Monday, May 5, 2014

காலிங் பெல்


கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை. இதற்கு முன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க இரவு எட்டு மணிக்கு மேல் போய்த் திண்ணை விளிம்பில் கால் முட்டி உரசப் படிக்கட்டில் நின்று எங்கெங்கோ துழாவி விட்டுக் கடைசியில் அது அகப்படாமல் அவன் திரும்பி வந்ததுண்டு.

கிருஷ்ணமூர்த்தியின் போர்ஷன் மூன்று கட்டுகளைத் தாண்டி, அந்த நீட்டுவாக்கு வீட்டின் கோடியில் ஏறக்குறைய அடுத்த தெருவை நெருடுகிற எல்லையில் இருந்ததால் அழைப்பு மணி அவசியமாய் இருந்தது. அதற்கப்புறம் ஒரு நாள் பகலில் போயிருந்த போது இவனுக்குக் கிருஷ்ணமூர்த்தியே பட்டன் பதித்திருந்த தடத்தை அடையாளம் காட்டி, இனி எப்போது வந்தாலும் நிலைப்படிக் குறட்டின் வலது மூலையில் ஸ்ரீவைஷ்ணவச் சின்னங்களின் சித்திர வேலைப்பாடு சுவரைத் தீண்ட முடியாமல் தடைப்பட்டுத் திணறுகிற அந்தச் சின்ன  இடை வெளியில் சுட்டு விரலை வைத்து அழுத்தச் சொல்லி இருந்தான். 

அதனால் இன்றைக்கு அவனுக்கு அந்தப் பழைய சிரமங்கள் ஏற்படவில்லை. நீலத்தடத்தைச் சரியாய் அனுமானித்து அழுத்திவிட்டுப் படியிலேயே கதவு திறப்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றான். வீட்டுக் கோடியில் அது எழுப்புகிற நாதம் ஒரு மெல்லிய முனகலாகக் கூட வாசற்படியில் வெளிப்படக் காணோம். ஒரு பரம ரகசியம் பாதுகாக்கப் படுகிற மாதிரி அப்படியொரு கொடூர மூடு மந்திரம். விரல்களில் மட்டும் பிளாஸ்டிக்கின் ஸ்பரிசம் இன்னும் அப்படியே இருந்தது. இருட்டில் ரூபமிழந்து போகிற வஸ்துக்களுக்கு இந்த ஸ்பரிசம் மட்டுமே அடையாளம்.

கொஞ்ச நேரம் பொறுத்து யாரோ கதவைத் திறக்கிற சப்தம் கேட்டது. கதவுக்கு இந்தப்புறம் ஆளோடியில் மேற்கூரையின் இறக்கம் ஏராளமாய் நிழலை அள்ளித் தெளித்திருந்ததால் அதன் மத்தியில் நின்று கதவைப் பாதி மட்டும் திறந்து வைத்துக் கொண்டு விசாரிக்கும் பெண்ணின் முகம் இவனுக்குப் புலப்படவில்லை.

அவன் நிலைப்படியைப் பார்த்துக் கொண்டே ‘கிருஷ்ணமூர்த்தி இருக்கானா?’ என்று கேட்டான்.

“இருக்கார், சாப்பிடறார்” என்று சொல்லி விட்டு, அவனுக்கு வழி காட்டுகிற மாதிரி அவள் முன்னே நடந்து போனாள் “வாங்கோ” என்று கூப்பிடாவிட்டாலும் அந்த நடையின் பாவனைக்கு அது தான் சம்பிரதாயமான அர்த்தமாய் இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு அவனும் பின் தொடர்ந்தான். ஒருவேளை அந்நிய புருஷர்களோடு பேச அவளுக்கு அனுமதிக்கப் பட்ட வார்த்தைகள் அவ்வளவாகவே இருக்கலாம்.

