே உன்னதமான சாஸ்திரிய சங்கீதத்தை ஒரு நாடோடிப் பிச்சைக் கார இளைஞன் புல்லாங்குழலில் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அந்த ஏழை வாலிபனின் மெலிந்த விரல்கள் அவனது பழுப்பேறிய குழலின் தொளைகளில் அளந்து வைத்த மாதிரித் தாவித் தாவி ஓடின. அவன் கன்னங்களின் இருபுறமும் உப்பென்று விம்மியும் உள்வாங்கியும் இயங்கவும், உதடுகள் லாகவமாய்க் குவிந்து காற்றை உள்ளேயும் வெளியேயும் அனுப்பவும், குழியினுள் அக்காற்று ஓர் ஒலி வடிவம் சீராய்ப் பெற்று கீதமாய் வெளிவந்த ரசவாத வித்தையைப் பூர்ணிமா விழிகளில் வியப்பு விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட குழலுக்குள் தேங்கி இருந்து மேடையில் ஆடம்பரமாய்ப்  பெருக்கெடுத்துப் பாய்கிற அதே விஷயங்களே இங்கே இந்த ஏழையின் அழுக்கேறிய குழலுக்குள் ரொம்ப நாட்களாய் அடைபட்டுக் கிடந்து, இப்போது பீறிட்டுப் பாய்கிற வெள்ளமாய்த் தோன்றுகிற அதிசயத்தை உணர்ந்து சிலிர்த்தாள் அவள்.

பூர்ணிமாவின் முகத்து உணர்ச்சிகளைத் துல்லியமாய் ஆராய்ந்தான் ராம்பாபு. இவள் இந்த ஏழைக் கலைஞனுக்காக இரக்கப் படுகிறாள் என்பதை விட, இவள் இவனுடைய இந்தத் தெருச்சங்கீதத்தை ரசிக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட கோபம் முகமெல்லாம் வெறுப்பாய் மாற அவன் அவள் காதருகே குனிந்து சொன்னான்: ”எனக்கு இந்த இடத்துல நிக்கவே பிடிக்கல. காருக்குப் போகலாம் வா..”

“ஏன்?” என்று அவள் நகராமலேயே கேட்டாள்.

“டாமிட்! இவனை ஒரு சங்கீதகாரன்னே என்னால ஏத்துக்க முடியல. இவன் இருக்கிற இடம், இவனைச் சுத்தி நின்னு ரசிக்கிற இந்தக் கூட்டம் எல்லாமே பாக்க அருவருப்பா இருக்கு எனக்கு...இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.. வா.. இந்த இடத்துலேருந்து முதல்ல கிளம்பலாம்..”

“ஆனா உங்களுக்கு அருவருப்பாத் தெரியற அதே இடத்துலேருந்து தானே, இவன் ஆரோக்கியமான, இதயத்தையே சுத்தப்படுத்தற மாதிரி இப்படி ஒரு இசையை வெளிப்படுத்திக் கிட்டிருக்கான்...?”

ராம்பாபுவிற்கு இதற்கு மேலும் பொறுமை இல்லை. கோபத்தையும் வெறுப்பையும் அவள் மீது ஒரே பார்வையில் வீசிவிட்டுக் காரை நோக்கி அவன் வேகமாய் நடந்து  போய் விட்டான்..

பூர்ணிமா இன்னும் உணர்ச்சி வசப்பட்டே இருந்தாள். அந்தக் கூட்டத்தில் ஒருவனை அணுகி அந்த இளம் வித்வானின் பெயரை விசாரித்தாள். அவன் பெயர் சாமுண்டி என்று தெரிந்து கொண்டாள். அவன் தன் ஏழ்மையின் காரணமாய்க் கீஷே விரித்திருக்கிற துண்டில் சிதறி இருந்த நாணயங்கள் யாவுமே, அவனுடைய சங்கீதத்தை நிர்ணயிக்கிற விலையாய் அல்லாமல், அதைக் கேட்டவர்களின் வெவ்வேறான ரசனைகளின் விலையாகவே அவளுக்குத் தோன்றியதால், அவளுக்கு லேசாய்ச் சிரிப்பு வந்தது. தனது கைப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்தவள், ‘ராம்பாபு தன் கச்சேரிகளுக்கு வாங்குகிற ஆயிரத்தோரு ரூபாய்க்குச் சமமாய் இந்தப் பத்து ரூபாய் நோட்டை நான் நினைத்துக் கொள்ள முடியுமா?’ என்ற உறுத்தலோடு அதை அந்தக் கந்தல் துணி மீது போட்டு விட்டு நடந்தாள்

