Friday, May 13, 2016

ஆயிரம் பசுக்கள்



னகரின் சபை முடிந்து வெளியே வந்து நதிக் கரையை நோக்கி நடக்கிற போதுதான் கார்கி சற்றே இறுக்கம் தளர்ந்தவளாய்  உணர்ந்தாள். அன்றைய அளவுக்கு அதற்கு முன் அந்த அகண்ட சபா மண்டபத்தில் அத்தனைப் புழுக்கத்தை அவள் உணர்ந்ததில்லை. புழுக்கம் என்றால் காற்றின்மையால்  ஏற்படும்  உடல் புழுக்கம் அல்ல. நெடிதுயர்ந்து, உயரத்தில் பெரிய பெரிய சாளரங்கள் வைத்து நிர்மாணித்த அந்த விசாலமான சபைக் கூடத்தில் காற்றுக்கும்  வெளிச்சத்துக்கும் என்றைக்குமே பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் அது  வார்த்தைகளின் உஷ்ணத்திலிருந்து புறப்பட்ட புழுக்கம்.. அறிவார்ந்த தர்க்கங்களும் எதிர் வாதங்களும் திடீர் என்று திசை மாறி எப்படி எரிச்சல்களாகவும் கோபங்களாகவும் உருமாற்றம்  அடைகின்றன? கடைசியில் வென்றது வாதமா, கோபமா?

எதிரே நதி எந்தத் தர்க்க மயக்கமும் இன்றித் தன் பாட்டுக்கு அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது. ரிஷி வாசக்னுவின் மகள், பிரும்மவாதினி கார்கி வாசக்னவி மன உளைச்சல்களோடு நதியின் கரையில் போய் உட்கார்ந்தாள். தொலைவில் மலைகளின் உயரத்தில் தேவதாரு மரங்கள் வரிசையாய்த் தெரிந்தன. அவை ஒவ்வொன்றும் இங்கிருந்து  பார்ப்பதற்குப் பாதி விரிந்த பசுங்கொடைகள் மாதிரி இருந்தன. தேவதாருக்கள் தேவர்களுக்குப் பிரியமானவை; தேவர்களாலேயே வாசம் செய்யப்  படுபவை. வணங்கத் தக்கவை. அதனாலேயே அவை உயரமான இடத்தில் வளர்கின்றன என்று கார்கி விநோதமாய் நினைத்தாள்.

அவளைச் சுற்றிலும் சமவெளியில் நிறைந்திருந்த அசோக மரங்களை அவள் இன்று அதிக சிநேகத்துடன் பார்த்தாள். அவை நிறைய ரத்த நிறத்தில் சிவந்த புஷ்பங்கள் பூத்துக் கிடந்தன. எப்போதும் அவள் விரும்பி சந்தோஷப் படும் அந்தப் பூக்களின்  சிவப்பு இன்றைக்கு ஏனோ அவளை சங்கடப் படுத்தியது. அவை அவள் கடைசியாக சபையில் பார்த்த யாக்யவல்கியரின் சினம் ஏறிய  விழிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தன.

கார்கி அவற்றிலிருந்து தன் பார்வையை விலக்கி நதியில் நிர்மலமாய்ச் சுழித்து ஓடும் தெள்ளிய நீரில் தன் விரல்களால் கோலம் இடுவது போல் அளைந்தாள். அதன் குளிர்ச்சி அவளுக்கு இதமாய் இருந்தது. உடலிலும் மனசிலும் நிறைந்திருந்த உஷ்ணத்தை அதன் தண்மை தணிப்பதாய்த் தோன்றியது. ஒவ்வொரு முறை அவள் விரல்களால் நீரை அளைகிற போதும், தெளிந்த நீரில் வரைந்த ஓவியமொத்த அவளது அழகிய பிம்பம் சிணுங்கிச் சிணுங்கிக் கலைந்தது.

காலையில் சபையில் நிகழ்ந்த சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அவள்  நினைத்துப் பார்த்தாள். யார் ஒருவன் பிரும்ம ஞானத்தில் சிறந்தவனோ அவனுக்கு அரண்மனையின் பசு-மடத்திலிருந்து ஆயிரம் பசுக்களைப் பரிசளிப்பதாக சபையில் நடந்த பிரம்ம யக்யத்தில் மன்னர் ஜனகர் அறிவித்த பிறகு தான் எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்தன. வேத ஞானத்தில் ஒருவருக்கொருவர் எந்த விதத்திலும் சளைக்காத பிற மகா பண்டிதர்கள் எல்லாம் தயக்கத்துடன் அவையடக்கத்தோடு  அமர்ந்திருக்க, இந்த யாக்யவல்கியர் மட்டும் முந்திரிக் கொட்டை மாதிரிச் சட்டென்று எழுந்து, தன் சிஷ்யர்களைப் பார்த்து, ‘அந்த ஆயிரம் பசுக்களையும் நமது ஆஸ்ரமத்துக்கு ஒட்டிக் கொண்டு போங்கள்’ என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியமும் அகம்பாவமும் இருக்க வேண்டும்!

அப்போது கூட சபையில் மெல்லிதாக ஒரு சலசலப்பு எழுந்ததே இன்றி ஒருவரும் தைரியமாக யாக்யவல்கியரின் செயலைக் கேள்வி கேட்க உடனடியாக முன்வரவில்லை. குரு, பாஞ்சாலம் முதலான தேசங்களில் இருந்தெல்லாம் அழைக்கப்பட்டு வந்து திரண்டிருந்த பெரிய பெரிய வேத விற்பன்னர்கள் நிறைந்திருந்த மகா சபையில் இவர் மட்டும் தான் மிகச் சிறந்த பிரம்மஞானியா என்று கார்கி உள்ளூர அப்போது கோபம் கொண்டாள். அந்த சமயத்தில் தான் அஸ்வலன் என்பவன் மெதுவாகத் தன்  இருக்கையை விட்டு எழுந்து, “நீர் தான் எல்லோரையும் காட்டிலும் சிறந்த பிரம்ம ஞானியோ? எந்த அடிப்படையில் பசுக்களை ஓட்டிச் செல்ல உமது சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டீர்?’ என்று யாக்ய வல்கியரைப் பார்த்துக் கேட்டான். அதற்கு யாக்யவல்கியர், ‘நீங்கள் யாரும் உங்கள் ஞானத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பசுக்களை எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. எனக்குப் பசுக்களின் தேவை இருந்ததால் அவற்றை நான் எடுத்துக் கொண்டேன்’ என்று எத்தனை சாதுரியமாகப் பதில் சொன்னார்!

