Wednesday, July 2, 2014

முகநூல் பதிவுகள் 2014

முக நூலில் சேர்ந்த நாள்: செப்டம்பர் 7. 2009

2014
ஜூலை 4

நல்ல வேளை. பதினோரு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம், 'விதி' என்று சொல்லாமல், 'விதி மீறல்' என்று சொல்லி இருக்கிறார்கள்!

ஜூலை-2

சென்னையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் எழுபத்திரண்டு மணி நேரம் அதிசயமாய் உயிர்த்திருந்த ஓர் இளைஞரை, மீட்புக் குழுவினர் அரும்பாடு பட்டுக் காப்பாற்றியதையும், மற்றுமோர் உயிரைக் காப்பாற்றிய தங்கள் அருஞ்செயலை அவர்கள் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்ததையும் இன்று செய்திக் தாளில் படித்த போது உடம்பு சிலிர்த்தது. 

இதே கால கட்டத்தில், இதே உலகின் இன்னொரு புறம், கையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு நவீனக் கொலைக் கருவிகளும், மனசில் ஏழாம் நூற்றாண்டு அடிப்படைவாதச் சித்தாந்தங்க ளுமாய் அலைந்த படி, அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிற மத பயங்கர வாதிகளைப் பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

மாற்றார் உயிர்களைக் கொல்வதற்காகவே மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள், மரணத்தோடு போராடும் உயிர்களைக் 'காப்பாற்றுவதில்' உள்ள மகிழ்ச்சியும் சாகசமும் எவ்வளவு மகத்தானது என்று அனுபவித்துணர வாய்ப்பில்லை தான். மனசைத் தொந்தரவு செய்யும் இந்த முரண்பாடுகளை ஜீரணித்துக் கொண்டு தான் நமது யந்திர ரீதியான வாழ்க்கையும் சொரணையற்று நகர்ந்து கொண்டிருக்கிறது.


ஜூன் 29

'பிரைம் சிருஷ்டி' என்னும் கட்டிட நிறுவனம் கட்டிக் கொண்டிருந்த ஓர் அடுக்கு மாடிக் கட்டிடம், நேற்று சென்னையில் திடீர் என்று இடிந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியாயும் வேதனையாகவும் இருக்கிறது. இனி மேலாவாது, வீடு வாங்க நினைக்கிறவர்கள், வாங்குவதற்கு முன், அங்கே 'வாஸ்து' சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதை விடுத்து, முதலில் 'வஸ்து' சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்களாக!

ஜூன் 20

மோதி பிரதமர் ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தலுக்கு முன்னால் பா.ஜ.க. பிரசாரம் செய்தது உண்மையாகி விட்டது. அவர் பிரதமர் ஆன 
ஒரே மாதத்துக்குள்ளேயே, 'முதல் பெரிய மாற்றம்' வந்து விட்டது. ரயில் பட்ஜெட் வருவதற்கு முன்னாலேயே, இன்று முதல் ரயில் கட்டணங்கள் 14.2 % உயர்த்தப் பட்டு விட்டன. இனி போகப் போக இதே மாதிரியான மாற்றங்களையே மக்கள் எதிர் பார்க்கலாம். 

இந்த விஷயங்களில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பா.ஜ.க அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வித்யாசமும் இல்லை. ஆனாலும் நடைமுறையில் ஒரு வித்தியாசம் இருந்தது. முந்தைய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மாதிரிக் கட்டண உயர்வு விஷயங்களில், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப் பட்டுக் கொஞ்சம் மிதமாகச் செயல் பட வேண்டியிருந்தது. இப்போது அந்த நிர்ப்பந்தம் இல்லை. பெரும்பான்மை, ஸ்திரத் தன்மை போன்றவை மக்களின் நலன் சார்ந்து உபயோகிக்கப் படுவதற்குப் பதிலாக, மக்கள் நலனுக்கு எதிராகவே எப்போதும் உபயோகிக்கப் பட்டு வருவதே வரலாறாகிப் போனது நமது துரதிர்ஷ்டம் தான்.

ஒரு விஷயம் தான் புரியவில்லை. ஒரு துறை நஷ்டத்தில் இயங்குகிற தென்றால், அந்த நஷ்டத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவதை விட்டு , வெறுமனே கட்டணங்களை உயர்த்தி அதைச் சரிக்கட்டி விடலாம் என்கிற அளவுக்குப் பொருளாதாரப் பாடம் இவ்வளவு சுலபமாக இருக்கிறதே! இதைக் கற்றுக் கொள்ளவா, இந்தப் பொருளாதார மேதைகள் ஐந்து வருஷம் கஷ்டப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் படித்தார்கள்?



ஜூன் 16

The strike call given by the city auto drivers is unjust and highly condemnable.
Most of these auto drivers are autocratic in nature and atrocious in behavior. At most of the time, instead of acting as the friends of the people, they only act as the enemies of the people. Common man is scared of calling them for hire, unless there is some urgency. 

A few days back, the auto drivers in Keelkattalai bus stand demanded Rs 150/- from my daughters to ply a distance of a mere 5 km to Pallavaram.(For Rs.150/- one can hire a call taxi and travel comfortably for this distance), When they were reminded of the existence of a device called 'meter', they simply ridiculed the reminders.

I have registered a complaint on the Facebook page of Chennai City Traffic police. So far no action has been taken. Their call for strike is unwarranted and against the public interest. Govt should not yield to their pressure tactics. People should reject autos and prefer other mode of transports like share autos or call taxis until these unscrupulous lawbreakers are brought to terms.


ஜூன் 15

தந்தையர் தினம் 
***********************

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் எந்தையுமிலமே.."