சாந்திபுரத்தில், தங்களுக்காக ஏற்பாடு பண்ணப் பட்டிருந்த கெஸ்ட்ஹவுசிற்கு அவர்கள் வந்து சேர்ந்த போது மணி ஆறே காலாகி விட்டது. அறைக்குள் வந்தவுடனேயே ராம்பாபு ஆவேசமாய்க் கதவை அறைந்து சாத்திவிட்டுக் கைப்பெட்டியைத் திறந்து கையேடு கொண்டு வந்திருந்த ‘ஸ்காட்ச்’ விஸ்கி பாட்டிலை எடுத்துக் கண்ணடித் தம்ளரில் ஊற்றிக் கண்கள் சிவக்கச் சிவக்கக் குடித்தான்.

அவனுடைய இந்தச் செயல் பூர்ணிமாவுக்குப் புதிதாய்த் தோன்றவில்லை. தன் கோபம் எல்லை மீறுகிற போதெல்லாம் அவன் வழக்கமாய்ச் செய்கிற விஷயம் தான் அது. ஆனால் ஏழு மணிக்கு அவன் செய்ய வேண்டிய கச்சேரி ஒன்று இருக்கும் போது  அவன் இப்படிப் பைத்தியமாய் இதைச் செய்கிறானே என்று அவள் எண்ணிச் சற்றே துணுக்குற்றாள். அவள் மீது அவனுக்கிருந்த கோபம் இன்னும் மாறாத நிலையிலும் அவளை நெருங்கி அவன் முத்தமிட முயன்ற போது, பூர்ணிமா அவனிடமிருந்து தன்னை லாகவமாய் விலக்கிக் கொண்டு, இன்னும் ஒரு கோப்பை விஸ்கியை அவனுக்கு ஊற்றிக் கொடுத்தாள்.

இந்த சமயத்தில் கதவை யாரோ தட்டவே பூர்ணிமா போய்க் கதவைத் திறந்தாள். வந்திருந்தவரைக் கச்சேரி ஏற்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கிறவர் என்று அவள் ஊகித்துக் கொண்டாள்.

“என் பேரு நஞ்சுண்டன்...நான் தான் ரிசப்ஷன் இன்சார்ஜ்.. ஏழு மணிக்குக் கரெக்டாக் கச்சேரி ஆரம்பிச்சுடணும்னு சொல்றார் மிராசுதார். ராம்பாபு வாசிக்கப் போறார்னு பந்தல்ல தாங்க முடியாத கூட்டம்!” என்றார், வந்தவர்.

பூர்ணிமா சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு நிதானமாய்க் கேட்டாள்: “மிஸ்டர் நஞ்சுண்டன், ராம்பாபு இந்த ஊருக்கு வர்றது இது தானே முதல் தடவை?”

“ஆமாம்”

“ராம்பாபு இப்போ வேணுகானம் பண்ற நிலையில இல்ல. அவர் சுயநினைவுக்குத் திரும்ப இன்னும் மூணு மணி நேரமாவது ஆகும்!” என்று அழுத்தம் திருத்தமாய்ப் பூர்ணிமா கூறினாள். அவளுடைய கொழுவிய கையின் சுட்டு விரல் காட்டிய திசையில் ராம்பாபு போதை மயக்கத்தில் ஆனந்தமாய் சயனத்திருந்த கோலம் கண்டு அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டன் நிலை குலைந்து போனார்.

“அம்மா, இன்னிக்குக் கச்சேரி இல்லேன்னா, மிராசுதருக்குப் பதிலா, கூட்டமே என்னைக் கொன்னு போட்டுடும். அவர எழுப்பி உடனடியா ஏதாவது பண்ணியாகணும் நீங்க..” என்று பரபரத்தார்.

பூர்ணிமா எந்தப் பரபரப்பும் இன்றி நிதானமாய்ப் பேசினாள்.

