Tuesday, September 17, 2013

பெரியார் பிறந்த நாளில், பெரியார் பற்றிய ஒரு பார்வை


ருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் பெரியாரின் பிரவேசமும், பிரசாரமும் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் அவசியப்பட்ட 'காலக் கட்டாயங்'களாகவே இருந்தன. ஆனால் எல்லா இசங்களைப் போலவே அதுவும் ஒரு காலத்துக்குப் பின் நீர்த்துப் போனது. கால ஓட்டத்தில்,பெரியார் பிரசாரம் செய்த கடவுள் மறுப்புக் கொள்கை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற விஷயங்கள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அல்லது முற்றிலுமாக மறக்கப் பட்டு, அவரது 'பிராமண எதிர்ப்பு' என்கிற ஒரு விஷயம் மட்டும் 'பிராமணத் துவேஷ'மாக சமூகத்தில் ஒரு நோய் போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது. இது ஒரு துரதிர்ஷ்டம் தான். 

சமூகத்தின் ஆழ் மனதில் காலம் காலமாகப் புதைந்திருந்து, வெளியே வெடிப்பதற்கான தயார் நிலையில் இருந்த பிராமண எதிர்ப்பு உணர்வு பெரியாரின் பிரவேசத்தில் ஒரு வடிகாலை உணர்ந்திருக்க வேண்டும். ஒருவேளை பெரியார் பிராமண எதிர்ப்பு என்கிற கவசத்தை அணியாமல் இருந்திருந்தால் அவரால் 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்று பொது மேடைகளில் தைரியமாகப் பேசி இருக்க முடியமா என்பது சந்தேகமே. பெரியாரின் பிராமண எதிர்ப்பு, பிராமணர்களைப் போலவே அப்போது சமூகத்தில் அதிகாரம் செலுத்தி வந்த பிற 'மேல் ஜாதி' இந்துக்களைத் தனியே அடையாளம் காட்டாமல் விட்டு விடவே, பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று சமூகம் polarize ஆகிப் போனது. அப்படி ஒரு முகமாய்க் குவிந்த சமூகத் தளத்தில், பிற ஆதிக்க முகங்கள் 'பிராமணர் அல்லாதார்' என்ற ஒரு சௌகரியமான போர்வைக்குள் போய் ஒளிந்து கொண்டன. சமூகத்தின் சகல தீமைகளுக்கும் ஒட்டு மொத்தக் காரணிகளாக பிரமாணர்கள் மட்டும் தனிமைப் படுத்தப் படுவதிலேயே பரிதாபமாக இது முடிந்தது. 

இன்றைக்கு பிராமணர்கள் தங்கள் அனைத்து அதிகார மையங்களையும் பழைய சமூக அகங்காரங்களையும் ஒரு சேர விட்டு விட்டவர்களாய், தங்கள் அடையாளங்களை இழந்துப் பொது நீரோட்டத்தில் கரைந்து விட்டனர். ஆனால், அதே சமயம் புதிய அதிகார மையங்கள் வேறு திசைகளிலிருந்து முளைக்கத் தொடங்கி விட்டன. 

அதனால், இந்தக் காலத்துக்கொவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை அவரது தொண்டர்கள் புறந்தள்ளி விட்டு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பெண் சமத்துவம் போன்ற தளங்களில் பெரியார் விட்டுச் சென்ற மேன்மையான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்போதைக்குப் பெரியாரைச் சரியான முறையில் மீட்டெடுத்து, அவரது பன்முக மேதைமையை இன்றைய இளைஞர்கள் முன் வைப்பதே, அவருக்கு  நாம் செய்யும் மெய்யான அஞ்சலி.

No comments:

Post a Comment