கிட்டத் தட்ட ஆயிரத்து எண்ணூறு வருஷங்களுக்கு முன்னால், சிறுமிகளான பாரி மகளிர் பாடிய இந்த எளிமையும் , உணர்வும் நிறைந்த பாடல், தந்தையின் முக்கியத்துவத்தையும் அவரது இழப்பின் வலியையும் உணர்த்திய அளவுக்கு இன்று வரை வேறு எந்தக் கவிதையும் செய்ததாகத் தெரியவில்லை. எத்தனை முறை, எத்தனை வருஷங்களுக்குப் பிறகு எடுத்துப் படித்தாலும் கண்களைக் குளமாக்கும் வரிகள் இவை.

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக் கிழைமையும் தந்தையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் எனது பங்களிப்பாக, சென்ற ஆண்டு கணையாழி செப்டம்பர் இதழில் வெளியான எனது 'அப்பாவும் பிள்ளையும்' சிறுகதையின் முழுப் பதிவையும் இங்கே தந்திருக்கிறேன். 


ஜூன் 14

குரு பெயர்ச்சியில் வரும் 'குரு'வையும் தட்சிணாமூர்த்திக் குருவையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். மேற்சொன்ன குருவுக்கும் குரு பெயர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர், சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ய தட்சிணா மூர்த்தியாகி தென்திசை நோக்கி வீற்றிருக்கும் சிவன். 

குரு பெயர்ச்சி குறிப்பிடும் குரு, வேறு. இது வியாழக் கிரகம் (Jupiter). இந்துப் புராணங்களின் படி நவக்கிரகங்களில் ஒருவரான வியாழ பகவான். இவரே தேவர்களின் குருவான பிரஹஸ்பதியாகப் புராணங்களில் சொல்லப் படுபவர்.

வானவியல் ரீதியாக, பூமி, வியாழன் இரண்டுமே அவ்வவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருஷம் எடுத்துக் கொண்டால், வியாழன் பன்னிரண்டு வருஷங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆகவே பூமியிலிருந்து பார்க்கும் போது, வியாழன் சூரிய மண்டலத்தின் பின் புலத்தில் வெகு தொலைவில் இருக்கும் பன்னிரண்டு ராசிகளில், ஒரு குறிப்பிட்ட ராசியில் ஓரு வருஷம் தங்கி விட்டு, ஒரு வருஷ முடிவில் பக்கத்து ராசிக்குள் பிரவேசிக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வே குரு பெயர்ச்சி.

மற்றபடி, இந்த நேரத்தில் செய்யப் படுகிற பரிகாரம், ஹோமம் போன்றவை, மத நம்பிக்கைகள் சார்ந்தவை, அவை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.


ஜூன் 11

ஜூன் 1 முதல் தமிழ் நாட்டில் இனிப் 'பவர் கட்'டே கிடையாது என்று அம்மையார் சொன்னாலும் சொன்னார், கடந்த ஒரு வாரமாகச் சென்னைப் புறநகர்ப் பகுதிகள் யாவும் திடீர் திடீர் என்று மணிக்கணக்கில் இருளில் மூழ்கிப் போகின்றன. மற்ற பகுதிகளைப் பற்றித் தெரிய வில்லை. 

'நடந்து முடிந்த தேர்தலில் மொத்தப் 'பவ'ரையும் ஒருத்தரிடமே கொண்டு போய்க் கொடுத்து விட்டால், மக்களுக்கு என்ன 'பவர்' மிஞ்சும்?' என்று அங்கலாய்க்கிறார்கள் மக்கள். 

வாஸ்தவம் தான். ஜெயலலிதா முதலில், 'கரன்ட்' அக்கவுன்ட்டில் உணமையில் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதை உடனடியாகத் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். நான் சொன்னது எலக்ட்ரிக் கரன்டை!

ஜூன் 10

என்னடி அநியாயம் இது?'
*************************************
தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கிலப் பாடம் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும்,கட்டாயம் தமிழிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பல வருஷங்களுக்கு முன் அரசு ஒரு சட்டம் கொண்டு வந்த போது, அதை எதிர்த்துத் தமிழ் நாட்டிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நீதி மன்றத்துக்குப் போயின. பின்னர் அது கை விடப் பட்டது.

"சரி, அது போகட்டும், தமிழ் நாட்டு மாணவர்களுக்குக் குறைந்த பட்சம் தமிழையாவது ஒரு கட்டாயப் பாடமாகச் சொல்லிக் கொடுங்களேன்" என்று கெஞ்சுகிற மாதிரி, இப்போது அரசு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி வேறொரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இதையும் எதிர்த்து அந்தப் பள்ளிகள் இப்போது நீதி மன்றத்துக்குப் போயிருக்கின்றன.

"என்னடி அநியாயம் இது?" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது!


ஜூன் 8

பாரதியின் கண்ணன் பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த, எத்தனை வருஷங்கள் ஆனாலும் நினைவில் நீங்காமல் நிற்கிற வரிகள் இவை: 

'பிறந்தது மறக்குலத்தில், எந்தை 
பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே, சில 
செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு 
நிறந்தனில் கருமை கொண்டான், இவன் 
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகள் உடையான், உங்கள் 
சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்..'

மற்றதெல்லாம் சரி; ஆனால், கண்ணனுக்கு நெருக்கமான வர்களாகப் பாரதி குறிப்பிடுகிற அந்தச் செட்டி மக்கள் யார்?

இதற்குச் சில பேர் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவை எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.


