Sunday, November 28, 2010

விபரீத ஆராய்ச்சி - (கடிதம்-2)

கடிதங்கள் வரிசை-கடிதம்-2

இந்தக் கடிதம் ஆகஸ்ட்-96 கணையாழி இதழில் வெளி வந்தது. இது, இதற்கு முந்திய இதழில்,கொடுமுடி ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய கடிதத்துக்கு எதிர் வினையாக நான் எழுதிய கடிதம். அதி நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கஷ்டப்பட்டு வேதரிஷிகளின் கவிதைகளில் "கண்டுபிடித்து", அவை அந்தக் காலத்து ரிஷிகளுக்கே தெரிந்திருந்தன என்கிற மாதிரியான ஓர் அபத்தமான வாதத்தை அவர் அந்தக் கடிதத்தில் முன் வைத்திருந்தார்.)

"விபரீத ஆராய்ச்சி "

பண்டிட் ஜவகர்லால் நேரு தனது 'உலக சரித்திரம்' (Glimpses of World History) என்ற நூலில், ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "தற்காலத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த ஹிந்து, முகமதிய மறுமலர்ச்சி இயக்கங்கள் எல்லாம் தங்களது பழைய பல மூட சம்பிரதயங்களையும் தவறான கோட்பாடுகளையும் தைரியமாக எதிர்க்கவும் முடியாமல், புதிதாய் வளர்ந்து வரும் மேற்கத்திய விஞ்ஞான சாஸ்திரங்களைப் புறக்கணிக்கவும் முடியாமல், இரண்டும்கெட்டான் நிலையில் தங்களது பழைய 'புனிதப் புஸ்தகங்களில்' புதிய விஞ்ஞானக் கோட்பாடுகளைச் செருகிப் பொருத்திப் பார்த்து சந்தோஷப் பட ஆரம்பித்திருக்கின்றன.இத்தகைய போக்கு எதிர்காலத்தில் வியர்த்தமாகவே முடியும். மாறி வரும் உலகின் புதிய போக்குகளுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதை விட்டு விட்டு, இவர்கள் பழமையின் பாரம்பரியத்தின் எடையால் அழுந்திக் கிடக்கிறார்கள். ஆனால் தலையைப் பின் பக்கமாய்த் திருப்பி வைத்துக்கொண்டு, பின்னல் பார்த்தபடியே முன்னால் முன்னேறிச் செல்வது என்பது சுலபமான சமாசாரம் இல்லை. ." (chapeter 113; page 437; Jawaharlal Memorial Fund Publications).

கொடுமுடி ராமகிருஷ்ணனின், வேத ரிஷிகளின் சுலோகங்களில் நவீன விஞ்ஞானக் கருத்துகளைச் செருகும் முயற்சியைப் படித்த போது, எனக்கு மேலே குறிப்பிட்ட நேருவின் வாசகங்களே நினைவுக்கு வந்தன. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆரிய சமாஜத்து தயானந்த சுவாமி இந்தக் காரியத்தைத் தான் செய்தார். வேத ரிஷிகளின் கவிதைகளில் ஆகாய விமானத் தொழில் நுட்பத்தைப் புகுத்தி வேத ரிஷிகளின் வசம் மணிக்குப் பத்தாயிரம் மயில் வேகத்தில் பறக்கும் ஆகாய விமானங்கள் இருந்தன என்று ஒரு போடு போட்டார். 1980-களின் ஆரம்பத்தில் டில்லியில் நடந்த வேத காலத்து விஞ்ஞானம் பற்றிய சர்வதேச சம்மேளனத்தில் (World Assembly on Vedic Sciences) மகரிஷி மகேஷ் யோகி ரிக்வேதப் பாடல்களில், இருபதாம் நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் Unified Field Theory சொல்லப்பட்டிருப்பதாக பிரகடனம் செய்தார். (Tradition, Science and Society, by Dr. S. Balachandra Rao; chapter- 2; page -31). சில ஆண்டுகளுக்கு முன் உத்திரப் பிரதேசத்தில் அப்போதைய பி.ஜே.பி. அரசு பள்ளிகளில் வேத காலத்துக் கணிதம் (Vedic Maths) என்ற ஒன்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க முயற்சி செய்தது. இந்த முயற்சியின் பின்னணி, 1965-ஆம் ஆண்டு வெளிவந்த கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியாரான சுவாமி பாரதி கிருஷ்ண தீர்த்தாவின் புதிய 'கண்டு பிடிப்பான ' Vedic Mathematics' என்ற புத்தகம். (Frontline- Oct.22, 1993- இதழில் இந்தப் புஸ்தகத்தைக் கடுமையாய் விமரிசித்து Prof. S.G. Devi என்பவர் கட்டுரை எழுதினர். பக்கம்.90)