“மிஸ்டர் நஞ்சுண்டன், இந்த ஊர்ல ராம்பாபுவைக் ‘கேட்டவங்க’ளைத் தவிரப் ‘பார்த்தவங்க’ யாரும் இல்லை இல்லியா? அதை நான் இப்போ என்னோட சோதனைக்குப் பயன்படுத்திக்கப் போறேன். நீங்க உடனே போயி, ‘ராம்பாபு ரொம்பவும் களைச்சுப் போயி வந்திருக்கறதால கச்சேரி எட்டு மணிக்குத் தான் ஆரம்பமாகும்னு சொல்லுங்க. ராம்பாபு மாதிரி ஒரு பிரபல வித்வானுக்காக ஒரு மணி நேர தாமதத்தை நம்ம ரசிகர்கள் பொருட்படுத்த மாட்டாங்க. கூடவே, ‘ராம்பாபு ரொம்பக் கண்டிப்பானவர், ரொம்பவும் சுதந்திரமானவர், அதனால யாரும் கச்சேரிக்கு நடுவுல அதை வாசி, இதை வாசின்னு சீட்டெல்லாம் எழுதி மேடைக்கு அனுப்பக் கூடாதுன்னும் சொல்லுங்க. ஆனா, அவங்க எல்லாரும் எதிர்பார்க்கிற அதே உசந்த சங்கீதம் பெரிய விருதுகளோட கூடிய ராம்பாபு கிட்டேருந்து வராம, எந்த விருதுகளும் இல்லாத’ ஒரு சாதாரண- ஊர் பேர் தெரியாத- ஏழைச் சாமுண்டி கிட்டேருந்து வரப் போறதுங்கற உண்மைய மட்டும் தப்பித் தவறிக் கூடச் சொல்லிடாதீங்க..”

நஞ்சுண்டன் அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்ச கட்டத்துக்குப் போன போது, பூர்ணிமா வெகு நிதானமாய்த் தன் திட்டங்களை விவரித்துக் கொண்டு போனாள். நஞ்சுண்டனுக்கு அவற்றை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

ட்டு மணிக்குச் சரியாய்க் கச்சேரி ஆரம்பமாகியது. நஞ்சுண்டன் உண்மையிலேயே நஞ்சை உண்டவர் மாதிரி வியர்க்க வியர்க்க,  நடுங்கிக் கொண்டே ஓர் ஓரமாய் ஏதேதோ தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ராம்பாபுவின் பட்டு வேஷ்டிக்குள்ளும் சில்க் ஜிப்பாவுக்குள்ளும் சென்ட் வாசனைக்குள்ளும் அடைபட்டிருந்தும் சாமுண்டியின் ஏழை மனம் பழைய கோலங்களின் ஞாபகங்களிலும் இன்று புதியதாய் வந்திருக்கிற இந்த திடீர் அந்தஸ்தின் நம்ப முடியாத மயக்கங்களிலும் நீந்தி பயத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

அவனுக்குப் பின்னால் எதையோ மகத்தான ஒன்றை சாதித்து விட்ட பெருமிதத்தில் பூர்ணிமா எவ்வித நடுக்கமுமின்றிக் கையில் இன்னொரு குழலோடு உட்கார்ந்திருந்தாள். அந்தச் சிறு கிராமத்தில் சாமுண்டியைத் தேடிக் கண்டு பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி விஷயங்களை அவனுக்கு விவரித்து, அவனை ஒப்புக் கொள்ள வைத்து, அவனது ஏழ்மைக் கோலங்களை நீக்கி, ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட குழலை அவன் கையில் திணித்து, அவனைத் தைரியப் படுத்தி, மேடையில் அமர்த்தி வைப்பதற்குள், அவள் பட்ட பாட்டை எண்ணிப் பூர்ணிமா பெருமூசெறிந்தாள்.

சாமுண்டி ரொம்பவும் தேர்ந்த கலைஞனாய் எடுத்த எடுப்பில் ஹம்ஸத்வனியில் வாதாபியை ஆரம்பித்தவுடனேயே சபையே தன்னை மறந்து தாளமிட ஆரம்பித்தது. இதை இரு கண்களாலும் பார்த்துப் பூரித்துப் போனாள் அவள். மிகப் பெரிய ஓர் அற்புதத்துக்குத் தானே காரணமாகி விட்ட உண்மையை நினைத்து உடம்பு முழுதும் சிலிர்ப்பு பரவப் பிரமையோடு அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.

சாமுண்டி சங்கீதத்தில் ஒன்றிப் போனான். சாமுண்டியின் சங்கீதத்தையும் ராம்பாபுவின் சங்கீதத்தையும் இனம் பிரிக்க முடியாமல் இன்னும் ரசிகர் கூட்டம் தலையாட்டிக் கொண்டிருந்ததே தனக்குக் கிடைத்த பெரும் வெற்றியாய் நினைத்து, ‘இதைக் கொண்டாடக் கூடத் தனக்கு சக்தி இல்லையே’ என்று உள்ளூர ஆனந்தலகரியில் மூழ்கினாள் பூர்ணிமா. உண்மையில் சபையில் நிறையப் பேர் சாமுண்டியின் சங்கீதத்தை மட்டும் அல்லாமல் தன்னையும் கள்ளத் தனமாய் ரசித்துக் கொண்டிருப்பது அவளுக்குப் புரிய இன்னும் அதிகமாய்ச்  சிரிப்பு வந்தது.