யாருக்குப் பசுக்கள் தேவையோ அவர்கள் பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள் என்றா அரசர் அறிவித்தார்? அவ்விதமானால் அங்கு குழுமி இருந்த அத்தனை பண்டிதர்களும் நான் நீ என்று முண்டி அடித்துக் கொண்டு பசுக்களைச் சூழ்ந்து கொண்டிருக்க மாட்டார்களா? கார்கியின் எண்ண ஓட்டங்கள் கலைவதற்கு முன்னரே, அஸ்வலன் அவளது எண்ணங்களைப் பிரதிபலிக்கிறவன் போல், “அதுவல்ல இங்கே நிபந்தனை, மகரிஷி. தேவை தான் தகுதி என்றால், இங்கே இருக்கிற எல்லாப் பண்டிதர்களுக்கும் பசுக்கள் தேவைப் படுபவையே. ஆனால், ஞானத்தில் யார் விஞ்சியவர்கள் என்பதே இங்கே கேள்வி. அதனால் பிரும்ம ஞானத்தில் நீர் எல்லோரைக் காட்டிலும் மேலானவர் என்று நிரூபித்து விட்டுப் பிறகு பசுக்களை எடுத்துச் செல்லுங்கள்..” என்று யாக்யவல்கியரை நோக்கிச் சூளுரைத்தான். கார்கி இப்போது சற்று நிம்மதியோடு  நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அஸ்வலன் பின் யாக்யவல்கியரிடம் சரமாரியாகத் தத்துவார்த்தங்கள் பற்றிய   கேள்விகளை எழுப்பினான். அவனைத் தொடர்ந்து ஆர்த்தபாகன், பிஜ்யு, உஷஸ்தன், கஹோலன் முதலானோர் எழுந்து வெவ்வேறு விதமான வினாக்களைத் தொடுத்தனர். யாக்ய வல்கியர் அவர்கள் எல்லோருக்கும் புத்தி சாலித்தனமாய்ப்  பதில் அளித்துக் கொண்டு வந்தார். கஹோலன் யாக்யவல்கியரின் பதிலில் திருப்தி அடைந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்த போது, யாக்யவல்கியர் சபையை கர்வத்தோடு பார்த்தார். இனி அவரைக் கேள்வி கேட்பதற்கு அங்கே யாருமே இல்லை என்பது போலவும், அந்த ஆயிரம் பசுக்களுக்கும் அவரே ஏக போக உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்பது போலவும் அவரது பார்வை இருந்தது.

அந்தப் பார்வை தன் மீதும் ஒரு கண நேரம் விழுந்து. சற்றும் தாமதிக்காமல் உடனே அவளைக் கடந்து போனதை கார்கி கவனித்தாள். தனது இருப்பை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. ஒரு வேளை ஆண்களே நிறைந்த அத்தனைப் பெரிய சபையில் அவள் மட்டுமே பெண் என்கிற அலட்சியம் காரணமாக இருக்கக் கூடும். அல்லது பிரும்ம ஞானம் என்பது ஆண்களின் ஏகோபித்த தளம் என்கிற மாதிரியும் அது குறித்துக் கேட்க ஒரு பெண்ணிடம் என்ன கேள்வி இருக்கப் போகிறது என்கிற மாதிரியும் அவரது ஆண் மனத்தில் ஒரு முன் கூட்டிய கற்பிதம் ஆழப் படிந்திருக்கக் கூடும்.

இதற்கு மேலும் பேசாமல் இருப்பது தன் சுயகௌரவத்துக்கு இழுக்கு என்று நினைத்த கார்கி, ஏதோ விசையால் முடுக்கி விடப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்தாள். ‘நான் அந்த சபையில் வீற்றிருக்கும் எந்த ஆண் பிள்ளைகளுக்கும் குறைந்தவள் இல்லை’ என்று அவள் கோபமாய் நினைத்தாள். நானும் மற்ற ஆண் பிள்ளைகளைப் போலவே ஏழு வயசில் உபநயனம் செய்து வைக்கப் பட்டு, பன்னிரண்டு ஆண்டு குருகுலம் வாசம் பண்ணி வேத ஞானம் பயின்றவள். இயற்கையின் அற்புதங்களை வியந்து பலவாறாய்க் கவி பண்ணியவள். தீவிர பிரும்மசரியம் பேணுபவள். யாக்ய வல்கியரின் மனைவி மைத்ரேயியின் அறிவுக்கு எள்ளளவும் குறையாதவள். பிரும்மம் குறித்த தேடலில் இன்னும் சோர்வடையாதவள்.

அவள் யாக்ஞவல்கியரை மடக்க சிருஷ்டி ரகசியங்கள் குறித்த வினாக்களைக் கையில் எடுத்தாள்.

“ஓ, அறிவில் சிறந்த மகா பண்டிதரே, எனது இந்தக் கேள்விகளுக்கு முதலில் பதில் அளித்து விட்டுப் பிறகு பசுக்களை எடுத்துச் செல்லுங்கள். இந்த உலகம் நீரால் நிறைந்திருக்கிறது என்றால், நீர் எதால் நிறைந்திருக்கிறது?”. என்று அவள் தன் முதல் கேள்வியைக் கேட்டாள்.