மூன்று கட்டுகளையும் ஒரு நாடா போல் பக்கவாட்டில் இணைக்கிற ரேழியில் அந்தந்தக் கூடங்கள் குடித்தது போக மிஞ்சிய வெளிச்சம் அங்கங்கே திட்டுத் திட்டாய் உமிழ்ந்து வைக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு திட்டைக் கடக்கிற போதும் அங்கங்கே முன்னால் போகிற முதுகிலும் அவற்றைப் போலவே விட்டு விட்டு விகசிக்கிற சிவந்த திட்டுகள். அது கிருஷ்ணமூர்த்தியின் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று மனசுக்குள் ஊகித்துக் கொண்டே பின் தொடர்ந்தான். கிருஷ்ணமூர்த்தி இவ்வளவு உயரம் இருப்பானா? நிலைகள் வருகிற போதெல்லாம் இவள் நிறையக் குனிய வேண்டி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி இத்தனைக் குனிய மாட்டான். ‘இவள் கிருஷ்ணமூர்த்தியின் விவகாரத்திலும் இந்த அளவுக்குத் தினம் குனிய வேண்டி இருக்குமே’ என்று அவன் நினைத்துக் கொண்டான். அங்கு குடியிருப்பவர்களுக்கெல்லாம் மொத்தம் மூன்று நிலைப்படிகள் என்றால் அவளுக்கு மட்டும் ஒன்று ‘சர்ப்லஸ்’ என்று நினைத்த போது சிரிப்பு வந்தது.

கடைசிப் போர்ஷன் வந்ததும் அவள் சமையலறைக்குள் புகுந்து மறைந்து போனாள். கிருஷ்ணமூர்த்தி சமையலறையிலிருந்து வெளிப்படுவதற்குப் பிடித்த சில நிகிஷங்களில் அவன் கூடத்தில் இருந்த ஈசிசேரில் உட்கார்ந்தபடியே சுவரில் தொங்கும் புகைப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். எதிர்ச் சுவரில் அப்போது தான் ஃப்ரேம் போட்ட மாதிரித் தொங்கிய அந்த போட்டோவில் மாலையும் கழுத்துமாய் ஒரு ஜோடி நிற்பது தெரிந்தது. உத்தரத்திலிருந்து தொங்கும் கூடத்து விளக்கின் பீங்கான் ஷேடிலிருந்து அரை வட்டமாய் ஒரு நிழல் கிளம்பிப் போய் அந்தப் படத்தின் மேல் பாதியில் இலக்காய்க் குவிந்திருக்கவே, நிற்கிறவர்களின் முகம் சரியாகத் தெரியவில்லை. அது கிருஷ்ணமூர்த்தியும் அவன் மனைவியுமாய்த் தான் இருக்க வேண்டும் என்று இவனாய் அனுமானித்துக் கொண்டான். எழுந்து போய்ப் பக்கத்தில் நின்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதம் பண்ணிக் கொள்ள ஆசையாய் இருந்தது. ஆனால் ஷேடின் நிழலை விடப் போலி நாகரிகங்களின் நிழல் இன்னும் பெரிதாய் நிஜங்களைக் கவ்வி மூடிக் கொள்ளவே உடம்பு ஈஸிசேரில் அழுத்தமாய் ஒட்டிக் கொண்டது/.

கிருஷ்ணமூர்த்தி டர்க்கி டவலில் உள்ளங்கையைத் தேய்த்தபடியே கூடத்துக்கு வந்தான். “ஒன் மேல நான் ரொம்பக் கோபமா இருக்கேன்” என்றான். ஈஸிசேரில் இருந்த நிலையியிலேயே இவன் ஒரு புன்சிரிப்போடு கையை நீட்டிக் கொண்டு, “ஐ ஆம் ஸாரி” என்றான். “எனக்குக் கல்யாணம் நடந்ததுக்கா சொல்றே?” என்று கிருஷ்ணமூர்த்தி இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான். வந்தவன் சங்கடங்களோடு சிரித்தான்.

“மேரேஜூக்கு வரமுடியாமப் போயிடுத்து. இன் பாக்ட், அன்னிக்குத் தஞ்சாவூர்லே ஒரு முக்கியமான ஸ்டாப் மீட்டிங். கிரீட்டிங்க்ஸ் டெலிக்ராம் கொடுக்கக் கூட ஒழியல. மறுநாள் லெட்டர் போட்டிருந்தேனே, வந்துதோ?”