ஜூன் 3





ஜன நெரிசலும், வாகனங்களின் புகை மூட்டமும் மண்டி மூச்சைத் 

திணற வைக்கும் தாம்பரம் நகர மையத்தில், ஆச்சரியமாய் மூச்சு 

விட்டுக் கொண்டு புத்துணர்வோடு காட்சி அளிக்கிறது, சமீபத்தில் 

புதிப்பிக்கப்பட்ட இந்த முத்துரங்கம் பூங்கா. இதற்கு நம்ம பூங்கா 

என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பெங்களூர், டில்லி போன்ற நகரங்களில் ஒவ்வொரு 

செக்டாரின் மையத்திலும் பச்சைப் பசேல் என்று ஒரு பூங்கா 

இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெருகி வரும் சென்னைப் 

புறநகர்ப் பகுதிகள், விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு 

காலத்தில் பூங்காக்களாக இருந்த இடங்களையும் விழுங்கி ஏப்பம் 

விட்டுக் கான்க்ரீட் காடுகளாய் மாறி வரும் அவல நிலையில்

தாம்பரத்தின் இந்தப் பழைய பூங்கா புனர்ஜென்மம் 

எடுத்திருப்பதைக் கண்டு மனசு குளிர்கிறது. 


பக்கத்தில் இருக்கும் குரோம்பேட்டை, பல்லாவரம் நகரங்களின் 

நகராட்சி தாம்பரம் நகராட்சியிடமிருந்து ஏதாவது பாடம் கற்றுக் 

கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!





மே 26 



'இன்னொரு யுத்தம்'-ஓர் உரைச்சித்திரம்.
***************************************************
இதிகாசங்களை மறுவாசிப்பு செய்து, சமகால சமூகப் பார்வையோடு கொடுக்கும் முயற்சிகள் அரிதாகவே நடக்கின்றன. புதுமைப் பித்தனின் 'சாப விமோசனம்', கிரீஷ் கர்னார்டின் 'யயாதி', எம்.வி. வெங்கட்ராமனின் 'நித்ய கன்னி' போன்றவை இந்த வரிசையில் வரும். எனது 'ஆபுத்திரனின் கதை' நாடகமும் இந்த வகை முயற்சியே.

மகாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை வைத்துப் பெண்ணிய நோக்கில் நான் எழுதிய 'சுயதர்மம்' 'நாடகம்',1976-ஆம் வருஷம், 'கணையாழி'யில் பிரசுரமாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அதற்கப்புறம், 'சுயதர்ம'த்துக்கு இரண்டாம் பகுதி எழுத வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆவல் இந்த உரைச் சித்திரம் மூலம் இப்போது நிறைவேறி இருக்கிறது. 'சுய தர்மம்' போலவே முழுக்க முழுக்க உரையாடல் பாணியில் அமைந்திருக்கும் இந்தப் படைப்பை 'நாடகம்' என்கிற வரையறைக்குள் கொண்டு வருவதில் எனக்குத் தயக்கங்கள் இருப்பதால், இதை முன்னெச்சரிக்கையோடு 'உரைச் சித்திரம்' என்று வகைப் படுத்தி விட்டேன்!

இது மகா பாரத சீசன். ஒவ்வொரு தொலைக் காட்சியும் ஆளுக்கொரு மகாபாரதத்தை அவர்கள் இஷ்டத்துக்கு வதைத்தோ, சிதைத்தோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வதைக்கவும் இல்லை, சிதைக்கவும் இல்லை. மாறாக, சமகாலப் பார்வையில், 'படைப்புரிமை'யின் எல்லைகளை மீறாமல், மகா பாரதத்தின் ஒரு பகுதியை மீள் வாசிப்பு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

இது இந்த வாரத் 'திண்ணை' இணைய இதழில் பிரசுரமாகி இருக்கிறது. இதைப் பிரசுரித்த 'திண்ணை'க்கு நன்றி.


may 26

இன்றைக்குச் சென்னையில் சிற்றுந்துகளைப் (small buses) பார்த்தேன். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னால் நீதிமன்ற ஆணைப் படி அழிக்கப் பட்ட இரட்டை இலைகள் எல்லாம், தேர்தல் நடைமுறைகள் முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட முடிவதற்குள், அவசரம் அவசரமாகப் போர்க்கால வேகத்தில் திரும்பவும் பழைய படியே எல்லா பஸ்களிலும் வரையப் பட்டிருந்தன. 

இதே அவசரமும், மும்முரமும் , சாலையில் உள்ள பள்ளங்ளை உடனுக்குடன் மூடுவதிலும், குப்பைத் தொட்டிகளில் தினம் நிரம்பி வழியும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவதிலும், எரியாத தெருவிளக்குளை உடனுக்குடன் மாற்றுவதிலும்- இன்னும் இப்படி எத்தனையோ அன்றாட அவசியங்களில் காட்டப் பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

இதைக் கண்டு, "அப்படியெல்லாம் ஆசைப் படுவது எவ்வளவு பெரிய அசட்டுத் தனம்! போ. உன் போன்ற மற்ற அசடுகளோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த மூலையில் போய் உட்கார்" என்று ஏற்கெனவே வெறுப்பில் இருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்து சத்தம் போட்டாள். அவள் வேறு யாருமில்லை; சாட்சாத், பாரத மாதா தான்!

may 21

டில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க அரவிந்த் கேஜ்ரிவால் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகின்றன. அவை உண்மையாய் இருக்கிற பட்சத்தில், 'தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு' மிகப் பொருத்தமான உதாரணம் கேஜ்ரிவாலாகத் தான் இருப்பார்.

may 19

இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு வந்திருக்கிறது. 1952-இலிருந்து இது வரை நடந்த இந்தியப் பொதுத் தேர்தல்களிலேயே (லோக் சபா), மிகக் குறைந்த வாக்கு சதவிகிதத்துடன் அதிக பட்ச இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பது பா.ஜ.க தானாம். 