ஓர் அலட்சியப் பார்வையோடு அவளைப் பார்த்தார் யாக்யவல்கியர். “கேள், கார்கி. நீர் காற்றால் நிறைந்திருக்கிறது’ என்று அவர் அதற்கு பதில் சொன்னார்.

எந்தப் பரிட்சையிலும் முதல் கேள்வி எப்போதுமே சுலபமாகத் தான் இருக்கும். அதனால் பரிட்சையைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. கார்கி அடுத்த கணையை வீசினாள்: “காற்று எதால் நிறைந்திருக்கிறது, யாக்ய வல்கியரே?”

“ஆகாசத்தால்..”

“ஆகாசம்?”

“சூரியனால்..”

“சூரியன்?”

“நட்சத்திரங்களால்”

“நட்சத்திரங்கள்?”

“தேவர்களின் லோகங்களால்..”

கார்கி விடவில்லை. “தேவர்களின் லோகங்கள் எதால் நிறைந்திருக்கின்றன?” என்று கேட்டாள். அவளால், யாக்யவல்கியரின் முகம் சிறுகச் சிறுகப் பொறுமை இழந்து சிவந்து வருவதை உணர முடிந்தது. யாக்ய வல்கியரின்  குரலில் இப்போது உஷ்ணம் ஏறி இருந்தது. அவர் குரல் அடி வயிற்றிலிருந்து வருவது  போல் இருந்தது. அவர் சொன்னார்; “கேட்டுக் கொள், கார்கி. தேவர்களின் உலகம் பிரும்மத்தால் நிறைந்திருக்கிறது. ஏனெனில் நீ கேட்ட இந்த மொத்த வஸ்துக்களும் பிரும்மத்திலிருந்தே தோன்றி வெளி வந்தன..”

கார்கி இதைக் கேட்டுத் தன் கடைசி அஸ்திரத்தைப் அவர் மீது பிரயோகித்தாள்.

“அப்படியானால், பிரம்ம ஞானத்தில் கரை கண்டதாய்ச் சொல்லிக் கொள்ளும்  வேத பண்டிதரே, அந்த பிரும்மம் எதால் ஆனது? அது எதிலிருந்து தோன்றியது?” அவள் கண்களில் அறிவின் தீவிரமும் குரலில் சவால் விடும் அலட்சியமும் தெறித்து அதிர்ந்தன.

யாக்யவல்கியர் இப்போது தன் பொறுமையை முற்றிலும் இழந்து கோபத்தின் உச்சத்துக்குப் போயிருந்தார். கேட்கக் கூடாத ஒரு கேள்வியை அவள் கேட்டு விட்டார்ப்போல் அவர் உடம்பெங்கும் விர்ரென்று உஷ்ணம் ஏறியது.  “கார்கி, உன் கேள்விகளை இதோடு நிறுத்திக் கொள். இதற்கு மேலும் கேட்டால், உன் தலை தூள் தூளாய்ச் சிதறி விடும்..” என்று அவர் அவளை நோக்கி சபையே வெடிக்கக் கத்தினார்.

மொத்த சபையும் அதிர்ச்சியில் உறைந்து போனது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கார்கியின் இதயம் படபடத்து, முகம் வேர்த்தது. அவள் செய்வதறியாமல் மனமும் உடலும் சோர்ந்து ஆசனத்தில் சரிந்தாள்.

இந்த சமயம் ஜனகர் தர்ம சங்கடங்களோடு எழுந்து, “மகரிஷி, தயவு செய்து அமைதி காக்க வேண்டும்..” என்று விண்ணப்பித்துக் கொண்டார். அந்தப் பெரும் சபையில் தனக்காக நியாயம் பேச யாரும் இல்லை என்பதை கார்கி  அந்த நிமிஷம் புரிந்து கொண்டாள். “அரசே, யாக்ய வல்கியரின் பிரும்ம ஞானத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம்..எல்லாப் பசுக்களையும் அவருக்கே கொடுத்து விடுங்கள்..” என்று தன் இருக்கையிலிருந்தே சுரத்தின்றிக்  குரல் கொடுத்தாள்.

அதற்கப்புறம் சபையில் நடந்தவை அர்த்தமற்றவை. அரச மரியாதை கருதி அவள் சபையின் புழுக்கத்தைச் சகித்துக் கொண்டு சபை முடிகிற வரை அமர்ந்திருந்தாள். சபை முடிந்து வெளியே வந்த போது யாக்யவல்கியரின் விசுவாசமான சிஷ்யர்கள் அவள் பக்கம் பார்த்து இகழ்ச்சியாய்ச் சிரித்தபடியே பசுக்களை உற்சாகமாய் ஆஸ்ரமத்தை நோக்கி ஒட்டிக் கொண்டு போனதைப் பார்த்தாள்..

கார்கி, நதி நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டாள். சபையின் ஞாபகங்களில் இருந்து வெளியே வரும் முயற்சியாய்  நீரில் தெரியும் சூரியனின் பிம்பத்தையே உற்று நோக்கிய படி இருந்தாள். அது அஸ்தமன நேரத்து சூரியன் என்பதால், அதன் பிம்பம் பகல் நேரத்து சூரியனதைப் போல் உறுத்தாமல் கண்களுக்கு இதமாய் இருந்தது.  நீரில் தெரியும் சூரியன்  ஆகாயத்தில் தெரியும் சூரியனின் பிம்பம் என்றால் ஆகாயத்தில் தெரியும் சூரியன் எதனுடைய பிம்பம் என்று அவள் தன் மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.  அது பிரம்மத்தின் பிம்பம் என்றால், பிரம்மம் எதனுடைய பிம்பம்?