சாமுண்டி அடுத்ததாய் அவனுக்கு மிகவும் பிடித்தமான முகாரியை எடுத்தான். சோகத்தையும் சுகானுபவமாகி அவன் அந்த ராகத்தில் மாய அதிர்வுகளை உண்டு பண்ணினான். ராகம் உச்சம் அடைந்த போது, சபையோடு அவனும் தன் இசையில் ஒன்றிப் போனான். இந்த நேரத்தில் தான் சாமுண்டி யாரும் எதிர்பார்க்காத வேறு ஓரு காரியத்தையும் செய்தான். அவன் இந்த ராகத்தைத் தெருக்களில் வாசிக்கிற போதெல்லாம் அவன் வழக்கமாய்ச் செய்கிற மாதிரியே, இப்போதும் மேடையிலிருந்து இறங்கித் தன் தோளில் இருந்த  துண்டைத் தரையில் விரித்து விட்டுத் தான் என்ன செய்கிறோம் என்றே புரியாதவனாய் அங்கேயே நின்று கொண்டு ‘முகாரியை இன்னும் அழுத்தமான சோகத்தோடு வாசிக்க ஆரம்பித்தான். 

இதைக் கண்டு பூர்ணிமா வெலவெலத்துப் போனாள். கூட்டத்தில் பெரிதாய்ச் சலசலப்பு பரவத் தொடங்கியது. அதுவரை மெய்மறந்து உட்கார்ந்திருந்த நஞ்சுண்டன் இப்போது கோபமும் அவமானமும் மிகுந்து, “நான் அப்பவே சொன்னேனே, கேட்டீங்களாம்மா..? ஒரு பிரபல வித்வானோட பெண்சாதி செய்யக் கூடிய காரியத்தையா செஞ்சிருக்கீங்க?” என்று ஆவேசமாய்க் கத்தினார்.

கூட்டத்தில் எவனோ ஒருவன், “டேய், இவன் நம்ம பக்கத்தூருப் பாட்டுப் பிச்சைக்காரன் சாமுண்டிடா!” என்று கூவினான். சாமுண்டி பயந்து போய் உடம்பெல்லாம் நடுங்கப் பூர்ணிமாவின் பக்கம் திரும்பினான். அவள், தன் ஆனந்தத்தை எல்லாம் பறிகொடுத்துச் செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அந்த ஒரு கணத்தில் அந்த ‘நாகரிக’ ரசிகர் கூட்டம் சாமுண்டியின் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைக் குதறியது.

புல்லாங்குழல் இன்றியே இப்போது சாமுண்டி அவலக் குரலில் முகாரி பாடினான். அவன் அலறல்க் குரலைக் கேட்டுப் பூர்ணிமா ‘இது என்ன அநியாயம்’ என்று கத்தினாள். சாமுண்டியோ அந்தக் கூட்டத்தின் வெறித்தனமான தாக்குதலுக்கு  ஆளாகி உடம்பெல்லாம் ரத்தக் காயங்களாய், பழைய படியே கிழிந்து கந்தலாய்ப் போன அந்தப் புதிய  உடைகளுடன், அலங்கோலமாய்ப் பறக்கும் தலை முடியோடு ராம்பாபுவின் தங்கப் பூணிட்ட புல்லாங்குழலை ஆவேசத்தோடு இரண்டாய் உடைத்து எறிந்து விட்டு இரைக்க இரைக்கத் தெருவில் ஓடினான்.

ராம்பாபு அறையில் ஆனந்தமாய் உறங்கிக் கொண்டிருந்தான். பூர்ணிமா சோகமாய் நின்று கொண்டிருந்தாள். நஞ்சுண்டன் அவளிடம் குரூரமான சாயல்களோடு ஆறுதலைப் போல ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

“அம்மா! ராம்பாபுவையும் சாமுண்டியையும் ஒண்ணாக்கிடலாம்னு கற்பனை பண்ணினீங்களே, முடிஞ்சிதா உங்களால? அவன் தெருவுல தான் இருக்கணும்னு ஆண்டவன் ஏற்கெனெவே அவன் தலையில எழதி வச்சுட்டான். அதை யாரால மாத்த முடியும்?”