இந்தியாவின் மொத்த வாக்குகளில் வெறும் 31 சதவிகிதம் மட்டுமே பா.ஜ. க.வுக்குப் போய் இருக்கிறது. மிச்சம் 69 சதவிகிதம் பேர் பா.ஜ. க.வை நிராகரித்து வேறு வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், அவை சிதறிப் போனதால் இடங்களாய் மாறவில்லை.

நூறு பேரில் வெறும் முப்பத்தோரு பேர்களின் ஆதரவைப் பெறும் ஒருவர், மொத்தப் பேர்களும் மாற்றத்தை விரும்பித் தனக்குப் பின்னால் நிற்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார், நமது தேர்தல் முறையில் தர்க்க ரீதியாக ஒரு சீரியஸான கோளாறு இருப்பதாகவே தோன்றுகிறது.

may 18

கோஷங்கள் 
****************
நவீன சமூகவியற் கருத்துகளின் தாக்கம் காரணமாக, ஆரம்ப காலத்திலிருந்தே நான் 'பெரியார் பிராண்ட்' நாஸ்திகத்திலிருந்தும் 'சங்கராச்சாரியார் பிராண்ட்' ஆஸ்திகத்திலிருந்தும் விலகி நிற்கக் கற்றுக் கொண்டிருந்தேன். இதைக் கருவாய் வைத்து , நாஸ்திக ஆஸ்திக கோஷங்களின் வெறுமையை எள்ளல் செய்து நான் 1979-இல் 'கோஷங்கள்' என்ற சிறுகதையை எழுதினேன்.

கதையை, அந்த நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் சங்கப் பலகையாய் இருந்த ஒரு பிரதான இடது சாரி இலக்கியப் பத்திரிகைக்குக் கொடுத்தேன். இந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணியது தான் இதற்குக் காரணம்.

ஆனால், என் கதை anticommunist-ஆக இருப்பதாகச் சொல்லி அவர்கள் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஒரு கதை அதன் நோக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையாக அர்த்தம் பண்ணப் பட்டிருந்தது எனக்கு ஒரு விதத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தது.

அதற்கப்புறம் பல நாட்கள் 'கோஷங்கள்' -கதை என் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. ஒரு நாள், எனது வெளிவட்டங்கள் நாவலைப் பிரசுரித்த நண்பர் திரு மாசிலாமணி அவர்கள் மூலம், அப்போது 'இதயம் பேசுகிறது' இதழில் இணை ஆசிரியராக இருந்த திரு. தாமரை மணாளனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிடம்,"உங்களைப் பற்றி மாசிலாமணி ரொம்ப உயர்வாகச் சொல்லி இருக்கிறார். ஏதாவது கதை இருந்தால் கொடுங்கள். போடுகிறேன்" என்றார்.

நான் அவரிடம் "இந்த மாதிரி எழுத்துகளை எல்லாம் உங்கள் பத்திரிகை போடுமா என்று தெரியவில்லை . போட்டால் சந்தோஷம். ஆனால், இதை எடிட் பண்ணிப் போடுவதாய் இருந்தால் வேண்டாம் " என்று சொல்லி என் 'கோஷங்கள்' கதையைக் கொடுத்தேன். அவர் எனக்கு வாக்களித்த மாதிரியே என் 'கோஷங்கள்' கதையும் எந்த வெட்டும் இல்லாமல், மாயாவின் அழகான ஓவியத்தோடு, 5.8.79- 'இதயம்' இதழில் பிரசுரமானது.

அப்போது நான் சென்னையில் ISCUS (Indo Soviet Cultural Society) கட்டிட மாடி அறையில் தங்கி இருந்தேன். அங்கே என்னுடன் கூடத் தங்கி இருந்த நண்பர் திலக்கின் தந்தை ஒரு தீவிரக் கம்யூனிஸ்ட் தொண்டர். பழகுவதற்கு மிகவும் இனியவர். ராஜபாளையத்துக்காரர். அவர் இந்தக் கதையைப் படித்து விட்டு மிகவும் நெகிழ்ந்து போய் என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டு “நாங்கள் இத்தனை வருஷமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதை ரொம்ப அழகாக நறுக்குத் தெறித்த மாதிரிச் சொல்லி விட்டீர்கள்” என்று மனசாரப் பாராட்டினார். நான் அவரிடம், அவருடைய ‘காம்ரட்’கள் நடத்தும் பத்திரிகை இதை ஆன்டி-கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தித் திருப்பிக் கொடுத்து விட்டதைச் சொன்ன

 போது அவர் அதை நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார். 

may 17

இதற்கு முன் ஒவ்வொரு முறை ஏதாவது ஓர் அலை வந்த போதும், அது கடலிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் 
கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று தான் எதிர் பார்த்தோம். 

ஆனால், அலை வடிந்து திரும்பப் போகிற போது, கடலில் இருந்த குப்பைகளையும் செத்தைகளையும் கரையில் தள்ளி விட்டு, ஏற்கனேவே கரையில் ஒதுங்கி இருந்த எமது கிளிஞ்சல்களையும் சங்குகளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டுபோய் விட்டது.

இந்த முறையும் வழக்கம் போல், ஓரு புது அலை- கொஞ்சம் பெரிய சைசில்-வந்திருக்கிறது. 