சட்டென்று மர இலைகள் சலசலக்க எங்கிருந்தோ ஒரு குளிர்ந்த காற்று கிளம்பி வந்து அவளது முகத்தை வருடி விட்டுப் போனது. மனசைத் திசை திருப்பும் இந்த பிம்பங்களின் பொய்ம்மைகளில் இருந்து வெளியே வா, கார்கி.. இந்தக் காற்று நிஜம். இந்தத் தண்ணீரின் குளிர்ச்சி நிஜம். இந்த மரங்களும், செடி கொடிகளும் இங்கே கிறீச்சிட்டுக் கொண்டு கூடு நோக்கிப் பறந்து செல்லும் இந்தப் பட்சி ஜாலங்களும் நிஜம். யாக்யவல்கியருக்கும் அவரது விசுவாசமான சிஷ்யர்களுக்கும் கூட, கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தைக் காட்டிலும் கண் முன் நிற்கும் அந்த ஆயிரம் கறவைப் பசுக்கள் தான் நிஜம்!

தூரத்தில் யாக்யவல்கியரின் ஆசிரமம் நிழலாய்க் கண்ணில் பட்டது. ஆசிரமத்தின் கூரையின் மீது படந்திருந்த இளம் சுரைக் கொடிகள்  இங்கிருந்து, இந்த மாலை நேரத்துப் பொன் வெய்யிலில் மங்கிய ஒளிப் படலங்களாய்த் தெரிந்தன. இந்த நேரத்தில் அவரது இரண்டு மனைவிகள்- மைத்ரேயியும் காத்யாயினியும் ரிஷியின் சாயங்கால நியமங்களுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். 

காத்யாயினியை விட மைத்ரேயிக்குத் தான் ஞான மார்க்கத்தில் சிரத்தை அதிகம். காத்யாயினி சின்னச் சின்ன லௌகீக சுகங்களிலேயே  எளிதில் திருப்தி அடைந்து விடுபவள். அதுவும் இன்றைக்கு ஆஸ்ரம வரவு ஆயிரம் பசுக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவளைக் கையிலேயே பிடிக்க முடியாது. இந்த ஆயிரம் பசுக்களில் எந்தப் பசுவின் மடியிலிருந்து முதலில் பால் கறப்பது என்று யோசிப்பதிலேயே அவள் இன்றைய பொழுது முழுவதையும் போக்கி இருப்பாள்!

கார்கிக்கு ஏனோ இப்போது மைத்ரேயியிடம் சில விஷயங்கள் மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருந்தது. சில சமயம் அவள் இந்த இடத்துக்கு அந்தி சாய்கிற நேரங்களில் வருவதுண்டு.  இந்த அசோக மரங்களில் எந்த ஒன்றின் கீழாவது அமர்ந்து ஏதாவது ஒரு சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டிருப்பாள். அவளும் கார்கியைப் போலவே சுயமாகவே சுலோகம் இயற்றுவதில் வல்லவள். ஒரு தடவை அவள் கார்கியிடம், வைகறைப் போதில் உஷை சிவந்த எருதுகள் பூட்டிய தங்க ரத்தத்தில், தன் காதலன் சூரிய தேவனின் வருகையை அறிவித்துக் கொண்டு தொடுவானத்திலிருந்து ஒளி வெள்ளமாய்ப் புறப்பட்டு வருவதை வருணித்து ஒரு கவி சொன்னாள்.

மைத்ரேயியிடம் கார்கிக்கு எப்போதுமே  ஒரு தனிப்பட்ட மதிப்பு உண்டு. தர்ம நியாயங்களை உணர்ந்தவள் அவள். அவள் கணவர் இன்றைக்கு சபையில் நடந்து கொண்ட விதம் இத்தனை நேரம் அவளுக்கும் தெரிந்திருக்கும்.. அவளிடம் இது பற்றிப் பேச வேண்டும். நியாயம் கேட்க வேண்டும். அவள் நிச்சயம் நியாயத்தையே பேசுவாள். ஏனெனில் உண்மையான ஞான மார்க்கத்தை அறிந்தவள் அவள். அவளிடம் பேசும் போது தன் தலையைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல் தைரியமாகப் பேசலாம் என்று நினைத்து கார்கி சிரித்துக் கொண்டாள்.

தொலைவில் யாக்யவல்கியரின் ஆஸ்ரம வாசலின் மூங்கில் கதவுகள் திறக்கும் சபதம் ஏதோ ஒரு பட்சியின் கிறீச்சொலி போல் மென்மையாகக்  கேட்டது. கார்கி அந்த திசையை நோக்கினாள். அவள் மனசின் விருப்பத்தை அறிந்தவள் மாதிரி மைத்ரேயி தான் ஆஸ்ரமத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு அவளை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். கார்கி நதிக் கரையில் உட்கார்ந்திருப்பதை அவள் தூரத்திலிருந்தே கவனித்திருக்க வேண்டும்...

மைத்ரேயி அருகில் வந்தவுடன் கார்கி அவளைப் பார்த்துப் புன் முறுவல் செய்தாள். அது மரியாதை நிமித்தம் செய்யப் பட்ட ஒரு சம்பிரதாயப் புன்னகையாய் மைத்ரேயிக்குப் பட்டது. அதில் எப்போதும் தோய்ந்திருக்கும் வழக்கமான சிநேகம் கலந்த உற்சாகம் இன்றைக்கு இல்லை.

மைத்ரேயி கார்கியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளது தோள்களை நட்போடு மெல்ல அழுத்தினாள்.

“என்ன பலமான சிந்தனை, கார்கி?”

“பெரிதாக ஒன்றும் இல்லை.  ரொம்பவும் சிந்திக்காமல் இருப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” .

மைத்ரேயி விசித்திரமாய் அவளைப் பார்த்தாள்: “ஏன் அப்படி?’

“நிறையச் சிந்தித்தால் கேள்வி கேட்கத் தோன்றும். அப்புறம் தலை சிதறிப் போகலாம். தலை போய் விட்டால், பிறகு எப்படி மறுபடியும் சிந்திக்க முடியும்?’ என்று சொல்லிச் சிரித்தாள் கார்கி.