அதைக் கேட்டுப் பூர்ணிமாவின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. பிரளய காலத்து இடி போலத் தன்னையும் மறந்து அவள் கத்தினாள்: “நான்சென்ஸ்! அவன் தலை விதிய ஆண்டவன் எழுதி வைக்கல சார். உங்களப் போல உள்ள கீழ்த்தரமான மனுஷங்க தான் எழுதி வச்சிருக்கீங்க. பாடினவன் யாருன்னு தெரியாத வரைக்கும் உங்களால ரசிக்க முடிஞ்ச அவனோட சங்கீதத்தை, அவன் யாருன்னு தெரிஞ்சதுக்கப்புறம் ஏன் ரசிக்க முடியல? இந்த சமூகத்தோட கோணல்கள இன்னும் எத்தன தலை முறை போனாலும் யாராலும் நிமித்த முடியாதுன்னு இன்னிக்கு நான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா, இன்னிக்கு நடந்ததுக்கு உண்மையான பேரு சாமுண்டியோட ‘விதி’ இல்ல. ஒரு மெய்யான கலைஞனுக்கு இந்த சமூகம் செஞ்சிருக்கிற அநீதி.....”

நஞ்சுண்டன் குற்ற உணர்ச்சிகளோடு தரையை அளக்கிற மாதிரி அடிகளை எடுத்து வைத்து நடந்தார், உண்மையான கலைஞன் ஒருவனின் திறமைகளை அளக்கத் தவறி விட்டு.

அவர் போனபின், பூர்ணிமா ராம்பாபுவின் மூடிய விழிகளைப் பார்த்தபடி சொன்னாள்: “சங்கீதம் சாமுண்டியையும் உங்க அளவுக்கு உசத்தத் தயாராத்தான் இருக்கு, ராம் பாபு! ஆனா, நீங்களோ உங்க சமூகமோ தான் அதுக்குத் தயாரா இல்ல..”

ராம்பாபுவோ இன்னமும் ஆனந்த பைரவியில் அழுந்தித் தூங்கிக் கொண்டிருந்தான்.
-(தினமணி கதிர், 29.6.1973)
 *
(படைப்பாளியின் அந்தஸ்து, படைப்பின் தரம் ஆகியவை குறித்துக் காலம் காலமாய் நிலவி வரும் சமூக மனோபாவங்களையும், அணுகு முறைகளையும் ஒரு கோபமான விமரிசனத்துக்கு உள்ளாக்குகிற, எனது 'பூர்ணிமா' என்ற இந்தச் சிறுகதை, 29.6.1973, தினமணி கதிரில் வெளியானது. அந்த வயதுக்கே உரிய அறச் சீற்றங்கள் இந்தக் கதையில் சற்றே உரத்த குரலில் வெளிப்பட்டிருக்கிறது என்பது நிஜம் தான். இதே கதையை இன்றைக்கு நான் எழுதி இருக்கிற பட்சத்தில், இதன் நடையும் தொனியும் ஓரளவுக்கு மாறி இருக்கவும் கூடும். ஆனாலும் அன்றைக்கு இந்தக் கதை எழுப்பிய கேள்விகளும் சூழலும் இன்றைக்கும் அப்படியே மாறாமல் இருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை.)