இது என்ன செய்யப் போகிறது என்பது, இதன் பிரவாகம் ஓய்கிற போது தான் தெரியும்!

may 14

இத்தனை வருஷமும் போட்டி போட்டுக் கொண்டு கிண்டல் பண்ணி விட்டு இப்போது, போகிற போது மன்மோகன் சிங்கைப் எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், எதிர்க் கட்சித் தலைவர் உட்பட. எது எப்படி ஆனாலும், மே 16, மற்றவர்களுக்கு எப்படியோ-ஆனால் மன்மோகன் சிங் அவர்களுக்கு மட்டும் நிச்சயமாகப் பொன்னாள். ஏனெனில் அது, அவர் தனது சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்கப் போகிற நன்னாள்!

may 14

வெளிவட்டங்கள் 
**********************
(பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. மன்னிக்கவும்)

இது நடந்து ஐந்தாறு வருஷங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் எழுத்தாளர் திலீப்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ராம், உங்களிடம் நீங்கள் எழுதிய வெளிவட்டங்கள் நாவலின் பிரதி ஏதாவது வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம், நான் எழுதிய ஒரே நாவலான இந்த ‘வெளிவட்டங்கள்’, கலைஞன் பதிப்பக வெளியீடாக 1979-ஆம் வருஷம், அதாவது இந்தத் தொலைபேசி அழைப்பு வந்த நாளுக்கு சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் வெளிவந்தது.

பெயர் வெளிவட்டங்கள் என்றாலும், போதிய போஷகர்கள் (promoters) இன்றி அது சில உள்வட்டங்களில் சிலாகித்துப் பேசப்பட்டதோடு நின்று போனது. நிறைய எதிர்பார்ப்புகளோடு நான் அந்த நாவலை எழுதியிருந்தேன். கலைஞன் பிரசுரகர்த்தர் திரு. மாசிலாமணி அவர்கள் எனது பிரதியால் மிகவும் கவரப்பட்டவராய், நான் எழுத்துலகுக்கு அப்போது புதியவன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், எந்த வியாபார நோக்கமும் இன்றி மிகுந்த உற்சாகத்தோடு, தனது வெள்ளிவிழா வெளியீடுகளில் ஒன்றாக அதை வெளிக் கொணர்ந்திருந்தார். ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை அல்லது சர்ச்சையைத் தூண்டி விடுகிற potential-உம் அந்த நாவலுக்கு இருந்தது. இருந்தும் துரதிர்ஷ்ட வசமாக அது நிறையப் பேரின் கவனத்துக்குப் போகாமல், காலவெள்ளத்தில் ஷெல்ஃபில் முடங்கிப் போய்விட்டது.

அந்த நாவலைப் பற்றித் தான் அன்றைக்குத் திலீப் குமார் தொலைபேசியில் என்னிடம் விசாரித்திருந்தார். நான் அவரிடம் சொன்னேன். “இப்போது அது எங்கேயும் அச்சில் இல்லை. என்னிடம், எனது பிரத்தியேகப் பிரதி ஒன்றே ஒன்று தான் இருக்கிறது” என்றேன்.

“அந்த நாவலை இயக்குனர் வசந்த் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தீவிர ஆர்வத்தோடு என்னிடம் வந்து இருக்கிறார். நீங்கள், இந்தப் பக்கம் வருகிற போது அந்தப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர் படித்தவுடன் நானே அதை அவரிடமிருந்து பத்திரமாய்த் திரும்ப வாங்கி உங்களிடம் தந்து விடுகிறேன். உங்கள் பிரதியின் பாதுகாப்புக்கு நான் கேரண்டி” என்றார் திலீப்குமார். என் ஆச்சரியம் இன்னும் அதிகமானது .நான் அடுத்த வாரம் பிரதியைக் கொண்டு தருவதாக அவரிடம் சொன்னேன்.

நான் பிரதியோடு சென்ற அன்றைக்கு, திலீபின் ஷோரூமில் வசந்தும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே நல்ல, வித்யாசமான, வணிக அம்சங்கள் குறைவாக உள்ள படங்களை வசந்த் தந்திருந்ததால் அவர் மீது எனக்கு ஒரு மரியாதை இருந்தது. திலீப் என்னை வஸந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நான் அவரிடம் கேட்டேன்: “முப்பது வருஷத்துக்கு முன்னால் வெளியாகி, மிகக் குறைந்த பேர்களாலேயே படிக்கப் பட்டு, புற உலகின் கவனத்தை ஈர்க்காமல் அலமாரிக்குப் போய் விட்ட இந்த நாவலைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அது மட்டும் அல்லாமல் இதைத் தேடிக் கண்டுபிடித்துப் .படிக்க வேண்டும் என்கிற அளவுக்கு எப்படி இதில் ஈர்ப்பு வந்தது?”

தமிழில் வந்திருக்கும் எல்லா நல்ல எழுத்துகளையும் குறிப்பாக மரபு சாரா எழுத்துகளைத் தேடித் படிப்பதில் தொடக்க காலத்திலிருந்தே தனக்குத் தணியாத தாகம் உண்டு என்று அவர் சொன்னார். அதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே தூண்டு கோலாய் இருந்ததாய் அவரது பால்ய நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டார். வங்கி அதிகாரியாய் இருந்த அந்த நண்பர் ஒரு தீவிரமான புத்தகப் பிரியராம்.