மைத்ரேயி லேசாய்ப் புன்னகைத்தாள். “ராஜ சபையில் இன்றைக்குக் காலையில் நடந்த விஷயங்களை நீ இன்னும் மறக்கவில்லை என்று எனக்குப் புரிகிறது.. நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். எனக்கும் கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கிறது..”

“எல்லோருக்குமே வருத்தம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், அவரவர் குணமே அவரவர் பேச்சிலும் செயலிலும் முடிவாக வெளிப்படுகிறது, இல்லையா?”

“என் கணவர் மீது உனக்குக் கோபம் இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன். எல்லோருக்குமே அவர்களுக்கென்று ஒரு குணமும் சுபாவமும் இருப்பதைத் தவிர்க்க முடியாது, கார்கி. பிரம்மத்துக்கு மட்டும் தான் எந்த குணமும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்...”

“குணங்களே அற்ற பிரம்மத்திலிருந்து தான் இத்தனை குணங்கள் பிறந்திருக்கின்றன என்று நம்புவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. அது மட்டும் இன்றி, இந்த நிர்க்குணப் பிரம்மத்தின் பொருட்டு இந்த மனிதர்கள் அடித்துக் கொள்கிற போது தான், இவர்களின் உண்மையான குணங்களும் அவர்களே அறியாமல்  வெளியே வந்து விடுகின்றன.“ என்று சொன்ன கார்கி கொஞ்சம் நிதானித்தாள். பின் மைத்ரேயியின் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கி, எதிரே தெரிந்த மலையையும் அதன் மரங்களையும் பார்த்தபடி இப்படிச் சொன்னாள்: எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மம் தான் காரணம். ஆனால், பிரம்மத்துக்கு என்னவோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் தான் அது பிரம்மமாய்த் ‘தேமேன்’ என்று எங்கோ மௌனமாய் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது.!.”

மைத்ரேயி கார்கியை உற்றுப் பார்த்துச் சிரித்தாள். இவள் கோபத்தைக் கூட எவ்வளவு கவித்துவத்தோடு வெளிப்படுத்துகிறாள் என்று அவள் நினைத்தாள். நதியின் எதிர்க் கரைகளில் செடிகளும் புதர்களும் மண்டி இருந்தன. அவற்றின் நடு நடுவே விதவிதமான நிறங்களில் பெயர் தெரியாத காட்டு மலர்கள் மாலை நேரத்து வெய்யிலில் ரத்தினக் கற்கள் போல் மின்னிய படி அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன. நிறமே அற்ற ஒரு மூல வஸ்துவிடமிருந்து தான் இத்தனை நிறங்களும் தோன்றி இருக்கின்றனவா?

மைத்ரேயி இப்போது பேச்சை வேறு திசையில் கொண்டு போக எண்ணினாள்.

“நான் உன்னை ஒன்று கேட்கிறேன். என் கணவர் ஒரு கட்டத்தில் உன் தலை சிதறி விடும் என்று கோபமாய்ச் சொன்ன போது, அவர் சபித்தால் அப்படி ஆகிவிடும் என்று உண்மையிலேயே நீ நம்பினாயா? அப்படி நம்பித்தான் நீ உன் வாதத்தை முடித்துக் கொண்டாயா?”

கார்கி ஒரு கணம் மௌனமாக இருந்தாள். பார்வையை மீண்டும் மைத்ரேயியின் பக்கம் திருப்பினாள். “அப்படி நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை, மைத்ரேயி. இயற்கையாய் என் தலை சிதறும் என்று நான் நிச்சயமாய் நம்பவில்லை. ஆனால், உன் கணவர் கோபத்தோடு இப்படிச் சொன்ன போது, அவரையும் அவரைச் சூழ்ந்திருந்த அவரது சிஷ்யர்களையும் ஒரு வினாடி கவனித்தேன். ஆளுக்கொரு உருண்டு திரண்ட, உலோகப் பூண் போட்ட குண்டுத் தடிகளைக் கையில் வைத்திருந்தார்கள்..”

மைத்ரேயிக்குச் சிரிப்பு வந்தது. “நீ புத்திசாலி மட்டுமில்லை..பொல்லாத பெண்ணும் கூட, கார்கி! அதெல்லாம் இருக்கட்டும். பிரம்மஞானிகள் கடைசியில் வன்முறையில் இறங்குகிற அளவுக்குப் போய் விடுவார்கள் என்று நினைக்கிறாயா?”

“தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்படித்தான் அந்த சமயத்தில் தோன்றியது. போக மாட்டார்கள் என்பதற்கு மட்டும் என்ன உத்தரவாதம்? பிரம்மம் இருக்கிறதோ இல்லையோ, கண் முன்னால் கறவைப் பசுக்கள் இருக்கின்றனவே?”

எங்கிருந்தோ பசுக்கள் கத்துகிற சத்தம் லேசாய்க் கேட்டது. அது யாக்யவல்கியரின் ஆசிரமத்தின் சுற்றுப்புற  வளாகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஏனேன்றால், அநேகமாய் ஜனகபுரியின் எல்லாப் பசுக்களும் இப்போது அங்கே தான் இருக்கின்றன!

சற்று அமைதிக்குப் பின் மைத்ரேயி. தயக்கத்தோடு கார்கியிடம் இப்படிக் கேட்டாள். “என் கணவர் சபையில் அப்படி நடந்து கொண்டதைக் கொஞ்சம் மறந்து விட்டுப் பேசுவோம். மனசில் கை வைத்துச் சொல்.. அவரிடம் நீ கடைசியாய்க் கேட்ட அந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியுமா?”.

கார்கி சிரித்தாள்: “இதற்கு ஏன் பெரிய பீடிகை எல்லாம் போடுகிறாய்? எனக்கு அந்தக் கேள்விக்கு சத்தியமாய் பதில் தெரியாது..”

மைத்ரேயி விழிகள் விரிய கார்கியைப் பார்த்தாள்.  