இவை எல்லாமே, வேலை மெனக்கெட்டு நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பழமையான மத நூல்களில் தேடித் பார்க்கிற அற்ப சந்தோஷத்தை முன்னிட்டு செய்யப்பட்ட அபத்தமான முயற்சிகள் ஆகும். இந்தப் பட்டியலில் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் கொடுமுடியார், கற்பனையில் இவர்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார் என்றே தோன்றுகிறது. இல்லை என்றால், இந்திரன் அகலிகையைக் கெடுத்த அந்தப் பழம் கதையில் இந்த மனிதர் அல்ட்ரா வயலட் கதிர்கள் எலக்ட்ரானைத் தாக்கி வெளியே கொண்டு வருகிற Atomic Physics சமாசாரத்தைத் தேடுவாரா? இப்படி ஒவ்வொரு புராணக் கதைக்கும் இந்த மாதிரி விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டே போகிற போது, இவர் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக வருவார் என்றே தோன்றுகிறது.

ஆகவே, திரு. ராமகிரிஷ்ணணன் போன்றவர்களின் இத்தகைய 'ஆராய்ச்சிகள்' வேதரிஷிகளின் மரியாதையைக் கெடுப்பதாகவே முடியும். (திரு ராமகிரிஷ்ணனுக்கு வேத ரிஷிகள் என்ன கெடுதல் செய்தார்கள்?) வேத காலத்து ஆரியர்கள் இயற்கையைக் கண்டு புகழ்ந்தும் வியந்தும், தங்களுக்கே உரிய பாணியில் பதிவு செய்து வைத்த அழகிய கவிதைகளே வேதப் பாடல்கள். அவை எளிமையானவை. ஒலிநயமும் சொல்நயமும் மிக்கவை. அக்காலத்து மனித வாழ்க்கை முறைகளையும் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்புலமாகக் கொண்டிருப்பவை. அவற்றை சமூகவியல் கண்ணோடு நோக்கி, டி.டி. கோசாம்பி, தேவி பிரசாத் சாட்டோபாத்யாய் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆராய்ந்து அளித்திருக்கிற விஸ்தாரமான விளக்கங்கள் அறிவுக்கு உகந்தவையகவும் அதே சமயம், அக்காலத்திய அறிவு ஜீவிகளான வேத கவிகளின் மேன்மையைத் தெளிவு படுத்துபவனவாகவும் இருக்கின்றன.

ஆனால், அவற்றைத் தற்கால விஞ்ஞானக் கண் கொண்டு செய்கின்ற இத்தகைய ஆராய்ச்சிகள் வீண் வேலை. அவற்றால் நமக்கும் பிரயோஜனம் இல்லை, வேத ரிஷிகளுக்கும் பிரயோஜனம் இல்லை! வேத ரிஷிகளுக்கு நவீன விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவர்கள் பெற்றிருந்த அறிவின் அளவே அவர்களுக்குப் பெருமை சேர்க்கவல்லது தான்.


No comments:

Post a Comment