வசந்த் சொன்னார்: “நான் வாசித்த பெரும்பான்மையான புத்தகங்கள் என் பால்ய சிநேகிதன் சிபாரிசு பண்ணியது தான். போன வாரம் ஏதோ பேச்சு வந்த போது, ‘பல வருஷங்களுக்கு முன்னால் ‘வெளி வட்டங்கள்’ என்று ஒரு நாவல் வந்ததே, உனக்குத் தெரியுமா? ரொம்பவும் அபூர்வமான நாவல் அது. நாவலின் நிறைய இடங்களில் சுற்றுப் புறத்தைக் கூட மறந்து நான் சத்தம் போட்டு ரசித்துச் சிரித்திருக்கிறேன். ஆபீசுக்கே எடுத்துக் கொண்டு போய் சக ஊழியர்களிடம், நாவலின் முக்கியமான இடங்களைப் படித்துக் காட்டி மகிழ்ந்து இருக்கிறேன். அது எங்காவது கிடைத்தால் வாங்கிப் படி.’ என்று அவன் சொன்னான். அவன் லேசில் ஒரு புத்தகத்தை அடுத்தவர்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டான். முப்பது வருஷங்களுக்கு முன்னால் படித்த நாவல் ஒன்றை இன்று வரை ஞாபகம் வைத்துக் கொண்டு அதைப் படிக்கும் படி எனக்கு சிபாரிசு செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று தோன்றியது. திலீப் குமார் தான் இந்த மாதிரி நூல்களைப் பற்றி விசாரிக்கச் சரியான நபர் என்று நினைத்தேன்”

உண்மையில் வசந்த் சரியான நபரைத் தான் தேர்ந்தெடுத்திருந்தார். 1979-இல் நான் சென்னைக்கு வேலை தேடிக் குடியேறின போது எனக்கு அறிமுகமான நல்ல இலக்கிய நண்பர்களில் திலீப் குமாரும் ஒருவர். தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும் தனது சிறந்த சிறுகதைகளால் தமிழை வளப்படுத்தியவர்.

வசந்த்திற்கு என் நாவல் பற்றி எப்படித் தெரிய வந்தது என்பதை அறிந்த போது நிஜமாகவே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி, நாம் அறிந்திராத திசைகளிலிருந்தும் நாம் அறிந்திராத மனிதர்களிடமிருந்தும் நமக்கு எதிர்பாராமல் கிடைக்கும் இத்தகைய அங்கீகாரங்கள், அவை எத்தனை சின்னதாய் இருந்தாலும், அவற்றுக்கு எவ்வளவு சாகித்ய அகாடமிகளும் ஈடாகாது என்று தோன்றியது.

இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், நாளைய இளம் வாசகர்களுக்காகவும் வெளி வட்டங்கள் முழு நாவலையும் PDF-வடிவில் Internet Archive-இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். Free download- வசதியும் உண்டு. அவகாசம் கிடைக்கும் போது ஆர்வம் உள்ள வாசகர்கள் படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கோருகிறேன். குறிப்பாய்ப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. காரணம், படித்துப் பார்த்தால் தான் தெரியும்! 


may 7

ஜல்லிக் கட்டு, தமிழர்களின் வீர மரபு அல்ல; கோர மரபு. ஒரு மாட்டைப் பத்துப் பேர் சேர்ந்து துரத்தி அதன் உடலை இம்சைக்காளாக்கிப் பிடிப்பதும், மிரண்டு ஓடும் அந்த வாயில்லா ஜீவனின் இயலாமைகளையும் அவஸ்தைகளையும் ரசித்து ஆயிரம் பேர் சுற்றிலும் நின்று ஆரவாரித்து சந்தோஷம் கொள்வதும்-வீரமும் இல்லை; விளையாட்டும் இல்லை. நவீன உலகில் இத்தகைய, காலத்துக்கொவ்வாத 'அநாகரிக மரபு'களுக்கு இடம் இல்லை. இன்றைக்கு உச்ச நீதி மன்றம் இந்த விபரீத விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்ததின் மூலம், மாடுகளின் 'சுய மரியாதை'யோடு, இந்த 'விளையாட்டில்' அநியாயமாய்க் குத்திக் கிழிபட்டுச் சாகும் இளைஞர்களின் விலை மதிப்பில்லா உயிர்களும் காப்பாற்றப் பட்டிருக்கின்றன.

may 6

"காலிங் பெல்"
******************
சுவடு-சிற்றிதழ், மே-1978 இதழில் எனது 'காலிங் பெல்' சிறுகதை வெளிவந்தது.சில இதழ்களே வெளி வந்து அற்பாயுளில் நின்று போனாலும், சுவடில் சுந்தர ராமசாமி, மீரா, பூமணி, தமிழ்நாடன், கலாப்ரியா,நா.விச்வநாதன், வண்ண நிலவன், வல்லிக் கண்ணன் போன்ற அன்றைய இலக்கியப் 'பெருந்தலைகள்' பலரும் எழுதி அதன் தரத்தை வளப்படுத்தினர். இவர்களோடு கூடவே, சாதாரணனான எனது படைப்புகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தார்கள்.

புதுக் கோட்டையிலிருந்து வெளி வந்த இந்தச் சிற்றிதழின் பின் புலத்தில் சிவகங்கைக் கவிஞர்களான பாலாவும் மீராவும் உந்து சக்திகளாகச் செயல் பட்டனர். மன்னார்குடியில் நான் இருந்த போது, அப்போது மன்னைக் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த பாலாவின் நட்பு எனக்குக் கிடைத்தது, ஒரு மகத்தான அனுபவம். பாலாவின் நட்பு அனுபவங்களைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும். பாலாவின் தூண்டுதலின் பேரில் தான் நான் சுவடுக்குப் படைப்புகள் அனுப்பினேன்.

கடைசியாகத் தினமணி கதிரில், 1974- இடைப் பகுதியில் எனது கதை பிரசுரமானதற்குப் பிறகு, எனக்குக் கிடைத்த ஒரு நீண்ட இடைவெளி நவீன இலக்கியம் பற்றிய எனது பார்வையை செழுமைப் படுத்திக் கொள்ள இயற்கையே எனக்கு அளித்த வாய்ப்பாக அமைந்தது.