“அப்படியானால், யாக்யவல்கியருக்கும் அதற்குப் பதில் தெரியாது என்று நினைக்கிறாயா, கார்கி?”

“தெரிந்திருந்தால் அவர்  அப்படிக் கோபப்பட்டிருக்க மாட்டார். சரி எனக்கு ஒன்று சொல் நீ எப்போதாவது உன் கணவர் யாக்யவல்கியரோடு ஏகாந்தமாய் இருக்கிற போது, நான் சபையில் கேட்ட கேள்வியை தனிமையில் அவரிடத்தில் கேட்டிருக்கிறாயா?”

மைத்ரேயி இப்போது தயக்கத்தோடு சொன்னாள்: “உம்..ஒரு தடவை கேட்டிருக்கிறேன்..”

“என்ன கேட்டாய்?”

“பிரும்மம் எது என்று கேட்டேன்..”

“நீ அவரின் மனைவி என்கிற காரணத்தால் உன் தலைக்கு ஆபத்து ஏற்படவில்லை! அல்லது நீ கேட்ட நேரத்தில் உங்கள்  இரண்டு பேருக்கும் இருந்த நெருக்கத்தின் அளவு கூடக் காரணமாய் இருந்திருக்கலாம்..” என்று குறும்புத் தனமாய்ச் சொல்லிச் சிரித்த கார்கி, “சரி, அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்?” என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

“என்னவோ சொன்னார்..அது நெட்டையும் இல்லை, குட்டையும் இல்லை; நிழலும் இல்லை; வெளிச்சமும் இல்லை; உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை...இதே மாதிரி வரிசையாய்ச் சொல்லிக் கொண்டே போனார்..”.

கார்கி இதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்தாள். அவள் முகம் பிரகாசமானது. “இதிலிருந்தே உனக்கு அர்த்தமாகவில்லையா, மைத்ரேயி, அவருக்கும் பதில் தெரியவில்லை என்று? இல்லையென்றால், இருப்பதைப் புரிந்து கொள்ள எதற்கு இத்தனை ‘இல்லை’கள்?”

அவர்கள் இரண்டு பேருமே இப்போது மௌனமானார்கள். ஆற்று நீரில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு, அந்தக் குளிர்ந்த நீரின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி சற்று நேரம் பேச்சின்றி இருந்தார்கள். நீரில் தெரிந்து கொண்டிருந்த சூரியனின் பொன்னிற பிம்பத்தை இப்போது அந்தி இருட்டு கவ்வி உண்டிருந்தது. கார்கி மீண்டும் தூரத்து மலையைப் பார்த்தாள். சூரியன் தன்  உஷையைத் தேடிக் கொண்டு அவளது அந்தப்புரத்தை நோக்கி  விரைகிறவன் போல மலை இடுக்கில் தன் பெட்டி படுக்கைகளோடு பதுங்கிக் கொண்டிருந்தான்.

மைத்ரேயி இப்போது எழுந்து கொண்டாள்.  “கார்கி, சந்தியா காலம் முடிந்து இரவு தொடங்கி விட்டது. நான் போக வேண்டும். நீ பிரும்மச் சாரிணி. நீ சுதந்திரமாய் எப்போது வேண்டுமானாலும் உன் ஆஸ்ரமத்துக்குப் போகலாம் என்றாலும் இரவில் இங்கே அதிக நேரம் இருப்பது உனக்கும் அவ்வளவு நல்லதில்லை...அது மட்டுமன்றி உன் தந்தை ரிஷி வாசக்னு, ஆஸ்ரமத்தில் உனக்காகக் கவலையோடு காத்துக் கொண்டிருப்பார்..“

கார்கியும் அவளுடன் கூடவே  எழுந்து கொண்டாள். இரண்டு பேரும் ஒருவர் கைகளை ஒருவர் நட்போடு பற்றியபடி, அசோக மரங்களை எல்லாம் கடந்து  நடந்து போனார்கள்.  ரிஷி வாசக்னுவின் ஆஸ்ரமும் ரிஷி யாக்யவல்கியரின் ஆஸ்ரமும் எதிர் எதிர் திசைகளில் இருந்ததால், இருவருடைய ஆஸ்ரமங்களுக்கும் பிரிகிற வழிகளின் சந்திப்பு வந்தவுடன் விடை பெற்றுக் கொள்கிற  தோரணையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மரங்களின் அடர்த்தியில் ஒருவர் முகத்து உணர்வுகள் இன்னொருவருக்குப் புலப்படாத அளவுக்கு அந்தி இருள் வியாபித்திருந்தது.

“அப்போது, நான் கிளம்புகிறேன்..” என்று கார்கி, மைத்ரேயியின் விரல்களில்  இருந்து மெல்லத் தன் விரல்களைப் விடுவித்துக் கொண்டாள். ஆனால், மைத்ரேயி கார்கியின் கைகளை விட விரும்பாதவளாய்  அவற்றை மீண்டும் பற்றினாள். அவள் தன்னிடம் இன்னும் எதையோ சொல்ல விரும்புகிறாள் என்று கார்கிக்குப் புரிந்தது.

“மைத்ரேயி, நீ என்னவோ என்னிடம் கேட்க விரும்புகிறாய். எதுவாய் இருந்தாலும் நீ தயக்கம் இன்றிக் கேட்கலாம்..” என்றாள் கார்கி.

“ஒன்றும் இல்லை. நீ பேசியதை எல்லாம் கேட்ட பின் என் மனசில் புதிய கேள்விகள் உறுத்துகின்றன. கார்கி, நீ என்ன நினைக்கிறாய்? சபையில் நீ பிரம்மம் குறித்து எழுப்பிய கேள்விக்கு என் கணவர், ‘தெரியாது’ என்று பதில் சொல்லி இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா?”