“நத்திங், நீ ஒரேயடியா மறந்துட்டேன்னே நான் முடிவு பண்ணிட்டேன்”

கிருஷ்ணமூர்த்தி உள்புறம் திரும்பி “பானு” என்று குரல் கொடுத்தான். 

“ஒரு தட்டுல பட்சணம் எடுத்துண்டு வா...”

“ஐ ஆம் சாரி, கிருஷ்ணமூர்த்தி. ஆத்துல இப்பத்தான் ஹெவியா சாப்பிட்டேன். சும்மா ஒன்னப் பார்த்துக் கல்யாணம் விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“இதுக்கும் சாரியா? அதுக்குள்ள ரெண்டு சாரி சொல்லிட்டே. நீ துக்கம் விசாரிக்க வந்த மாதிரி இருக்கு!”

“ஐ ஆம்...” அவன் பல்லைக் கடித்துக் கொண்டான். விளக்கின் ஷேடை ஒரு பல்லி அசைத்து ஆட்டி விட்டதில் இப்போது நிழல் எதிர்ச் சுவற்றுப் புகைப்படம் முழுசையுமே பீடித்துக் கவிந்து கொண்டது.

“நீ லெட்டர் போட்டதாவா சொல்றே?” என்று கிருஷ்ணமூர்த்தி அவனிடம் மறுபடியும் கேட்டுக் கொண்டே சமையலறைப் பக்கம் அவள் வருகிறாளா என்று பார்த்தான்.

“சர்ட்டன்லி. ஆனா அட்ரஸ் தான் தப்பாப் போட்டுட்ட மாதிரி ஒரு பீலிங். வேலைக் குழப்பம். ஆபீசுல ஒரு ட்ரான்ஸ்பர் விஷயமா ஏகப்பட்ட தகராறு.”

புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொய்களைப் பற்றி அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிப் படிப்பு வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை என்று சில பேர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

புடவைச் சரசரப்போடு ஒரு தட்டில் ஸ்வீட் வகையறாக்கள் அவனுக்கெதிரில் ஒரு ஸ்டூலின் மீது பிரத்தியட்சமாயின. நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டே ‘இதெல்லாம் என்னத்துக்கு?’ என்று கேட்டு விட்டு மைசூர் பாகில் விரல்களைப் பதித்தான். ஒரு கையால் விள்ள முடியாது போல் தோன்றவே இரண்டு கைகளையும் உபயோகித்து அதைப் பிளந்தான். அவன் படுகிற சிரமங்களைக் கவனித்து “சும்மாப் பல்லால கடிச்சு சாப்பிடு” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

மறுபடியும் புடவைச் சரசரப்பும் குப்பென்று ஓர் அடையாளம் புரியாத பவுடர் வாசனையும் சமீபித்தன. என்ன பவுடர் அது? ‘குடிக்கூரா’வாக இருக்குமோ? கிருஷ்ணமூர்த்தி கஞ்சன். அவ்வளவு விலை கொடுத்துப் பவுடர் வாங்க மாட்டான்.

ஸ்டூலின் விளிம்பில் இப்போது ஓர் எவர்சில்வர் செம்பு நிறையத் தண்ணீரும் பக்கத்தில் ஒரு டம்ளரும் தோன்றின. டம்ளரின் முலாம் ஏறிய வெளிப்பரப்பில் ஒரு கையின் சிவப்பு ஜிவு ஜிவு என்று குவிந்து கவிவதைக் கவனித்துக் கொண்டே அவன் ரவாலாடை உதிர்த்தான். அவன் பிரயோகித்த அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்தில் தட்டு முழுவதும் மாவு வெள்ளைச் சிதறல்கலாகப் பரவி மற்ற பட்சணங்களை எல்லாம் நிறமிழக்கச் செய்து விட்டு, ஸ்டூல் பரப்பிலும் தெறிக்கவே,  தான் அத்தனை வேகப்பட்டிருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்.