காலிங் பெல் கதை மூலம் எனது எழுத்துகளின் இரண்டாம் பருவத்தில்(Second Phase) நான் அடி எடுத்து வைத்தேன். ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் ஒரு சம்பிரதாயமான, சின்னத் திருமண விசாரிப்பை யதார்த்தமாய்க் காட்சிப் படுத்துகிற கதையில், காலிங் பெல் ஒரு தற்செயலான, அதே சமயம் வலிமையான குறியீடாகக் கூடவே வந்து சேர்ந்து கொள்கிறது. 

may 4

I agree with the argument of the human right activists that there is no place for capital punishment in a civilized society. But, at the same time can there be any place for hard core terrorism and brutal gang rapes in a civilized society? As long as these two unpardonable and heinous crimes against the humanity continue to exist, I can not support the abolition of the capital punishment particularly in these two specific cases. An indoctrinated mad group of hard core terrorists, has no right to take innocent lives in their 'fight' against the state.

may 1
மே தினச் சிந்தனை 
**************************
பணம் சம்பாதிக்கும் போதே பணம் கொடுக்கிறவர்களின் கோபத்தையும் வெறுப்பையும் சேர்த்து சம்பாதிப்பவர்களுக்கான சிறந்த உதாரணம் சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள். (ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்). குறைந்த கூலியில் அதிக உழைப்பைக் கறப்பது எப்படிச் சுரண்டல் ஆகிறதோ அதே போல், கொஞ்சம் உழைப்பில் நிறையச் சம்பாதிக்க நினைப்பதும் சுரண்டல் தான். சுரண்டலின் பொருள் முதலாளிகளுக்கு ஒரு மாதிரியும் தொழிலாளிகளுக்கு ஒரு மாதிரியும் மாறுவதில்லை.

பணக்கார முதலாளிகள் யாரும் ஆட்டோவில் பயணிப்பதில்லை. ஆட்டோவில் போகிறவர்கள் எல்லோரும் நடுத்தர, அதற்கும் கீழே இருக்கிற வர்க்கத்தவர்கள் தான். தொடர்ந்து, சாதாரண மனிதர்களின் அவசரத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் 'சிரமப்பட்டுச் சேர்த்த' பணத்தை, நிர்ணயிக்கப் பட்ட அளவுக்கும் மீறி அபகரிப்பதால், ஆட்டோக்கார்கள் மொத்த சமூகத்திலிருந்தும் எதிரிகள் போல் அன்னியப் படுத்தப் படுகிறார்கள்.

சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, உழைப்புக்கேற்ற ஊதியம் போன்ற நற்பண்புகள் சமூகத்தில் எல்லாத் தளத்து மக்களுக்கும் பொதுவானவை. எப்போதும் முதலாளிகளின் சுரண்டல்களை மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கத் தோழர்கள், ஆட்டோத் தொழிலாளர்கள் விஷயத்தில் பட்டும் படாமல் இருப்பது அவர்களது 'இரட்டை ஒழுக்க' நிலையையே வெளிப் படுத்துகிறது.

நியாயமான வேலை நேரம், நியாயமான கூலி இவற்றுக்காக உழைப்பாளிகள் போராட்டத்தில் குதித்ததை நினைவு கூறும் இந்த மே தினத்தில், 'அதே நியாயங்களை நாங்களும் கடைப்பிடித்து, இனி மேல் நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் கட்டாயப் படுத்தி வாங்கி சாதாரண மக்களைச் சுரண்ட மாட்டோம்' என்று ஒவ்வொரு ஆட்டோத் தொழிலாளியும் 'மே தின உறுதிமொழி' எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யுமாறு தொழிற்சங்கத் தலைவர்களும் அவர்களை அறிவுறுத்தி இன்றைக்கு அறிக்கை விட வேண்டும்.

அப்படிச் செய்தால் ஆட்டோ டிரைவர்கள் மீதான மரியாதை சமூகத்தில் மேம்படும். அடிப்படைப் போக்கு வரத்து வசதிகளுக்குக் கூட அநியாய விலை கொடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப் படும் 'கையறு நிலை'யிலிருந்து சாமானியர்களுக்கு விமோசனம் கிட்டும்.


April 27


கவிதை எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சில பேர் எழுதுகிறார்கள்

கவிதையைப் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சிலபேர் படிக்கிறார்கள்

கவிதை புரிய வேண்டும் என்று கட்டாயம் இல்லை
ஆனாலும் சில சமயம் புரிந்து விடுகிறது!




April 26



"உங்களைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத் தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

-'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதையில் புதுமைப்பித்தன்.
(ஏப்ரல் 25-புதுமைப்பித்தன் பிறந்த தினம்)




April 23

"நீங்க யாருக்கு ஓட்டுப் போடப்போறீங்க?" என்று உங்களிடம் யாராவது கேட்டால், "நான் இந்த தடவை நோட்டாவுக்குத் தான் போடப் போறேன்" என்று சொல்லிப் பாருங்கள். உடனே அவர்கள்,"நோட்டாவா? இப்போ மோதி தன் பேரை மாத்திண்டுட்டாரா?" என்று கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!




வேதாளம் சொன்ன புதுக் கதை
*******************************************
முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீண்டும் இறக்கிக் கீழே கொண்டு வந்தான் விக்கிரமாதித்தன். அவனது முதுகில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் இப்படிக் கேட்டது:

"ஹே, மகாராஜா! ஒரு கட்சி ஆட்சியில் இருந்த போது அதில் மந்திரியாய் இருந்த ஒருவர் சுடுகாட்டைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் ஊழல் செய்து மாட்டிக் கொள்கிறார். வேறொரு ஆட்சி பதவிக்கு வந்தவுடன் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பல வருஷங்கள் நடக்கிறது. இதற்கிடையில், அதே மந்திரி, தன் மீது வழக்குப் போட்ட கட்சிக்கே தாவி விடுகிறார். வழக்குப் போட்ட கட்சியும் அவரைத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவரை ராஜ்ய சபாவிலும் உறுப்பினராக்குகிறது. இந்த நிலையில் தான், பதினேழு வருஷங்களாக வழக்கை விசாரித்து வந்த நீதி மன்றம் 'அவர் ஊழல் செய்தது உண்மைதான்' என்று சொல்லி அவரை இரண்டு வருஷம் ஜெயிலில் போட உத்தரவிடுகிறது.