,



Saturday, November 2, 2013


இன்னொரு 
வால்டனைத் தேடி..
வால்டன் ஏரி
தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா? மனத்தாலா? அரூபமான மனம் எப்படி இன்னொரு அரூபத்தை ஸ்பரிசிக்கும்?
முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு விடும்? என்னைச் சுற்றி உள்ள வஸ்துக்களோடு எனது தொடர்புகளை நான் அறுத்துக் கொள்கிற நிலையில் நான் ஒரு தீவாகி விடுகிறேன் என்பது உண்மை தானா?  அப்படி ஒரு தீவாகி நான் மடிந்து போவதில் எனக்கு சம்மதம் தானா?.
ஹென்றி டேவிட் தோரோ, ஒரு கட்டத்தில் தனது சக சமூக மனிதர்களிடமிருந்து  தன்னைப் பெரிய அளவுக்குத் துண்டித்துக் கொண்டு ஒரு பரிசோதனையாய், ஊருக்கு வெளியே  மனிதர்களே இல்லாத ஒரு வனாந்திரத்தில், வால்டன் என்ற ஓர் அழகிய ஏரிக்கரையில் போய்க் குடிசை அமைத்துக் கொண்டு இரண்டு வருஷங்களும்  இரண்டு மாதங்களும் இரண்டு  நாட்களும் வாழ்ந்தார். அந்தத் தீவு வாழ்க்கை முடிந்து மறுபடியும் ஊருக்குள் பிரவேசித்த போது, தனது தனிமை வாழ்க்கையில் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்ல ‘வால்டன்’ என்ற பெயரிலேயே புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டார். அவர் தற்காலிகமாக மனிதர்களிடமிருந்து தொடர்புகளைச் சுருக்கிக் கொண்டு தனியே வாழ்ந்த அந்த வன வாசத்தில் மனிதர்களிலும் மேம்பட்ட இயற்கையோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
தோரோ அந்தப் புத்தகத்தில் தனது வன வாசத்தின் நோக்கத்தைத் தெளிவாக அறிவிக்கிறார். அவரது, வனவாசம், அந்தச் சொல் இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் புரிந்து கொள்ளப் படுகிறார்ப் போல, வாழ்க்கையிலிருந்து தப்பித்து ஓடிப்  போதல் அன்று. மாறாக வாழ்க்கையின் சரியான அர்த்தங்களை இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்கே திரும்பி வந்து அதைச் செம்மையாய் வாழ்வதே ஆகும்.
ஹென்றி டேவிட் தோரோ
அந்தத் தற்காலத் தனிமைப் பரிசோதனைக்குப் பிறகு தோரோ நிறையப் புத்தகங்கள் மூலம் சக மனிதர் களைத் தொடர்பு கொண்டார். அவர் எழுதிய எழுத்துக்கள் பின்னால் கிட்டத்தட்ட அறுபது வருஷங்- களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கச் சிறையில் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்னும் வேறொரு மனிதரின் உள்ளக் கனலைத் தீண்டி உசுப்பி விட்டது. வால்டன் ஏரி உயிர் பெற்று நீண்டு தோரோ வாழ்ந்த கான்கார்ட் நகரின் எல்லைகளையும் கடந்து இநதிய கங்கையைத் தீண்டியது போல் இருந்தது அந்த நிகழ்வு.
தொடர்புகள் எந்த ரூபத்திலும் நிகழலாம். மனிதப் பரிணாம வளர்ச்சியின், பல ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட- தொடர்பு சாதனங்கள் அறவே கண்டு பிடிக்கப் படாத-கற்கால வாழ்க்கையிலும் மனிதனின் சக மனிதத் தொடர்புக்கான தீவிர வேட்கை இருக்கவே செய்தது. கல் வெட்டுக் காலத்திலும் ஓலைச் சுவடிக் காலத்திலும் பின் பிற்காலத் தொழில் புரட்சி யுகத்தின் அச்சு இயந்திரக் காலத்திலும் அது வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டு புதுப் புது அவதாரங்கள் எடுத்தது.
வெறும் தகவல் பரிமாற்ற அளவில் அது தன்னைக் குறுக்கி கொண்டு நின்று விடுவதில் திருப்தி அடைந்து விடவில்லை.ஒரு தகவலையும் மீறி ஓர் உள்ளார்ந்த அனுபவப் பரிவர்த்தனையாய் அது விகசித்தது. இன்றைய நவீனத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விஸ்வரூபப் பரிமாணமான மின்னணு ஊடகங்களில் அதன் புது அவதாரம் எந்த வீச்சில். எந்தத் திசையில் யாரை இலக்கு வைத்துத் தன் பரப்பை விரிக்கப் போகிறதோ, நாம் அறியோம். ஆனாலும், ஊடக வடிவங்கள் தான் வேறுபட்டிருக்கின்றனவே ஒழிய, மனிதனின் உள் மனத்து அடி நாதங்கள் இன்னும் உருக்குலைந்து போய் விடவில்லை என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