அவன் சாப்பிடுகிற போது கிருஷ்ணமூர்த்தி நிறையப் பேசிக் கொண்டிருந்தான். தன் ஆபீஸ் விவகாரங்களைப் பற்றிச் சொன்னான். ஒரு மாதம் லீவு எடுப்பதற்கு எத்தனை சிரமப்பட வேண்டியிருந்தது என்று பெரிதாய்க் குறைப்பட்டுக் கொண்டான். யூனியன் செக்ரட்டரியிடம் தனக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதென்பதை ரொம்பவும் விஸ்தாரமாய் உள்ளே இருக்கிற அவளும் கேட்கட்டும் என்கிற மாதிரியான குரலில் இரைந்து சொன்னான். இவன் தனது அலுப்புகளை பட்சணங்களில் கரைத்துக் கொண்டு மௌனமாய் இருந்தான்.

மையல் கட்டைக் கூடத்திலிருந்து பிரிக்கிற நிலை வாயிலில் ஒரு ஸாட்டின் ஸ்க்ரீன் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதியில் திட்டுத் திட்டாய் எண்ணைக் கரை படிந்திருக்கவே, “சமையல் அறையில் இருக்கிறவள் அவ்வப்போது வந்து அதில் தன் கைகளைத் துடைப்பவளாக இருக்க வேண்டும்’ என்று அவன் தண்ணீர் குடித்துக் கொண்டே நினைத்தான். தூக்கி, உதட்டில் யார் படாமலும் தண்ணீர்  அருந்துவதில் நிறையச் சௌகரியங்கள் இருக்கின்றன. எந்தப் பீடிகையும் தயக்கமும் இன்றி அறிமுகங்களுக்குக் காத்திராமல் எதிரில் நிற்கிற யார் முகத்தையும் தீர்க்கமாய்ப் பார்க்கலாம். அவர்களுக்கும் தாங்கள் பார்க்கப் படுகிற பிரக்ஞை இருக்காது...

தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்பட்டவுடனேயே குடித்திருக்கலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான். இப்போது அவனையும் கிருஷ்ணமூர்த்தியையும் தவிர்த்துக் கூடத்தில் வேறு யாரும் இல்லை. 

கிருஷ்ணமூர்த்தியிடம் வளரும் உலகின் அடிப்படையான நாகரிக பிரக்ஞைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டதாய் அவன் மனசுக்குள் குறைப்பட்டான். இவனைக் கட்டிக் கொண்டு இந்த நாலாவது கட்டு இருட்டுக் குகையில் இனி வாழ்க்கை முழுவதும் சிறை இருக்கப் போகிற ஆத்மாவை நினைக்கிற போது அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. சமையல் பண்ணுகிற நேரம் போக, பாக்கி நேரம் முழுவதும் ஒரு காலிங் பெல் சமிக்ஞைக்காகக் காத்துக் கொண்டு அந்தக் கூண்டுக்குள் கால காலத்துக்கும் செய்ய வேண்டிய வனவாசம். வன வாசம் கூட இல்லை. அக்ஞாத வாசம். மிஞ்சி மிஞ்சிப் போனால் முன் கட்டுப் பெண்களுடன் கோவிலுக்குப் போகலாம்; காமிரா அறையில் தோளை நன்றாய்ப் போர்த்திக்கொண்டு  மாமியாரோடு பல்லாங்குழி ஆடலாம்; மத்யானம் வெறும் தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தூக்கம் வருகிற வரை ஆனந்த விகடனிலும் குமுதத்திலும் தொடர்கதை படிக்கலாம். அப்புறம்- கிருஷ்ணமூர்த்தி வந்து விடுவான். அப்பா அண்ணன் தம்பிகளுக்குப் பின் அவளோடு அனுமதிக்கப் பட்டிருக்கிற ஒரே ஆண் பிள்ளை.

“ஆல்பம் பாக்கறியா?” என்று கேட்டுக் கொண்டே கிருஷ்ணமூர்த்தி உள்ளே போனான். வந்தவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் நேர்ந்தாற் போல் இருந்தது. அவன் வேறு புறம் திரும்பி நோக்கினான். ஜன்னலும், ஒரு சின்ன அறையும், அறைச்சுவரை ஒட்டின மாதிரி ஒரு கட்டிலும் கட்டிலின் மேல் மேலுறை கழற்றப்பட்டு சிவப்பாய் ஸாட்டின் உள் உடம்பு தோன்ற ஒரு மெத்தையும் தெரிந்தன. இது தான் சாந்தி முகூர்த்தத்திற்கு வாங்கினதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது.  ஆனால் உள்ளே அவள் இருக்கிற போது தான் அதைக் கேட்பது நாகரிகமில்லை என்று எண்ணிப் பேசாமலிருந்து விட்டான்.