"ஹே, மகாராஜா, இப்போது சொல். மக்கள் எந்தக் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும்? மந்திரி ஊழல் செய்த போது,ஊழலுக்கு உறுதுணையாக இருந்த முதல் கட்சியையா? அல்லது, ஊழலுக்குத் தண்டனை பெறும் போது அவர் உறுப்பினராக இருக்கும், (இந்த வழக்கையே தொடுத்த) இரண்டாவது கட்சியையா? இதற்குச் தவறான பதில் சொன்னால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்.. சரியான பதில் சொன்னாலோ நான் மறுபடியும் முருங்கை மரத்திலேயே வழக்கம் போல் ஏறிக் கொள்வேன்" என்றது.

இதைக் கேட்ட விக்கிரமாதித்யன், மிகுந்த கோபமும் விரக்தியும் அடைந்தவனாய், "இப்போதே என் தலை வெடித்து விடும் போல் தான் இருக்கிறது. நீயும், உன் நாசமாய்ப் போன அரசியல் கதையும்! நீ எந்த மரத்திலாவது ஏறித் தொலை. அல்லது இந்தக் கட்சிகள் எதிலாவது போய் ஏறிக் கொள். நான் எந்த பதிலையும் சொல்வதாக இல்லை. என்னை ஆளை விடு" என்று சொல்லி வேதாளத்தை முதுகிலிருந்து கீழே தள்ளி விட்டு விட்டு அந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தான்!



எங்கு திரும்பினாலும் 'மோதி, மோதி' என்ற நாமாவளியே ஜெபிக்கப் படுகிறது. ஒரு புறம், அவரது துதி பாடிகளால், இந்தியாவின் சகல துக்கங்களையும் துடைக்க வருகை தரப் போகும் ஒரு தேவ தூதனைப் போல மோதியின் பிம்பம் வளர்த்தெடுக்கப் படுகிறது. இன்னொரு புறம், இனக் கலவரங்களையும் பிரிவினையையும் தூண்டி தேசத்தின் அமைதியையே குலைக்க வரும் நாச சக்தியாக வேறொரு பிம்பம் அவரது எதிரிகளால் பரப்பப் படுகிறது.

இப்படியாகத் தானே, நேர் மறையாகவும், எதிர் மறையாகவும், தொடர்ந்து, இடைவிடாது, பிரசார சாதனங்கள் மூலம் இந்த மோதி என்கிற மனிதரின் பெயர் இந்திய மக்களின் மனத்தில் ஏதோ ஒரு விதத்தில், பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நான் மோதியின் ஆதரவாளனும் இல்லை; எதிர்ப்பாளனும் இல்லை. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, மோடி மஸ்தான் எப்போது பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போகிறான், அல்லது மந்திரத்தால் மாங்காய் வரவழைக்கப் போகிறான் என்று வழக்கம் போல் வேடிக்கை பார்க்கிறவன். இதற்கு முன்னால், ஏமாந்த தருணங்கள் எல்லாம் ஏனோ புதிதாக மீண்டும் வேடிக்கை பார்ப்பதற்குத் தடையாக இருப்பதில்லை,.

மாயை கலைவதற்கு, விதத்தைக் காரன் வித்தையை முடிக்கும் தருணம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இது வரை எந்த வித்தைக் காரர்களும் தங்கள் வித்தை முடிவுக்கு வந்ததாக அறிவித்ததில்லை, வேடிக்கை பார்க்க வரும் கூட்டமும் தாங்கள் ஏமாந்ததாய் ஒப்புக் கொண்டதில்லை!


ஆழ்துளைக் கிணறுகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து தோண்டி விட்டு அதை ஒரு சாக்கைப் போட்டு மூடி வைக்கும் 'மகாபுத்தி சாலிகளை'க் கடுமையாகத் தண்டிக்கும் வண்ணம் ஏன் இன்னும் சட்டங்கள் திருத்தப்படவில்லை? சங்கரன் கோவிலில் சமீபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தையின் விஷயத்தில், ஆழ்துளைக் கிணற்றின் வாயை சாக்கைப் போட்டு மூடிவைத்த பிரகஸ்பதி வேறு யாரும் இல்லை, குழந்தையின் அப்பாவே தான். இவர் ஒரு பள்ளியில் 'தொழிற்கல்வி' ஆசிரியர் வேறாம்! விமோசனமே இல்லாத தேசம் இது.


April 14 · Edited
கடுமையான உஷ்ணம், புழுக்கம், வேர்வை நமைச்சல் இவற்றோடு கூடி விடியும் ஏப்ரல் மாதத்துத் 'தமிழ்'ப் புத்தாண்டில், ஜிலு ஜிலுவென்று விடியும் ஜனவரி மாதத்து ஆங்கிலப் புத்தாண்டில் உள்ள கிளுகிளுப்பும்(thrill), இனிமையும் charm) கிடைப்பதில்லை என்பது உண்மை தான். என்ன தான் கொண்டாட்டம் என்பது மனம் சம்பந்தப் பட்டது என்று வாதிட்டாலும், சீதோஷ்ணமும் சூழலும் மகிழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.