ஒரு புறம் பிரமிக்க வைக்கும் அதி நவீனத் தொழில் நுட்பக் கருவிகளுக்கும்,  இன்னொரு புறம் இன்னும் மாறாத அந்த அதி பழைய கற்காலத்து விலங்கு உணர்வுகளுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு தனது மெய்யான அடையாளத்தைக் கண்டறிய முடியாமல் தவிக்கிறவனாகவே இன்றைய நவீன மனிதன் எனக்குத் தெரிகிறான். அவன் கண்டறிந்த, அவன் அடிமையாகி விட்ட அதி நவீனக் கருவிகளைப் போலவே, அவனது அன்றாட வாழ்க்கையும்  சிக்கலும் மன அழுத்தங்களும் நிறைந்ததாகி விட்டது. இன்றைக்குக் கிட்டத்தட்ட நூற்றைம்பது வருஷங்களுக்கு முன், வெறும் மூவாயிரம் பேர்கள் கூட மக்கள் தொகை இல்லாத ஓர் அமெரிக்கக் கிராமத்தையே துறந்து, தன்னை அறியப் பக்கத்தில் உள்ள காட்டை நோக்கிப் போன தோரோ இன்றைய நகர நெரிசலில் வாழ நேரிட்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அவர் புறப்பட்டுப் போக கண்ணுககெட்டிய தூரம் வரை காடே இருந்திருக்காது! காடென்ன, ஒரு மரம் கூடத் தென்பட்டிருக்காது. தூர்ந்து போன குளங்களும், காணமல் போன ஏரிகளும், தரிசாக்கப் பட்டு மனைகளாகிப் போன வயல்களுமே அவரை எதிர்கொண்டிருக்கும். இந்தக் கான்கிரீட் வனத்தின் மத்தியில் தோரோ தன் வால்டனை நிரந்தரமாய்த் தொலைத்துப் பறிகொடுத்திருப்பார்.
அப்போதும் தோரோ சோர்ந்து போயிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், “A living dog is better than a dead lion” என்று ‘வால்ட’னில் எழுதியவர் அவர். செத்துப் போன சிங்கத்தைக் காட்டிலும் ஜீவித்திருக்கிற நாய், அப்படி ஜீவனோடு இருப்பதாலேயே என் கவனிப்புக்கு உள்ளாகிறது. சிங்கம் என்பதால் என்னால் அதன் பிணத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது. இப்போதைக்கு, ஜீவித்திருப்பவைகளோடு எனது தொடர்பை ஸ்தாபித்துக் கொள்வதே எனக்கு அவசரமும் அவசியமும் ஆகும். உயிர்த்திருப்பவைகளும் மரணித்துப் போய் இந்த மண் மலடாகி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை.
பத்தொன்பதாம்  நூற்றாண்டில் வந்த ஒருவர், ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று சொல்லித் தான் விரித்த கடையைச் சுருட்டிக் கொண்டார். இந்த நூற்றாண்டில் நம்முடனேயே சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கம்பீரமான மூத்த எழுத்தாளரோ, ” நான் கண்டதைச் சொல்லுகிறேன்..நீ அதைக் கவனிக்காமல் போனால் எனக்குத் தம்பிடி நஷ்டமுண்டோ?’ என்கிற தொனியியில்  ஒரு முப்பது வருஷங்களுக்கு முன்னமேயே ஞானச் செருக்கோடு பாட்டு எழுதி வைத்தார். முன்னவருடையது விரக்தி. பின்னவருடையதோ கோபம். எனக்கு விரக்தியும் இல்லை; கோபமும் இல்லை. மாறாய் இது ஒரு அவஸ்தை. நான் பெற்றதை,பெறாததை,பெற எத்தனித்துப் பக்கம் வரைப் போனதை, இழந்ததை, ஈட்டியதை,
ஈட்டத் தவறியதை,ஈட்டி இழந்ததை, ஈட்ட முடியாததை, அறிந்ததை,அறிய முடியாததை, அறிய அலைந்ததை, அறிந்து மறந்ததை-இன்னும் அனைத்தையும் என் சக மனிதனோடு நான் பங்கிட்டுக் கொள்ளும் அவஸ்தை. எனது அடுத்த தலைமுறைக்கு நான் விட்டுச் செல்ல நினைக்கும் பிதுர்ரார்ஜிதமும் இதுவே. எனது அனுபவங்கள் அடுத்தவர்களுக்கு உபதேசங்கள் அல்ல. அவை அத்தகைய  தோற்றம் கொண்டு விடுகிற ஆபத்து நேரவும் கூடும் தான். ஆனால் அத்தகைய ஆபத்துகள் நேரா வண்ணம் அவற்றின் தூய்மையைக் கவனமாயும் பொறுப்பாயும் பாதுகாப்பாய் எனது சக இளைஞனுக்கு விட்டுச் செல்லவே நான் ஆசைப் படுகிறேன்.
இது நான் சமூகத்துக்குச் செய்கிற சேவையன்று. அத்தகைய  அகம்பாவங்கள் எதுவும் எனக்கு இல்லை. மாறாக எனது இருப்பைப் பிறர் மத்தியில் அடையாளம் காட்டிக் கொள்வதும், கூடவே பிறருக்கு அவர்களின் அடையாளங்களைக் காட்ட முயல்வதுமே இப்போதைக்கு எனது அவசியங்கள். அவை எந்த ஊடகத்தின் மூலம் நிகழ்ந்தாலும் எனக்கு சம்மதமே.
தொலைந்து போன அடையாளங்களை எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து தேடுவோம் வாருங்கள்!
                                                                        (திண்ணை, ஜனவரி, 14, 2013)