கார்கி நிதானமாய்ச் சொன்னாள்: “ஆமாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. என்னைப் பொருத்த வரை ‘எல்லாம் தெரிந்தவன் தான் பிரம்ம ஞானி’ என்று நான் நம்பவில்லை. எது தனக்குத் தெரியாதோ அதைத் தைரியமாய்க் கூச்சம் இன்றித் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் தான் பிரம்ம ஞானி. தெரியாது என்று தெரிந்து கொள்வதும் ஒரு ஞானம் தானே?”

மைத்ரேயியிடம் இருந்து சில கணங்கள் எந்த பதிலும் வரவில்லை. பற்றி இருந்த அவளது விரல்கள் லேசாக அதிர்வதை கார்கி உணர்ந்தாள்.  மைத்ரேயியின் குரல் தழுதழுத்தது. “கார்கி..யாக்யவல்கியரைக் காட்டிலும் நீ எவ்வளவோ வயதில் சின்னவள்..ஆனாலும் உன் அறிவு என்னை வியக்க வைக்கிறது. நியாயமாய் அந்த ஆயிரம் பசுக்களும் உன்னைத் தான் சேர்ந்திருக்க வேண்டும்..”

கார்கி அவளது தோள்களை அன்போடு அழுத்தினாள்.

“நீ மீண்டும் தவறு செய்கிறாய், மைத்ரேயி..ஒரு பிரும்ம ஞானிக்கு அத்தனைப் பசுக்கள் எதற்கு? ஆயிரம் பேருக்குச் சேர வேண்டியவற்றைத் தான் ஒருவனே சுவீகரிக்க நினைப்பவன் எப்படி ஞானியாக இருக்க முடியும்? அவனுக்குப் பெயர் போகி....”

தூரத்தில் எதிர் எதிர் திசைகளில் இருந்த இருவரது ஆஸ்ரமங்களிலும் யாரோ தீபங்களை ஏற்றுவது மங்கலாய்த் தெரிந்தது. மைத்ரேயி வார்த்தைகளின்றி நெகிழ்ந்து  போனாள். விடைபெறும் முகமாக  கார்கியின் தோள்களைப் பற்றி  அவளை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.  இன்னும் சிறிது நேரம் அங்கே இருந்தால் மைத்ரேயி உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கி விடுவாள் போல் தோன்றியது.

சில தினங்களுக்குப் பிறகு, ஒரு நாள் வைகறைப் போதில்  கார்கி பூக்கள் பறிக்கும் நிமித்தம், யாக்ய வல்கியரின் ஆஸ்ரம வளாகத்தைத் தாண்டி இருந்த மலர் வனம் நோக்கிப் போனாள். போகிற வழியில் ஆஸ்ரமத்தின் வாசலுக்கு முன் சற்று நேரம் தாமதித்தாள்.  உள்ளே மைத்ரேயி எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று ஆஸ்ரமத்துக்குள் பார்வையைச் சுழல விட்டாள். ஏனோ அன்றைக்கு ஆஸ்ரமம், எப்போதுமுள்ள கலகலப்பும் உற்சாகமும் அற்று சிஷ்யர்களின் நடமாட்டமின்றிக் களையிழந்து காட்சி அளித்தது. உள்ளே வழக்கமாய் யாக்யவல்கியர் உட்கார்ந்து சீடர்களுக்கு வேதம் கற்பிக்கும் உயரமான மேடை இன்றைக்கு  வெறுமையாய் இருந்தது. கார்கிக்கு ஏதோ மனதில் நெருடியது.

அவள் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றாள். தூரத்தில் குடிலின் உள்ளிருந்து யாரோ ஒரு பெண் வெளியே வருவது நிழலாய் இங்கிருந்து தெரிந்தது. அந்தப் பெண் வாசலில் நிற்கும் கார்கியை  நெருங்கி வரும் போதே அது மைத்ரேயி என்று புரிந்தது. மைத்ரேயி வெகு அருகில் வந்து விட்ட போதும், கார்கி ஏனோ அவளை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கி  தலை குனிந்தே நின்றிருந்தாள்.

மைத்ரேயி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, கார்கியின் தோள்களைப் பற்றினாள். கார்கி இப்போது அவளை நிமிர்ந்து பார்த்தாள். மைத்ரேயியின் முகம் எந்தச் சலனமும் இன்றி அமைதியாய் இருந்தது.

“மகரிஷி எங்கே? ஏன் ஆஸ்ரமம் இவ்வளவு வெறிச்சோடி இருக்கிறது?”

மைத்ரேயி எதுவும் பேசாமல் இருந்தாள்..

“என்ன நடந்தது?” என்று மீண்டும் கேட்டாள் கார்கி.

“அன்றைக்கு சாயங்காலம் நாம் நதிக்கரையில் பேசி விட்டுப் போனபின் வெகு நேரம் என் மனசாட்சி என்னைக் குடைந்து கொண்டிருந்தது. அதனால்,  நீ என்னிடம் பேசிய நியாயங்களை எல்லாம் அன்று  இரவே மகரிஷியிடம் அவர் ஏகாந்தமாய் நல்ல மனநிலையில் இருக்கிற நேரம் பார்த்து நான் பேசினேன். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் தான் ஞானி என்று நீ சொன்னதையும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் அவரிடம் சொல்லி விட்டேன்..”

கார்கிக்கு ‘திக்’கென்றது. “எல்லாவற்றையுமே சொல்லி விட்டாயா? பெரிய தவறு செய்து விட்டாய், மைத்ரேயி..நாம் அந்தரங்கமாய்ப் பகிர்ந்து கொண்ட எண்ணங்களை எல்லாம் நீ அவரிடம் சொல்லி இருக்கக் கூடாது...அதை எல்லாம் கேட்டு யாக்யவல்கியருக்குக்  கோபம் வரவில்லையா?..”