மேலுறையை சலவைக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குள்ளாகவா அத்தனை அழுக்காய் அடித்து விட்டார்கள்? அவனுக்குக் குறும்புத் தனமாய்ச் சிரிப்பு வந்தது. அவன் சோம்பல் முறிக்கிற மாதிரி ஈஸிசேரிலிருந்து எழுந்திருந்து, நின்று கொண்டு கவனித்த போது இன்னொரு மெத்தை தரையில் சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. ஆனால் அது ஏன் தரைக்குப் போனது என்று தான் புரியவில்லை. ஒரு வேளை அவர்களுக்குள் பிணக்கு ஏதாவது நேர்ந்திருக்க வேண்டும், தமிழ் சினிமாவில் வருகிற ஊடல் காட்சிகள் மாதிரி..

கிருஷ்ணமூர்த்தி திரும்பி வந்தான். “ஐ ஆம் சாரி.. ஆல்பத்தை எதுத்தாத்துல கொடுத்திருக்கு. இன்னொரு நாள் சாவகாசமாக் காட்டறேன்” என்றான்.

“இப்போ நீயும் சாரி சொல்லிட்டே” என்று இவன் சொல்லி பலமாய்ச் சிரித்தான். உடனே, உள்ளே அவள் இருக்கிற போது தான் அப்படிச் சிரித்திருக்கக் கூடாது என்று நினைத்து வெட்கப் பட்டுக் கொண்டான்.

அவன் புறப்படும் போது எதையோ தேடுகிற மாதிரி அண்ணாந்து சுற்று முற்றும் பார்த்து விட்டு “காலிங் பெல்லை எங்க ஃபிக்ஸ் பண்ணி இருக்கே?” என்று கேட்டான்.

“சமையல் ரூமில். அங்க இருந்தாத் தான் சௌகரியமா இருக்கும்” என்று கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பதில் வந்தது.

ந்த தடவை கிருஷ்ணமூர்த்தியே அவனை வாசல் வரை வந்து வழியனுப்பினான். நிலைப்படியருகே நின்று கொண்டு “அடிக்கடி வந்து போயிண்டிரு” என்றான்.

அவன் என்னமோ நினைத்துக் கொண்டு “இந்த ரேழிக்கும் வாசலுக்கும் ஒரு பல்பைப் போடச் சொல்லேன். எதுவுமே அடையாளம் தெரியல” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கினான். “அப்படியே உங்காத்துக் கூடத்து பல்புலேருந்து ஷேடையும் கழட்டி வச்சுடு. சொவரெல்லாம் பாதிக்கு மேல மறைக்கறது”

கிருஷ்ணமூர்த்தி ‘குட் நைட். சொல்லிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு உள்ளே போன பின்னும் அவன் ஏனோ சில வினாடிகள் படிகளிலேயே தாமதித்தான். இப்போதும் கூட, இருட்டில் காலிங் பெல்லின் பட்டன் இருக்கிற தடம் அவனுக்குத் தெரியவில்லை. அருகில் போய்க் கையால் துழாவி மறுபடியும் அதைக் கண்டு பிடித்து அழுத்தி சமிக்ஞை செய்யலாம் போலிருந்தது. ஆனால், கிருஷ்ணமூர்த்தி இன்னும் ஒரு கட்டுக் கூடத் தாண்டி இருக்க மாட்டான். அவனே திரும்பவும் வந்து கதவைத் திறந்து, “ஏய், வாட் ஹேப்பன்ட்? கர்ச்சீப் கிர்ச்சீப் ஏதாவது கூடத்துலேயே வச்சுட்டு வந்துட்டியா?” என்று கேட்பான்.

அவன் எதிலோ அதிருப்தியும் யாரிடமோ அனுதாபமுமாய், தெருவில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.


-'சுவடு', மே,1978

No comments:

Post a Comment