கதை கதையாம் காரணமாம்



ஒவ்வொரு பண்டிகைக்குக்கும் பின்னால் ஒவ்வொரு கதை சொல்லப் படும். சில சமயங்களில் ஒரு பண்டிகைக்குப் பின்னால் பல கதைகளும் இருப்பது உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளிக்குப் பின்னால் சுவாரஸ்யமாய் நிறைய கதைகள் இருக்கின்றன. 


நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்றதாய்த் தமிழ் நாட்டுக் காரர்களும்,சத்தியபாமா கொன்றதாய்க் கர்நாடகக் காரர்களும், காளி கொன்றதாய் வங்காளத்துக் காரர்களும் தீபாவளி கொண்டாடுவதற்குக் கதை சொல்கிறார்கள். யார் யாரைக் கொன்றிருந்தாலும், கொல்லப் பட்டது 'அசுரனே' ஆயினும், ஒரு கொலையைக் கொண்டாடுவதில், தார்மீக ரீதியில் மனசு உறுத்தினாலும், மனசுக்கு இதமாய் மற்ற கதைகளும் கூடவே வருகின்றன.



உதாரணத்திற்கு, வட இந்தியர்கள், ராமன் பதினாலு வருஷங்கள் வனவாசம் முடிந்து நகரம் திரும்பியதை அயோத்தி மக்கள் வீதிகள் தோறும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடிய நாளாய்த் தீபாவளிக்கு இன்னும் கொஞ்சம் நாசூக்கான கதை வைத்திருக்கிறார்கள். 'வன வாசம் முடிந்து நகரம் மீளுதலில்' உள்ள குறியீடுகளை நாம் நமது பின் நவீனத்துவ அல்லது முன் நவீனத்துவ வாதிகளுக்கு இப்போதைக்கு விட்டு விட்டு மற்ற கதைகளுக்குப் போகலாம்! 



ஜைனர்களும் தீபாவளியை விட்டு வைக்கவில்லை. மகாவீரர் இந்த நாளில் தான் நிர்வாணம்(முக்தி) அடைந்ததாய் அவர்கள் நம்புகிறார்கள். சீக்கியர்களுக்கோ குரு ஹர கோவிந்த் முகலாயச் சிறையிலிருந்து விடுதலை அடைந்து அமிர்தசரஸ் திரும்பியது இதே தீபாவளி நன்னாளில் தானாம். 



ஆக, இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் எல்லாரும் அவரவர்க்குகந்த வேறு வேறு கதைகளோடு ஒரே தீபாவளியை நாடெங்கும் பன்னெடுங்காலமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதே ரீதியில், நபிகள் நாயகம் மதீனாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பிய நாளும், ஏசு கிறிஸ்து சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த நாளும், மோசஸ் இஸ்ரேலியர்களை எகிப்திலிருந்து விடுவித்து செங்கடலைக் கடந்து கூட்டிப் போன நாளும் இதே தீபாவளியாக இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம் தான்! 



அப்படி இருந்திருந்தால் மொத்த உலகமும் நமது தீபாவளியைப் பட்டாசு வெடித்து, மங்கள ஸ்நானம் பண்ணிக் கொண்டாடி இருக்கும். அப்போது, ரம்ஜானுக்கும், கிறிஸ்துமசுக்கும் தயங்காமல் வாழ்த்துச் சொல்லி விட்டு தீபாவளிக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கும் நம் உள்ளூர்ப் 'பகுத்தறிவு சிங்கங்கள்' வேறு வழி இன்றி தீபாவளிக்கும் வாழ்த்துச் சொல்லும் நிலை உருவாகி இருக்கும்!



சரி. எந்தக் கதை எப்படிப் போனாலும், எத்தனை கதைகளை எப்படிச் சொன்னாலும், பண்டிகைகளுக்குப் பின் உள்ள கதைகளில் பகுத்தறிவைத் தேட வேண்டியதில்லை என்பது தான் அடியேனது தாழ்மையான அபிப்பிராயம்.



பண்டிகைகளுக்குப் பின் உள்ள உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே கணக்கில் கொள்வோம். ஏனெனில், இந்தப் பண்டிகைகள், கதைகளை மட்டும் தம்முள் சுமந்து கொண்டு வராமல், நமது குழந்தைக் காலத்து ஞாபங்களையும் தம்முள் சுமந்து கொண்டிருக் கின்றன. மீண்டும் மீண்டும் குழந்தைகளாக மாற நமக்கும் இந்தப் பண்டிகைகளை விட்டால், வேறு சந்தர்ப்பங்கள் எப்போது தான் கிடைக்கும், சொல்லுங்கள்?


      -( Art Courtesy: Bapu @http://bapuartcollection.com)