“இல்லை, கார்கி. அது தான் எனக்கும் ஆச்சரியம்! நான் சொல்லி முடித்த பிற்பாடு,  நெடு நேரம் அவர் ஆகாயத்தை வெறித்த படி எதுவும் பதில் சொல்லாமல் மௌனமாகச் சயனித்திருந்தார். பின் மறு நாள் காலை, என்னையும் காத்யாயினியையும் அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அன்போடு பேசினார். “மைத்ரேயி.. காத்யாயினியையும் ஆஸ்ரமத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்.. நியாயத்தை யார் கேட்டாலும் வயசு வித்யாசம் பாராட்டாமல் ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லை என்றால் அது எப்படி ஞானம் ஆகும்? அது கர்வம் அல்லவா? தெரியாததைத் தெரிந்து கொள்கிற வரை, தெரிந்த மாதிரி நடித்துக் கொண்டிருப்பது நம்மை வேஷதாரிகளின் பட்டியலில் சேர்த்து விடாதா? பூரண ஞானம் என்று ஏதாவது இருக்கிறதா என்று இப்போதும் எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் அப்படி .ஒன்று இருக்குமானால் அதையும் வசபடுத்திக் கொள்கிறவரை நான் பிரும்ம ஞானி ஆகமாட்டேன்.’.என்று சொன்னார். ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று அவரைச் சமாதானப் படுத்த முயன்றேன். அவர் சமாதானம் அடையவில்லை. உன் கேள்விகள் அவரை மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன என்று எனக்குப் புரிந்தது. அமைதியை நாடி மலையின் மீதுள்ள அருவிக் கரையில் கொஞ்ச காலம் தங்கி இருந்து தியானத்தில் ஈடுபடப் போவதாகச் சொன்னார். அங்கு உங்களுக்கு பிரும்ம ஞானம் கிட்டும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். தெரியவில்லை என்று பதில் சொன்னார். எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்டேன். அதற்கும் தெரியவில்லை என்று பதில் சொன்னார்.. ஜனக சபையிலிருந்து பரிசாக வந்த எல்லாப் பசுக்களையும் அவிழ்த்து விட்டு விடுங்கள், அவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். பிறகு நாங்கள் எல்லோரும் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் மலையை நோக்கிக் கிளம்பிப் போய் விட்டார்..“

மைத்ரேயியின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க கார்கிக்கு சங்கடமாக இருந்தது. “கேட்க ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, மைத்ரேயி.. உனக்கும் காத்யாயினிக்கும் என் மீது கோபம் இல்லையே?...”

மைத்ரேயி சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றாள். அவள் முகத்தில் சோகத்தின் சாயல் இப்போது மெல்ல வெளிப்படத் தொடங்கியிருந்தது. “காத்யாயினியைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு உன் மீது எந்தக் கோபமும் இல்லை. ஆனால், இங்கே கீழே கிடைக்காத எதைத் தேடி அவர் மேலே போய் இருக்கிறார் என்று தான் புரியவில்லை. எப்போது திரும்புவார் என்றும் தெரியவில்லை..”

மைத்ரேயி கார்கியின் பதிலை எதிர்பார்க்காதவள் போல் உள்ளே போய் விட்டாள்.

கார்கி மெதுவாக மலர் வனத்தை நோக்கி நடந்தாள். அவள் மனசில் பல விதமான எண்ணங்கள் கலவைகளாய் ஓடிக் கொண்டிருந்தன. தன் சொற்களால் யாக்ய வல்கியரிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றம் ஒரு  புறம் அவளுக்கு  அவர் மீது மீண்டும் மதிப்பையும் மரியாதையையும் மீட்டுக் கொடுத்திருந்தது உண்மை தான் என்றாலும், அவர் எடுத்த இந்த அதீத முடிவை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. தரையில் கிடைக்காத எந்த ஞானத்தைத் தேடி அவர் மலைக்குப் போய் இருக்கிறார்  என்று கார்கி யோசித்துக் கொண்டே போனாள். இதைத் தானே மைத்ரேயியும் அவளிடம் கடைசியாய்ச் சொல்லி விட்டு உள்ளே போனாள்? யாக்யவல்கியர் இப்படிச் சிரமப் பட்டுத் தேடிக் கொண்டு சென்றிருப்பதை அவர் அருகிலேயே இருந்த மைத்ரேயி எத்தனை சுலபமாய் அடைந்து வைத்திருக்கிறாள்!

போகிற வழியில், இருபுறமும் பரந்த விரிந்து கிடந்த புல் வெளிகளில், பச்சை வானத்தில் மிதக்கும் வெள்ளை மேகங்கள் போல் ஏராளமான பசுக்கள் சுதந்திரமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் ஏதாவது ஒரு பசுவாவது யாக்ய வல்கியர் தேடித் போயிருக்கும் பிரம்ம ஞானத்தை அறிந்து வைத்திருந்தால் அது அவரை தடுத்து நிறுத்தி அவருக்கு முன் போய் நின்று கொண்டு, பிரும்மம் எது என்று ஒரு சுலோகம் பாடி இருக்கக் கூடாதோ என்று நினைத்துச் சிரித்தாள் கார்கி. ஆனால் பசு பேசாது. பிரம்மத்தை அறிந்தவர்களும் பேச மாட்டார்கள்!

அவள் நடந்து கொண்டே கண்களை உயர்த்தி மலைப் பாதையைப் பார்த்தாள். அதன் பசிய காடுகளுக்கு நடுவே வெள்ளைக் கோடு கிழித்த மாதிரி தொலை தூர உயரத்தில் ஓர் அருவி வழிந்து கொண்டிருந்தது. அதற்குக் கீழே மங்கலாய் ஒரு சின்னப் புள்ளி தெரிந்தது. ஒரு வேளை அது பிரும்ம ஞானம் தேடிப் போயிருக்கும் யாக்யவல்கியராகக் கூட இருக்கலாம்.

***************************************************

(பிருஹதாரண்யக உபநிஷத்தில் வரும் கார்கி-யாக்யவல்கியர் சம்வாதத்தை அடிப்படையாக வைத்துக் கற்பனையாக விஸ்தரித்து எழுதப் பட்டது.)

கணையாழி, மே-2016